Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 28 ஏப்ரல், 2021

கொரோனா நோயாளிகளுக்கு பெயர் கூட சொல்லாமல் உதவிய கோவை தம்பதி.!

பொதுமக்கள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்த கொரோனா வைரஸ் ஆனது வாய், மூக்கு என சுவாசத்துடன் நேரடித் தொடர்புடைய உறுப்புகள் வழியாக உள்ளே நுழைந்து நுரையீரலை அடையும்போதுதான் நிமோனியா எனப்படும் நுரையீரல் அழற்சியை ஏற்படுத்தி உயிரழக்கும் நிலை வரை சென்றுவிடுகிறது.

வேகமாக பரவி வருகிறது

கொரோனாவின் முதல் அலை நாடு முழுவதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் 2-வது அலை முதல் அலையை விட பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது. அதிலும் வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது.

குறிப்பாக இந்த கொரோனா முதல் அலையின்போது கொரோனா தொற்று ஏற்பட்டவருக்கு ஐந்து நாட்களுக்குப்பிறகு தொடங்கிய நுரையீரல் பாதிப்புகள், இரண்டாம் அலையின்போது 2 அல்லது 3 நாட்களிலேயே தொடங்கிவிடுவதாக மருத்துவகள் கூறுகின்றனர். மேலும் முதல் அலையில் பரவிய கொரோனா இப்போது உருமாறிய நிலையில் வெவ்வேறு வடிவங்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்து நிபுணர்கள் மக்களை எச்சரித்து வருகின்றனர்.

குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளன. மேலும் நோயாளிகளின் நிலைக்கண்டு பல பொது மக்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை மாவட்டம் நாம் நகர் பகுதியில் வசிக்கும் இளம் தம்பதிகள் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு உதவி செய்ததை மருத்துவமனை டீன், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

அதாவது ராம் நகரில் சிறிய கடை ஒன்று நடத்தி வரும் இந்த தம்பதிகள் நேற்று காலை 11 மணியளவில் சிங்காநல்லூரில் இருக்கும் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். பின்பு அந்த மருத்துவமனை முதல்வர் ரவீந்திரனை சந்தித்து கொரோனா நோயளிகளுக்கு இலவசமாக மின்விசிறிகள் வழங்க உள்ளதாக கூறியுள்ளனர்.

அவர்கள் கொண்டுவந்தது ஒரு சில மின் விசிறிகள் தான் என நினைத்த மருத்துமனை முதல்வர் ஒரு டெம்போ முழுவதும் மின்விசிறிகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் இது குறித்து தம்பதியிடம் கேட்ட மருத்துவமனை முதல்வர், இருவரும் தாங்கள் அணிந்திருந்த தங்க நகைகளை அடமானம் வைத்து 2.5 லட்சம் ரூபாய்க்கு 100 மின்விசிறிகள் வாங்கி வந்திருப்பது தெரியவந்தது.

மேலும் நகை அடமானம் வைத்து மின்விசிறி வாங்கி வந்ததை அறிந்த மருத்துவமனை டீன் வருத்தமடைந்து, சிரமப்பட்டு இவ்வளவு மின்விசிறிகள் வழங்க வேண்டாம். பாதி மின் விசிறிகளை திரும்பக் கொடுத்து உங்களது நகையை மீட்டு கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.

இருந்தபோதிலும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த தம்பதிகள் மின்விசிறிகளை கொரோனா நோயாளிகளின் பயன்பாட்டுக்கே பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். பின்பு மருத்துவமனை டீன் ரவீந்திரன் அவர்கள், கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜனை தொடர்பு கொண்டு இந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியர் நாகராஜன் அவர்களும் மின்விசிறிகளை சிரமத்துக்கு இடையே தரவேண்டாம் என்று கூறியுள்ளார்.

ஆனாலும் தங்களின் முடிவில் விடாப்பிடியாக இருந்த தம்பதிகளால் மருத்துவமனை டீன் மின்விசிறிகளை பெற்றுக் கொண்டார். பின்பு மின்விசிறிகளை வழங்கியதோடு தங்களது பெயர், விபரம் எதுவும் வெளியே சொல்லவேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர் அந்த தம்பதிகள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!