Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 24 அக்டோபர், 2020

மகாகாளநாதர் கோவில் - திருமாகாளம்

 Mahakalanathar Temple Ambar Maakaalam,Thirumakalam Mahakalanathar Temple,திருமாகாளம்  மகாகாளநாதர் கோயில்,மாகாளநாதர் கோவில், அம்பர் மாகாளம்,ஈசனை தேடி எனது  பயணங்கள் ...


இறைவர் திருப்பெயர் : மகாகாளநாதர், மாகாளேசுவரர், காளகண்டேசுவரர்,
இறைவியார் திருப்பெயர் :பக்ஷயாம்பிகை, ராஜமாதங்கி்,
தல மரம் : கருங்காலி மரம் , மருதமரம்,
தீர்த்தம் : மாகாள தீர்த்தம்
வழிபட்டோர் :அம்பன், அம்பாசுரன்,
தேவாரப் பாடல்கள் :திருஞானசம்பந்தர்,

தல வரலாறு:

இத்தல இறைவன் கிழக்கு நோக்கிய சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.

சோமாசிமாற நாயனார் சோமயாகஞ் செய்த தலம்.

அம்பன் , அம்பாசூரன் அசுரர்களைக் கொன்ற பாவந்தீர காளி சிவலிங்கம் அமைத்து வழிபட்ட தலம் , வெளிப்பிரகாரத்தில் காளியம்மன் கோயில் உள்ளது.

அஷ்ட நாகங்களில் ஒன்றான வாசுகி என்ற நாகத்தின் பிரம்மஹத்தி தோ‌ஷம் நீங்கிய தலம் இதுவாகும்.

5 நிலை கோபுர வாயில் வழியஇத்தலம் கோயில் திருமாகாளம் என வழங்கும். அம்பன், அம்பாசூரன் இருவரையும் கொன்ற காளி பாவந்தீர இறைவனை இத்தலத்துப் பூசை செய்தாள். மாகாளரிஷியும் பூசித்த தலம். காளிகோயில் தெற்குப் பிரகாரத்தில் உள்ளது. வைகாசி மாதத்தில் சோமாசிமாறர் யாக உற்சவம் நடைபெறும். சிறிய உருவமுடைய பாணலிங்கம். குவளை சாத்தப்பட்டுள்ளது.

மதங்கரிஷி என்பவர் குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு பிரார்த்தனை செய்தார். அவருக்கு "ராஜமாதங்கி' என்ற குழந்தை பிறந்தது. குழந்தை பெரியவளானதும், இறைவன் தோன்றி, ""வேண்டும் வரம் கேள் என்றார்''. அதற்கு அவள்,""நான் தங்களுடன் தினமும் திருமண கோலத்தில் இத்தலத்தில் இருக்க விரும்புகிறேன்,''என்றாள். திருமண தடையுள்ளவர்கள் அம்மனுக்கு
  இரண்டு அரளி மாலை சாத்தி அதில் ஒன்றை தங்கள் கழுத்தில் அணிந்து கொள்கிறார்கள்.

மாகாளம் என்ற பெயர் பெற்ற சிவஸ்தலங்கள் இந்தியாவில் மூன்று இடங்களில் இருக்கின்றன. அவை வட இந்தியாவிலுள்ள உஜ்ஜயனி மாகாளம், தொண்டை நாட்டுத் தலமான இரும்பை மாகாளம், மற்றும் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான அம்பர் மாகாளம் என்ற இத்தலம்.

63 நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமார் நாயனார் நடத்திய யாகத்திறகு இறைவனும் இறைவியும் நேரில் வந்த தலம் இதுவாகும். சோமாசியார் தான் நடத்தும் யாகத்திற்கு இறைவனை அழைத்து வரும்படி சுந்தரரிடம் வேண்டினார். சுந்தரரும் அதற்கு சம்மதித்து இறைவனிடம் வேண்ட, இறைவனும், வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடக்கும் யாகத்திற்கு வருவதாக வாக்களித்தார். இறைவனே நேரடியாக வருவதால் நாட்டில் பல பகுதியிலிருந்தும் வேத விற்பன்னர்கள், முனிவர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் சூழ யாகம் சிறப்பாக நடந்தது. சோமாசிமாற நாயனார் விரும்பியபடி, அவர் நடத்தும் சோமயாகத்திற்கு இறைவன் நேரில் எழுந்தருளினார். ஆனால் பறையன் உருவில் எழுந்தருளுகிறார். நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாகப் பிடித்துக் கொண்டு தம்பட்டம், மதுக்குடம், மாட்டு இறைச்சி ஆகியவற்றை சுமந்து கொண்டு யாகத்திற்கு எழுந்தருளுகிறார். யாகத்தை நடத்திவந்த அந்தணர்கள், பறையன் வந்ததால் யாகம் கெட்டுவிட்டது என்று கூறி ஓடி விடுகின்றனர். தந்தை தான் இவ்வாறு வருகிறார் என்பதை சோமாசிமாற நாயனாருக்கு விநாயகர் குறிப்பாக உணர்த்தி அச்சத்தைப் போக்கினார். ஆகையால் சோமாசிமாள நாயனார் வந்திருப்பது இறைவன் எனத் தெரிந்து, தனது மனைவியுடன் பறைத் தமபதிகளை எதிர்கொண்டு வரவேற்று அவிர்பாகம் கொடுக்கிறார்கள். இறைவனும் தனது பறையன் உருவைக் களைந்து ரிஷப வாகனத்தில் சோமாசிமாற நாயனாருக்கும் அவர் மனைவிக்கும் காட்சி கொடுத்து அருளினார். மறுநாள் மகநாளில் அவரைக் கண்டு பயந்து யாகத்திலிருந்து ஓடியவர்களுக்கெல்லாம் காட்சி கொடுத்தருளினார். சோமாசிமாள நாயனாருக்கு இறைவன் வந்திருப்பதைக் குறிப்பால் உணர்த்திய அவ்விநாயகரை அச்சந்தீர்த்த விநாயகர் என்றழைக்கின்றனர்.

வைகாசி ஆயில்ய நட்சத்திரத்தில் சோமயாகப்பெருவிழா நடக்கிறது. இந்த விழாவில் காலில் செருப்பு, கையில் மத்தளம், அருகில் மதுக்குடம் ஏந்திய பார்வதியுடன் சிவன் அருள்பாலிப்பது சிறப்பு. திருவாரூரில் இருந்து தியாகராஜர் இவ்விழவிற்கு எழுந்தருள்வதால் அன்.றைய தினம் திருவாரூரில் தியாகராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் கிடையாது.புலத்தியர் மரபில் வந்த சம்சாரசீலன் என்பவனிடம் தோற்று தேவேந்திரன் இத்தல இறைவனிடம் அடைக்கலம் அடைந்தான். சுவாமி பைரவ திருக்கோலம் தாங்கி சம்சாரசீலனைக் கொன்று சட்டைநாதராக எழுந்தருளி தேவேந்திரனை மீண்டும் அமராவதிக்கு அதிபதியாக்கினார். அதனால் இத்தலத்திற்கு இந்திரபுரி என்ற பெயரும் ஏற்பட்டது. சட்டைநாதருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது.

மன்மதன் தேவர்களால் ஏவப்பட்டு, விசுவாமித்தர முனிவரின் தவத்தைக் குலைக்க அவர்மீது மலர்க்கணைகளைத் தொடுத்தான். அதனால் சினம் கொண்ட முனிவர் இந்திரனை சபிக்க, அவன் மாகாளநாதரை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றான். அதன் காரணமாக இத்தலம் மாரபுரி என்ற பெயரைப் பெற்றது.அஷ்டநாகங்களில் ஒன்றாகிய வாசுகி என்ற் நாகம் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்ள இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு தனது தோஷம் நீங்கப் பெற்றது. நாகதோஷம், புத்திரதோஷம், திருமணத்தடை உள்ளவர்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இராகு காலத்தில் வாசுகிக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் நற்பலன்கள் அடையலாம்.

அம்பர் பெருந்திருக்கோவில், அம்பர் மாகாளம் என்ற இரண்டு கோவில்களுக்கும் இடையில் சாலையோரமாக சோமாசிமார் நாயனார் செய்த யாககுண்டம் உள்ளது. ஆண்டு தோறும் வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரம் அன்று இங்கு யாக உற்சவம் நடைபெறும். இத்தலத்தில் மாகாள முனிவர், காளி ஆகியோர் இறைவன் மாகாளநாதரை வழிபட்டுள்ளனர். இறைவன் சோழ மன்னன் ஒருவனுக்கு தனது மனக்கோலத்தைக் காட்டியருளிய தலம். அம்பாள் அம்பரனை வதம் செய்ததும் இத்தலத்தில் தான். புன்னை மரம் தலவிருட்சமாகும். இறைவன், இறைவி பறையர் உருவத்தில் செப்புச் சிலை வடிவில் இக்கோவிலில் உள்ளனர். சோமாசிமார் நாயனார், அவர் மனைவி ஆகியோரின் உருவச் சிலைகளும் இக்கோவிலில் உள்ளன. ஆலயம் ஒரு கட்டுமலை மேல் அமைந்துள்ளது. சோழ மன்னன் கோச்செங்கட் சோழன் கட்டிய ஆலயங்களில் இதுவும் ஒன்று.


இந்த ஆலயத்தில் பத்திரகாளி அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். இவர் தொழில் அபிவிருத்தி, திருமண வரம், கல்விச் செல்வம் உள்ளிட்ட பல்வேறு வரங்களை வாரி வழங்குபவள். இந்த அன்னையை செவ்வாய்க்கிழமை, பவுர்ணமி, அமாவாசை, தேய்பிறை அஷ்டமி போன்ற நாட்களில் எலுமிச்சைப் பழ மாலை மற்றும் சிவப்பு அரளிப்பூ மாலை சூட்டி வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதால் நினைத்த காரியம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் - ஐந்து நிலைகள். உள்ளே விசாலமான இடைவெளி. வலப்புறம் அலங்கார மண்டபம். இடப்புறம் மருதப்பர் சந்நிதி. பிராகாரத்தில் மோக்ஷலிங்கம், காளிகோயில் சிவலோக நாதர் சந்நிதி, யாகசால முதலியன உள்ளன. இரண்டாவது கோபுரம் அதிகார நந்தி கோபுரம் என்றழைக்கப்படுகிறது.

உள்ளே சென்றால் பிராகரத்தில் வன்மீகநாதர், சோமாசியார், அவர் மனைவி சுசீலை, அறுபத்துமூவர், விநாயகர், சுப்பிரமணியர், மேலே உயரத்தில் சட்டநாதர் சந்நிதி, மகாலட்சுமி, ஈசான ஜ்வரஹரலிங்கங்கள், நவக்கிரகம், நடராச மண்டபம், சனீஸ்வரர், பைரவர், தண்டபாணி முதலிய சந்நிதிகளைத் தொழலாம். கருவறையில் காளி தன் கையால் பிடித்து வைத்த சிறிய லிங்கத் திருமேனியுடன் இறைவன் சிறிய தோற்றத்தில் எழுந்தருளியுள்ளார்.

 

போன்:  

+91- 4366-291 457, +91- 94427 66818

அமைவிடம் மாநிலம் :


தமிழ் நாடு மயிலாடுதுறை - திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து 25 கி.மி. தொலைவில் பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே அரிசிலாற்றின் கரையில் இத்தலம் அமைந்துள்ளது. பேரளம் என்ற ஊரிலிருந்து சுமார் 7 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. அம்பர் பெருந்திருக்கோவில் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் மாகாளநாதர் கோவிலுக்கு கிழக்கே 1 கி.மி. தொலைவில் உள்ளது.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இத்தல இறைவன் கிழக்கு நோக்கிய சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.

அஷ்ட நாகங்களில் ஒன்றான வாசுகி என்ற நாகத்தின் பிரம்மஹத்தி தோ‌ஷம் நீங்கிய தலம் இதுவாகும்.

காளி தன் கையால் பிடித்து வைத்த சிறிய லிங்கத் திருமேனி.

கோச்செங்கட் சோழன் கட்டிய ஆலயங்களில் இதுவும் ஒன்று.

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக