இளைஞர் ஒருவர் ஆன்லைன் கிரிக்கெட் விளையாட்டு மூலம் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததோடு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
சென்னையை சேர்ந்த இளைஞர்
சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். 35 வயதான இவர் அதேபகுதியில் சலூன்கடை நடத்திவந்தார். இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியுள்ளது. கொரோனா லாக்டவுன் காலத்தில் இவர் ஆன்லைன் சூதாட்டத்தை தொடங்கியதாக கூறப்படுகிறது. கிரிக்கெட் பெட்டிங்கில் அதிக பணம் செலவிட்டதாகவும் கூறப்படுகிறது.
சுற்றுவட்டாரத்தினரிடம் லட்சக்கணக்கில் கடன்
இந்த நிலையில் இவர் கடந்த ஆண்டாக சுற்றுவட்டாரத்தினரிடம் சுமார் 6 லட்சம் வரை கடன்வாங்கி ஆன்லைன் ரம்மி, கிரிக்கெட் போன்ற சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். லட்சக் கணக்கான பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த தியாகராஜன் கடனை கட்டமுடியாமல் சிரமப்பட்டு வந்தார் என கூறப்படுகிறது. இதையடுத்து தியாகராஜனின் பெற்றோர் வீட்டை விற்று அந்த கடனை கட்ட உதவியுள்ளனர்.
தனியார் நிதி நிறுவனத்திடம் கடன்
அதோடு விட்டுவிடாத தியாகராஜன் ஆன்லைன் சூதாட்டத்தில் விட்டதை பிடிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து ரூ.5 லட்சம் கடன் வாங்கி அதன்மூலம் மீண்டும் சூதாட்டத்தை தொடங்கியிருக்கிறார்.
சூதாட்டத்தில் பறிகொடுத்த தியாகராஜன்
அந்த மொத்த பணத்தையும் சூதாட்டத்தில் பறிகொடுத்த தியாகராஜன், தனியார் நிதி நிறுவனத்திடம் தவணைத் தொகை செலுத்தமுடியாமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார். தனியார் நிதி நிறுவனம் தொடர்ந்து தவணைத் தொகையை கேட்டு தியாகராஜனுக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
பெட்ரோல் ஊற்றி தற்கொலை
செய்வதறியாது திகைத்த தியாகராஜன், தன் பெற்றோர் வீட்டுக்கு சென்று உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த அக்கம்பக்கத்தினர் தியாகராஜனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு தியாகராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக