ஏடிஎம் பரிவர்த்தனைகளில் வங்கிகள் வசூலிக்கக்கூடிய பரிமாற்றக் கட்டணத்தை இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் உயர்த்தியது. அதனை தொடர்ந்து அடுத்த மாதம் முதல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வங்கிகள் வசூலிக்கக்கூடிய பரிமாற்றக் கட்டணம் புதிய கட்டண பட்டியலின் படி வசூலிக்கப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பான முழு தகவலை பார்க்கலாம்.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் புதிய கட்டண முறையா?
ATM பரிவர்த்தனை, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயன்பாட்டிற்கு இனி இந்த புதிய கட்டண முறை வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தபடும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் சொந்த வங்கி ஏடிஎம்களில் இருந்து நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் உட்பட மொத்தம் ஐந்து பரிவர்த்தனைகளை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
மீண்டும் அதிகரிக்கும் பரிமாற்றக் கட்டணம்.. புது கட்டணத்தின் விலை இது தான்
நிதி பரிவர்த்தனைகளுக்கான பரிமாற்றக் கட்டணம் தற்பொழுது ரூ.15 ஆக இருக்கிறது. இந்த கட்டணம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டு ரூ. 17 ஆக உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படும் என்று தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தில் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த சேவைக்கான கட்டணம் ரூ. 5 ஆக இருந்தது, தற்பொழுது வெளியான அறிவிப்பின் படி இது இனி ரூ. 6 ஆக வசூலிக்கப்படும்.
எதற்காக இந்த கட்டணம் நம்மிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா?
இந்த புதிய கட்டண விகிதங்கள் ஆகஸ்ட் 1, 2021 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ்
வங்கியின் கூற்றுப்படி, பரிமாற்ற கட்டணம் என்பது கடன் அட்டைகள் அல்லது
டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் வணிகர்களிடம் வங்கிகளால்
வசூலிக்கப்படும் கட்டணமாகும். இந்த கட்டணம் வங்கிகளுக்கும் ஏடிஎம்
நிறுவனங்களுக்கும் இடையிலான சேவையை தடை இல்லாமல் இயக்க முக்கிய பாலமாக
அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. இப்போது தெரிகிறதா எதற்காக இந்த கட்டணம்
நம்மிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது என்று.
ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணத்தை வித்ட்ரா செய்யும் விதியில் என்ன மாற்றங்கள் உள்ளது?
ஒவ்வொரு மாதமும் தங்கள் சொந்த வங்கி ஏடிஎம்களில் இருந்து நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் உட்பட மொத்தமாக ஐந்து இலவச பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் தகுதியுடையவர்கள் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மற்ற வங்கி ஏடிஎம்களில் இருந்து இலவச பரிவர்த்தனைகளுக்கும் அவர்கள் தகுதியுடையவர்கள், இதில் பெருநகரங்களில் மூன்று பரிவர்த்தனைகளும், பெருநகரங்கள் அல்லாத இடங்களில் ஐந்து இலவச பரிவர்த்தனைகளும் இதில் அடங்கும்.
இலவச பரிவர்த்தனைக்கு பின்பு இனி எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும்?
இலவச பரிவர்த்தனைகளுக்கு அப்பால் நடைபெறும் பரிவர்த்தனைக்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட பரிவர்த்தனைக்கான உச்சவரம்பு தற்போது ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.20 என்று வசூலிக்கப்படுகிறது. இது அடுத்த ஆண்டு ஜனவரி 1, 2022 முதல் ரூ.21 ஆக உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலை போல இதுவும் ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக உயர்ந்துகொண்டே வருகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி 1, 2022 முதல் இந்த கட்டணமும் உயரும்
அதிக பரிமாற்றக் கட்டணத்திற்காக வங்கிகளுக்கு ஈடுசெய்ய மற்றும் செலவுகளில் பொதுவான அதிகரிப்பு கொடுக்கப்பட்டால், வாடிக்கையாளர் கட்டணத்தை ஒரு பரிவர்த்தனைக்கு ₹ 21 ஆக அதிகரிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த அதிகரிப்பு ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதிய ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் வித்ட்ரா விதிகள் மற்றும் காசோலை கட்டண விபரங்கள்
ஐசிஐசிஐ வங்கி பண பரிவர்த்தனைகள், ஏடிஎம் வித்ட்ரா மற்றும் காசோலை கட்டணங்கள் ஆகியவற்றின் திருத்தப்பட்ட வரம்புகள் குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் படி, திருத்தப்பட்ட கட்டணங்கள் உள்நாட்டு சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும், சம்பளக் கணக்குகள் வந்திருக்கும் வாடிக்கையாளர்கள் உட்பட அனைவருக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவும், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
SBI பயனர்களுக்கு புதிய கட்டணங்கள் எவ்வளவு? காசோலை பரிவர்த்தனை கட்டணம் எவ்வளவு?
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI ) சமீபத்தில், ஜூலை தொடக்கத்தில் தனது ஏடிஎம்கள் மற்றும் வங்கி கிளைகளிலிருந்து பணத்தை எடுப்பதற்கான சேவை கட்டணங்களை திருத்தியது. அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்குகள் (BSBD) அல்லது SBI BSBD கணக்குகளுக்கு, ஏடிஎம் மற்றும் கிளை உள்ளிட்ட சேவைகளுக்கு 4 இலவச பரிவர்த்தனைகளுக்கு அப்பால் நடக்கும் பரிவர்த்தனைக்கு கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளது.
அவரவர் வங்கிக்கான கட்டணங்கள் எவ்வளவு என்பதை தெரிந்துகொண்டு செயல்படுங்கள்
இது தவிர, எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முதல் 10 காசோலை இலைகளில் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்றும் வங்கி தெரிவித்துள்ளது. இந்த வரம்பைத் தாண்டிய காசோலை பரிவர்த்தனைக்கு ஜூலை 1,2021 முதல் நடைமுறையில் இருக்கும் கட்டணங்களுக்கு உட்பட்டது என்று வங்கி தெரிவித்துள்ளது. ஆகையால், வங்கி வாடிக்கையாளர்கள் அவரவர் வங்கிக்கான கட்டணங்கள் எவ்வளவு என்பதை தெரிந்துகொண்டு, அதற்கேற்ப பரிவர்த்தனைகளை மேற்கொள்வது தேவையற்ற கட்டணங்களை தவிர்க்க உதவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக