இந்தியாவில் கால் டாக்சி சேவைகளுக்கான புதிய கட்டுப்பாட்டை போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கால் டாக்சி சேவை நிறுவனங்களுக்கான புதிய கட்டுப்பாடு மற்றும் விதிகளை மத்திய அரசு வெளியிட்டிருக்கின்றது. ஸ்மார்ட்போன் செயலியினை மையமாகக் கொண்டு இயங்கும் கால் டாக்ஸி நிறுவனங்கள் ஒவ்வொரு ரைடுக்கும் 20 சதவீதம் வரை கமிஷனாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஓலா மற்றும் ஊபர் போன்ற கால் டாக்சி சேவை நிறுவனங்களுக்கு பொருந்தும்.
அண்மையில், கால் டாக்சி நிறுவனங்கள் 10 சதவீத கட்டண உயர்வுக்கான அனுமதியைக் கோரியிருந்த நிலையில் இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கட்டணத்தில் திடீரென 10 சதவீத உயர்வு செய்வது மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என துறைச்சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர்.
குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பலர் பொது போக்குவரத்து வாகனங்களைத் தவிர்க்க ஆரம்பித்துள்ளனர். தொடர்ந்து, தனிப்பட்ட வாகனங்களையேப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இம்மாதிரியான சூழ்நிலையில் 10 சதவீத கட்டண உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் கூறப்பட்டது.
மேலும், தனியார் வாகனங்களின் பயன்பாட்டையும் இது அதிகரிக்க செய்யும். இதனால், வாகன நெரிசல் அதிகரித்து, மாசு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இதுபோன்ற பல்வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டு ரைடுக்கான கட்டணத்தில் இருந்து 80 சதவீத தொகை டிரைவர் பார்ட்னர்களுக்கும், மீதமுள்ள 20 சதவீத தொகையை கால் டாக்சி நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், மிகுந்த பிஸியான நேரங்களில் கூடுதலாக வசூலிக்கப்படும் சர்ஜ் கட்டணத்தை
வழக்கமான நேரங்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தைக் காட்டிலும் 1.5 மடங்கு கூடுதலாக
வசூலித்துக் கொள்ளலாம் என்றும் புதிய கட்டுப்பாட்டு விதிகள் கூறுகின்றது.
இதுதவிர தன்னுடைய டிரைவர் பார்ட்னர்களுக்கான உரிய காப்பீட்டை டாக்சி நிறுவனங்களே வழங்க வேண்டும். 12 மணி நேரங்களுக்கு மேல் கூடுதல் நேரம் ஒரே ஓட்டுநர் காரை இயக்கக்கூடாது உள்ளிட்ட சில வழிமுறைகளையும் மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும், தனியார் கார் உரிமையாளர்கள் பூலிங் சேவையின்கீழ் நாள் ஒன்றிற்கு நான்கு உள்ளூர் சவாரியையும், இரு இரண்டு நகரங்களுக்கு இடையேயான சவாரியை வாரம் ஒன்றிற்கும் மேற்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற பல்வேறு புதிய அறிவிப்புகளை நேற்று (வெள்ளிக்கிழமை) மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்டது. சுமார் 23 பக்கங்கள் அடங்கிய அறிவிப்பாணையை அது வெளியிட்டிருந்தது. உலகளாவிய ஊபர் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானத்தில் இந்தியா மட்டுமே 11 சதவீத பங்கினை வகிப்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோன்று, ஓலா நிறுவனத்திற்கும் தனித்துவமான சந்தை இங்கு இருந்து வருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக