சுங்க சாவடிகளில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தற்போது அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுங்க சாவடிகளில் உள்ள அனைத்து லேன்களும் பாஸ்டேக் லேன்களாக மாற்றப்பட்டுள்ளன. பாஸ்டேக் மூலம் சுங்க சாவடிகளில் நெரிசல் குறையும் எனவும், வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய தேவை ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அதற்கு நேர் எதிரான விஷயங்கள் தற்போது நடந்து கொண்டுள்ளன. ஆம், சில சுங்க சாவடிகளில் தற்போது வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றன. குறிப்பாக ஒரு சில சுங்க சாவடிகளில் வாகனங்கள் அரை மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் காணப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறுகளே இதற்கு காரணமாக உள்ளன.
இந்த பிரச்னைகளை சரி செய்வதற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முழு மூச்சாக முயற்சி செய்து வருகிறது. அதே நேரத்தில் சுங்க சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்த வாகனங்களை இலவசமாக கடக்க அனுமதிக்கும்படி, டோல்கேட் ஆபரேட்டர்களுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதாவது சுங்க சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றால், கட்டணம் செலுத்தாமல் செல்ல அனுமதி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். அப்படி இலவசமாக கடக்க அனுமதிக்கப்படும்பட்சத்தில், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
புல்ஐ டெக்னாலஜிஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் இந்தியா முழுவதும் 400க்கும் மேற்பட்ட சுங்க சாவடிகளில் போக்குவரத்தை கண்காணித்து வருகிறது. அவர்களிடம் இருந்து பெற்ற தரவுகளின் அடிப்படையில், வியாழக்கிழமை (நேற்று) இரவு 7 மணியளவில், கான்பூர் நகரில் உள்ள அலியாபூர் சுங்க சாவடியில் காத்திருக்கும் நேரம் 27 நிமிடங்களாக இருந்தது தெரியவந்துள்ளது.
இது கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகும். இவ்வளவு நீண்ட நேரம் காத்திருப்பது வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். நாட்டின் மற்ற சுங்க சாவடிகளில் நிலைமை இந்த அளவிற்கு மோசமாக இல்லை என்றாலும், இன்னும் பல்வேறு சுங்க சாவடிகளில் 9-10 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் காணப்படுகிறது.
இதுகுறித்து டோல்கேட் ஆபரேட்டர்கள் சிலர் கூறுகையில், ''தற்போதைய நிலையில் 85-90 சதவீத பரிவர்த்தனைகள் பாஸ்டேக் மூலமாக நடைபெறுகிறது. அதே சமயம் ரொக்கமாகவும் கட்டணம் ஏற்று கொள்ளப்படுகிறது. சில சமயங்களில் பண பரிவர்த்தனைகளும் நெரிசலுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன'' என்றனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், ''பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பணபரிவர்த்தனை நேரம் எடுக்கிறது. அந்த சமயத்தில் குறிப்பிட்ட அந்த லேனில் வாகனங்கள் அணிவகுத்து விடுகின்றன. அதே சமயம் சில சுங்க சாவடிகளில் போக்குவரத்து குறைந்துள்ளது. மக்கள் மாற்று வழிகளை தேர்வு செய்வது இதற்கு காரணமாக இருக்கலாம்'' என்றனர்.
இதுதவிர சுங்க சாவடிகளில் தற்போது பொதுவாகவும் சில பிரச்னைகள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன. RFID டேக்குகளை ரீடர்கள் சரியாக ஸ்கேன் செய்யாமல் போவதால், பூம் பேரியர்கள் திறக்காமல் போவது இதில் முக்கியமான பிரச்னையாக உள்ளது. அதே சமயம் தங்களது கணக்குகள்/வாலெட்களில் போதுமான அளவிற்கு பணம் இருந்தாலும், பேலன்ஸ் இல்லை என காட்டுவதாகவும் சிலர் புகார் தெரிவிக்கின்றனர்.
இவை பொதுவாக ஏற்பட்டு வரும் பிரச்னைகள் மட்டுமே. சுங்க சாவடிகளில் தற்போது இதுபோன்று இன்னும் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த பிரச்னைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெகு விரைவில் சரி செய்யும் என நம்பலாம். இல்லாவிட்டால் சுங்க சாவடிகளில் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக