
அண்மையில் வெளிவந்த தகவலின்படி, விவசாயிகளிடம் தங்கள் நிறுவனம் குறித்து தவறான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மீது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது.
மிகவும் பிரபலமான ஜியோ நிறுவனம், தனது சக போட்டியாளர்களான ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் மீது டிராய் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளது. அதுவும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இந்த புகார் அமைந்துள்ளது.
அதாவது மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள், தங்களது போராட்டத்தின் ஒரு பகுதியாக அதானி மற்றும் அம்பானி நிறுவனங்களின் பொருட்களை தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக இதையே ஒரு இயக்கமாக முன்னெடுக்க தொடங்கியுள்ளனர்.
எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி இப்போது ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் விவசாயிகளை தங்கள் பக்கம் இழுக்கும் செயல்களில் இறங்கியுள்ளதாக ஜியோ நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது நாட்டின் வடக்கு பகுதிகளில் நடந்து வரும் விவசாயிகள் எதிர்ப்பைப் பயன்படுத்தி எம்.என்.பி போர்ட் இணைப்பு பெற தவறான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் நெறிமுறையற்ற நடைமுறைகள் மற்றும் நேர்மையற்ற மீறல்கள் ஆகியவற்றை செயது வருகின்றன என்றும் தகவல் வெளிவந்துள்ளது.
பின்பு வேளாண் சட்டங்களை எங்கள் நிறுவனம் ஆதரிப்பதாக பரவி வரும் வதந்திகளை நேரடியாகவும் மறைமுகமாகவும், பண நன்மைகளுக்காக ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் தொடர்ந்து ஆதரித்து வருகின்றன. அதுவும் இந்த நிறுவனங்களின் ஊழியர்கள், முகவர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ஜியோ மொபைல் எண்களை தங்கள் நெட்வொர்க்குகளுக்கு மாற்றுவது விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று முன்கூட்டியே கூறுவதன் மூலம் அவர்கள் பொதுமக்களை தூண்டுகிறார்கள். மேலும் இந்த பிரசாரம் வட மாநிலங்களில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பரவி வருகிறது. மகாராஷ்டிரா போன்ற நாட்டின் பிற மாநிலங்களிலும் இதுபோன்ற பிரச்சாரங்கள் உள்ளன எனத் தகவல் வெளிவந்துள்ளது.
இந்த அவதூறு பிரச்சாரங்கள் தொலைத்தொடர்பு விதிகளுக்கு எதிரானது, பின்பு இதுபோன்ற நெறிமுறையற்ற நடைமுறைகள் மற்றும் நேர்மையற்ற மீறல்களுக்காக இந்த நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அத்தகைய பிரச்சாரங்களை உடனடியாக கட்டுப்படுத்தவும் வேண்டும் என ஜியோ நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக