இந்தியாவில் உற்பத்தி விரிவாக்கத்
திட்டங்களை கைவிட டொயோட்டா நிறுவனம் முடிவுசெய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை
ஊக்குவிப்பதற்காக ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தை பிரதமர் மோடி உருவாக்கி அந்நிய
முதலீட்டாளர்களை ஈர்க்க அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், ஜிஎஸ்டி
நெருக்கடியால் இந்தியாவில் உற்பத்தி விரிவாக்கத் திட்டங்களை கைவிட டொயோட்டா
நிறுவனம் முடிவுசெய்துள்ளது. இதுகுறித்து டொயோட்டா நிறுவனத்தின் துணைத் தலைவர்
சேகர் விஸ்வநாதன் ப்ளூம்பர்க் ஊடகத்திடம் பேசியபோது, கார்கள் மற்றும் இருசக்கர
வாகனங்கள் மீது அரசு விதிக்கும் அதிக ஜிஎஸ்டி வரியால் தொழிலை விரிவாக்கம்
செய்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலகளவில் மக்களின் நம்பிக்கையை பெற்ற முன்னணி கார் நிறுவனமாக டொயோட்டா இயங்கி
வருகிறது. இந்நிறுவனத்தின் கார்களுக்கு இந்தியாவிலும் வெகுவான வரவேற்பு
இருக்கிறது. இந்தியாவில் டொயோட்டா
கிர்லோஸ்கார் என்ற பெயரில் இயங்கி வரும் இந்நிறுவனத்தில் டொயோட்டாவுக்கு 89%
பங்கு இருக்கிறது.
இந்திய சந்தையில் ஆகஸ்ட் மாதம் டொயோட்டாவுக்கு 5% பங்கு இருந்தது. ஆனால் தற்போது
2.6% பங்கு மட்டுமே இருக்கிறது. இதற்கு வாகனங்கள் மீதான அதீத ஜிஎஸ்டி வரியே
காரணம். இதனால் வாகன விற்பனை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கொரோனா
நெருக்கடியில் இருக்கும் கார் நிறுவனங்களை ஜிஎஸ்டி மேலும் வாட்டி வதைக்கிறது.
நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களுக்கும் ஜிஎஸ்டி பெரும்
தலைவலிதான். ஜிஎஸ்டியால் வாகனங்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. இதன்
விளைவாக, ஏற்கெனவே கொரோனா நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களால் வாகனம்
வாங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
தற்போது இந்தியாவில் வாகனங்களுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதில்
ஸ்கூட்டர் போன்ற இருசக்கர வாகனங்களும் அடக்கம். ஆனால் 28% என்ற ஜிஎஸ்டி விகிதம்
சொகுசுப் பொருட்களுக்கும், பாவப் பொருட்களுக்கு மட்டுமே விதிக்க வேண்டும்.
ஸ்கூட்டர்களும், இருசக்கர வாகனங்களும் சொகுசுப் பொருளா என்பதே நிறுவனங்கள் மற்றும்
பொதுமக்களின் கேள்வி.
இதுபோன்ற அதீத ஜிஎஸ்டி வரியால் அந்நிய முதலீடுகள் குறைவது மட்டுமல்லாமல் புதிய
தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதும் குறையும் என்கிறார் சேகர் விஸ்வநாதன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக