![]()
பாகிஸ்தானில் இந்து கோயில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா
மாகாணத்தில் உள்ள தேரி என்ற கிராமத்தில் 1920ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட இந்துக்
கோயில் இருக்கிறது. இந்த கோயிலானது இரு தினங்களுக்கு முன்னர்
நூற்றுக்கணக்கானவர்களால் சூறையாடப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டது.
இந்த கோயிலை புதுப்பிக்க உள்ளூரைச் சேர்ந்த இந்துக்கள் அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற
நிலையில், கோயிலானது சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அந்நாட்டில் சிறுபான்மை மக்களான
இந்துக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்தியா உள்பட
சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஜேமியாத் உலெமா ஈ-இஸ்லாம் கட்சியின் தூண்டுதலின் பெயரால்தான் இந்த தாக்குதல்
நடைபெற்றதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனிடையே, இந்த தாக்குதலில்
தொடர்புடையவர்கள் அனைவரையும் கைதுசெய்யும்படியும், சேதப்படுத்தப்பட்ட கோயிலை
மீண்டும் கட்டுவதற்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 350 பேர் மீது வழக்கு பதிவு
செய்யப்பட்டுள்ளன. ஜேமியாத் உலெமா ஈ-இஸ்லாம் கட்சி தலைவர் ரெஹ்மத் சலாம் கத்தக்
உள்பட 100 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்து கோயில் தாக்கப்பட்ட விவகாரத்தில் தங்கள் கடமையை செய்ய தவறிய
போலீஸ் அதிகாரிகள் 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிறுபான்மையினரின்
வழிபாட்டு தலங்களை பாதுகாக்க போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என மாகாண போலீஸ் தலைவர்
கே.பி.கே. சனவுல்லா அப்பாசி தெரிவித்த நிலையில், இந்த பனியிடை நீக்கம் சம்பவம்
நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக