டெல்லியில் இருந்து லண்டன் செல்லும் பேருந்து சேவையை பயன்படுத்துவதற்கு, 195 நாடுகளை சேர்ந்தவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இன்றைய நவீன உலகில் என்னதான் அதிவேக விமானங்கள் வந்து விட்டாலும், சாலை மார்க்கமாக பல்வேறு நாடுகளுக்கு சென்று, அவற்றின் அழகை ரசிக்க விரும்பும் சுற்றுலா பயணிகள் இருக்கவே செய்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு வரப்பிரசாதமாக, தனியார் சுற்றுலா நிறுவனம் ஒன்று, கடந்த ஆகஸ்ட் மாதம் அமர்க்களமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அந்த சமயத்தில் இந்த அறிவிப்பு தலைப்பு செய்தியாக மாறியது. டெல்லியில் இருந்து லண்டனுக்கு பேருந்து சேவை என்றால் தலைப்பு செய்தியாக மாறாமல் இருக்குமா என்ன? ஹரியானா மாநிலம் குர்கானை சேர்ந்த அட்வென்ஜர்ஸ் ஓவர்லேண்ட் (Adventures Overland) என்ற நிறுவனம்தான் டெல்லியில் இருந்து லண்டனுக்கு பேருந்து சேவையை வழங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகள் வழியே சாலை மார்க்கமாக பயணம் செய்யலாம் என்பதால், பயண ஆர்வலர்கள் மத்தியில் இந்த அறிவிப்பிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 195 நாடுகளை சேர்ந்த பயண ஆர்வலர்கள் பலர் இந்த பேருந்து சேவையில் பங்கேற்க ஆர்வம் தெரிவித்துள்ளதாக அட்வென்ஜர்ஸ் ஓவர்லேண்ட் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இது உண்மையில் மிகப்பெரிய விஷயம்.
தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும்
சரியாக இருந்தால், வரும் மே மாதம் இந்த பேருந்தின் முதல் பயணம் தொடங்கும் என
தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணம் தொடங்கும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை
நடப்பாண்டு இறுதிக்குள் வெளியிடுவதற்கு அட்வென்ஜர் ஓவர்லேண்ட் நிறுவனம்
திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பேருந்து சேவை டெல்லியில் இருந்து தொடங்கும். பின்னர் மியான்மர், தாய்லாந்து, சீனா, கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா, லாத்வியா, போலந்து, செக் குடியரசு, ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வழியாக இங்கிலாந்து தலைநகர் லண்டனை சென்றடையும். ஒட்டுமொத்த பயணமும் நிறைவடைய 70 நாட்களுக்கு மேல் ஆகும்.
டெல்லி-லண்டன் பேருந்து சேவைக்கான வரவேற்பு மகத்தானதாக இருந்தாலும், இருக்கைகளின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவில் மட்டுமே இருக்கும். இந்த பயணத்திற்கான டிக்கெட் விலை 15 லட்ச ரூபாய் என கூறப்படுகிறது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால், முன்பதிவு தொகை 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல நாடுகள் வழியே செல்லக்கூடிய நெடுந்தொலைவு பயணம் என்பதால், இந்த பேருந்தில் பயணிகளின் சௌகரியத்தை உறுதி செய்வதற்காக பல்வேறு அதிநவீன வசதிகள் இடம்பெற்றிருக்கும். டெல்லியில் இருந்து லண்டன் செல்லவுள்ள பயணத்தில், இந்த பேருந்து பயணிக்கும் அனைத்து நாடுகளின் அதிகாரிகளுடனும் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்து வருவதாகவும் அட்வென்ஜர்ஸ் ஓவர்லேண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயண விரும்பிகளுக்கு இந்த பேருந்து பயணம் வாழ்நாளில் மறக்க முடியாத சிறப்பான
அனுபவத்தை வழங்கும் என்பது உறுதி. ஏனெனில் சாலை மார்க்கமாக பல்வேறு நாடுகளை
கடப்பது என்பது உண்மையிலேயே சிறப்பான விஷயம். ஆனால் டிக்கெட் விலை மிகவும் அதிகம்
என்பதால், வசதி படைத்தவர்களால் மட்டுமே இந்த பேருந்து பயணத்தை மேற்கொள்ள முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக