
நாட்டில் பல இடங்களில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதில் இருந்து மழைக்காலம் துவங்கிவிட்டதை உணர முடிகிறது. உங்கள் பகுதியில் அவ்வளவாக மழை பெய்யாமல் இருக்கலாம். ஆனால் இந்தியாவின் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
மழை பெய்தாலே வாகனங்களில் அவ்வளவு சவுகரியமாக வெளியே சென்று வர முடியாது. அதிலும் கனமழை பெய்தால் சொல்லவே வேண்டாம். வாகனத்தை அப்படியே சாலையில் விட்டுவிட்டு நீங்கள் மட்டும் வீட்டிற்கு தனியாக வர வேண்டிய சூழல் கூட ஏற்படலாம்.
இதற்கு உதாரணமாக, மழை நீரில் மாட்டி கொண்ட வாகனங்களையும், அவற்றை மற்றவர்கள் மிகவும் சிரமத்துடன் வெளியே மீட்டு வருவதையும் பலமுறை நமது செய்திதளத்தில் கூட பார்த்துள்ளோம். இதன் தொடர்ச்சியாக, தற்போது நமக்கு கிடைக்க பெற்றுள்ள வீடியோவினை தான் கீழே காண்கிறீர்கள்.
இந்த வீடியோவில் Toyota Fortuner கார் ஒன்று ஆள் உயர மழை நீரில் சிக்கி கொண்டு இருப்பதையும், அதனை ஓட்டி வந்தவர் நீரில் மூழ்காமல் இருக்க காரின் மேற்கூரையில் அமர்ந்திருப்பதையும் பார்க்கலாம். உத்தர பிரதேச மாநிலம் பாக்பாட் என்ற பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இவ்வளவு ஆழத்துடன் இருக்கும் மழைநீரில் ஏன் இவர் தனது காரை இறக்கினார் என்பது தெரியவில்லை. ஒருவேளை அந்த பகுதிக்கு அவர் வருவது புதியதாக இருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இது ஆறு செல்வதற்கான பாதையோ அல்லது குட்டையோ கிடையாது. வாகனங்கள் செல்லும் சாலை தான் என்பது உறுதி.
நீரில் சிக்கிய வாகனத்திற்கு சரியாக மேலே இருந்து இந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாலும், இரு புறங்களில் பெரிய சுவர்களை பார்க்க முடிவதாலும் இது சுரங்க பாதையாக இருக்க வேண்டும். நீரின் ஆழத்தை சரியாக மதிப்பிடாத இந்த Fortuner கார் ஓட்டுனர், இந்த சுரங்க பாதையை கடக்க முயன்றிருப்பார். சுரங்கத்திற்குள் செல்ல செல்ல கார் மூழ்குவதை கண்ட ஓட்டுனர் பயத்தில் காரை அங்கேயே நிறுத்தி இருக்க வேண்டும்.
பிறகு உதவிக்கு ஆட்களை அழைக்க காரில் இருந்து வெளியே வந்துள்ளார். இதில் தான் மழை நீர் காருக்குள் சென்றிருக்க வேண்டும். பிறகு என்ன, காருக்குள் மீண்டும் போக முடியாமல் மேற்கூரையிலேயே அமர்ந்து கொண்டவர், தனது மொபைல் போனின் மூலம் உதவிக்கு ஆட்களை அழைத்துள்ளார். மேலுள்ள வீடியோவின் பிற்பகுதியில், டிராக்டர் மூலம் சிலர் அவருக்கு உதவ முன் வருவதை காண முடிகிறது.
Toyata Fortuner சற்று உயரம் அதிகம் கொண்ட எஸ்யூவி வாகனம் என்பதால் கார் முழுவதுமாக நீரில் மூழ்காமல் இருந்துள்ளது. இதுவே குறைவான உயரம் கொண்ட ஹேட்ச்பேக் அல்லது செடான் காராக இருந்திருந்தால், காரை அப்படியே நீருக்குள் விட்டுவிட்டு நீச்சல் அடித்து வெளியே வந்துதான் உதவிக்கு ஆட்களை அழைத்திருக்க வேண்டியதாகி இருக்கும்.
இருப்பினும் இவ்வளவு பெரிய காரை இயக்கி வருபவரால், கடக்கவுள்ள நீரின் ஆழத்தை மதிப்பிட முடியாமல் போனது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. இது முழுக்க முழுக்க ஓட்டுனரின் கவன குறைவையே காட்டுக்கிறது. சுரங்க பாதையாக இருந்ததினால் பெரிய அளவில் எந்த சிரமமும் இன்றி காரை மீட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக