வாடிக்கையாளர்களுக்கு அதிக தேர்வு
வாய்ப்பை வழங்குவதற்காக 28 புதிய மோட்டார்சைக்கிள்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடுத்தர வகை மோட்டார்சைக்கிள்
மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மிக வலுவான வர்த்தகத்தை ராயல்
என்ஃபீல்டு தக்க வைத்து வருகிறது. புதிய போட்டியாளர்கள் வருகையால் சந்தைப் போட்டி
அதிகரித்து வருவதுடன், உலக அளவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்கான
முயற்சிகளில் ராயல் என்ஃபீல்டு தீவிரம் காட்டி வருகிறது.
இதற்காக பல புதிய மாடல்கள் அவசியம்
என்பதை அந்நிறுவனம் உணர்ந்து கொண்டு திட்டங்களை தீட்டி வருகிறது. மேலும், சரவெடி
போல 28 புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை களமிறக்கவும் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சிஇஓ
வினோத் கே தாசரி பேட்டி அளித்துள்ளார். அதில்,"அடுத்த 5 முதல் 7
ஆண்டுகளுக்கான புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கான திட்டத்தை தீட்டி வருகிறோம்.
இதன்படி, 28 புதிய மோட்டார்சைக்கிள்களை களமிறக்க திட்டமிட்டுள்ளோம். இது ஏற்கனவே
உள்ள மாடல்களின் வேரியண்ட்டுகள், புதிய வண்ணத் தேர்வுகளாக மட்டுமின்றி, புதிதாகவே
இருக்கும்.
அடுத்த 7 ஆண்டுகளில் குறைந்தது 28 புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான
திட்டத்தை வைத்துள்ளோம். அதாவது, ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு புதிய
மோட்டார்சைக்கிள் அறிமுகம் என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளோம்.
இந்த புதிய மாடல்கள் அனைத்தும் 250சிசி முதல் 750சிசி வரையிலான ரகத்தில்
நிலைநிறுத்தப்படும். இந்த ரகத்தில்தான் அதிக கவனத்தை செலுத்த இருக்கிறோம். இந்த
ரகத்தில் அனைவருக்கும் சரியான விலையில், உலக அளவில் கொண்டு செல்வதற்கான தரத்துடன்
இந்த புதிய மாடல்கள் இருக்கும்," என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், இந்த புதிய மாடல்களுக்கான முதலீட்டுத் திட்டங்கள் குறித்து அவர்
கருத்து தெரிவிக்கவில்லை. பல நூறு கோடிகள் முதலீடு செய்ய வேண்டி இருக்கும் என்று
பொதுவாக குறிப்பிட்டுள்ளார். அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு போதுமான உற்பத்தி
திறனை பெற்றிருக்கிறோம்.
எனவே, எங்களது புதிய முதலீடு மின்சார மோட்டார்சைக்கிள்கள், புதிய
தொழில்நுட்பங்கள், மின்னணு தொழில்நுட்பங்கள் மற்றும் சர்வதேச அளவிலான வர்த்தகம்
ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தக விரிவாக்கத்தின் ஒருபகுதியாக தாய்லாந்தில் புதிய மோட்டார்சைக்கிள்
அசெம்பிள் செய்யும் ஆலையை திறக்க ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, பிரேசில் நாட்டிலும் புதிய ஆலையை திறப்பதற்கு முடிவு
செய்துள்ளது. இதன்மூலமாக, உலகின் பல்வேறு நாடுகளில் வர்த்தகத்தை விரிவாக்கம்
செய்யவும், தேவையை எளிதில் நிறைவு செய்வதற்கான வாய்ப்பை ராயல் என்ஃபீல்டு பெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக