தமிழக ரேஷன் கடைகளில் நியாயமான முறையில், பொருட்களை வழங்கப்படுவதை உறுதி
செய்ய, பயோமெட்ரிக் செயல்முறை கொண்டுவரப்பட்டது. இதன் படி, ரேஷன் கடைகளிக்
பொருட்களை வாங்க, குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் தங்கள் கைரேகையை
பயோமெட்ரிக் இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும்.
பயோமெட்ரிக் முறையில் (Biometric System) பொருட்களை விநியோகம் செய்யும் முறை கொரோனா தொற்றுக்கு முன்னர் இருந்தது. எனினும், கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த செயல்முறை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த செயல்முறையில் தொற்று பரவும் அபாயம் அதிகமாக இருந்ததால், இது தற்காலிகமாக, தொற்று கட்டுக்குள் வரும்வரை கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது கொரோனா தொற்றின் அளவு வெகுவாக குறைந்துள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் (Ration Shops) நாளை முதல் பயோமெட்ரிக் செயல்முறை மீண்டும் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பொருட்டு அரசால் ரூ.4000/- இரு தவணைகளில் ரூ.2000/- வீதம் மே' 21 மற்றும் ஜீன்' 21 மாதங்களில் வழங்க ஆணையிடப்பட்டது.
மேலும் ஜீன்' 21 மாதத்தில் நிவாரணத் தொகை ரூ.2000/-உடன் மளிகைப் பொருட்கள் வழங்கவும் 14 ஆணையிடப்பட்டது. இதனைப் பெற நியாய விலை கடைகளுக்கு குடும்ப அட்டைதாரர்கள் வரும் போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், தாமதமின்றி நிவாரணத் தொகை மற்றும் தொகுப்பு பையினையும் பெற்று செல்ல ஏதுவாக கைவிரல் ரேகை பதிப்பின் நடவடிக்கை நிறுத்தம் செய்யப்பட்டது.
புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த மனுக்கள், அரசால் அறிவிக்கப்பட்ட கொரோனா நிவாரணத் தொகை (Corona Relief Fund) மற்றும் 14 மளிகைப் பொருட்களின் தொகுப்பு வழங்கும் பணிமேற்கொள்ளப்பட்ட நிலையிலும், புதிய மனுக்களை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு கோர வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும், கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக களப்பணியாளர்களால் விசாரணைக்கு செல்ல இயலாத சூழ்நிலை காரணமாகவும், தகுதியான மனுக்களை ஒப்புதல் அளிப்பதற்கான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது நிவாரண உதவித் தொகை 98.59 சதவீதமும் மற்றும் 14 மளிகைப்
பொருட்கள் அடங்கிய தொகுப்பு 93.99 சதவீதம் வரை வழங்கப்பட்டுள்ளது. இம்மாத
இறுதிக்குள் முழுவதுமாக விநியோகம் முடிக்கப்படும் நிலையில் உள்ளதால்,
01.07.2021 முதல் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவை, புதிய
குடும்ப அட்டை அச்சிடும் பணியை மேற்கொள்வதற்கும் மற்றும் கைவிரல் ரேகைப்
படிப்பினையும் மீள செயல்முறைப்படுத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது" என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக