Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

மக்கள் அதிகம் வாங்கும் கார்களில் 6 காற்றுப்பைகள் அவசியம்!! கார் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சரின் வேண்டுக்கோள்

மக்கள் அதிகம் வாங்கும் கார்களில் 6 காற்றுப்பைகள் அவசியம்!! கார் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சரின் வேண்டுக்கோள்

சிறிய அளவிலான மலிவான கார்களிலும் பாதுகாப்பிற்கு காற்றுப்பைகளை தயாரிப்பு நிறுவனங்கள் பொருத்த வேண்டியது அவசியமாகும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

அதிக சாலை விபத்துகள் நடைபெறும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் இருந்து வருகிறது. இதனாலேயே தினந்தோறும் நடைபெறும் சாலை விபத்துகளை தவிர்க்கவும், அதனால் ஏற்படும் உயிர் பலிகளை குறைக்கவும் மத்திய அரசாங்கம் பல கட்ட நடவடிக்கைகளை ஒன்றன்பின் ஒன்றாக செயல்படுத்தி வருகிறது.

இதன்படி தற்போது அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களையும், குறைந்தப்பட்சம் 6 காற்றுப்பைகளுடன், பெரும்பாலான மக்கள் வாங்கும் ‘பட்ஜெட்' கார்களை தயாரிக்க முற்படுங்கள் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கேட்டுக் கொண்டுள்ளார்.

சிறிய பொருளாதார கார்களில் அதிக ஏர்பேக்குகளை தனது வேண்டுக்கோளிற்கு ஏற்ப பொருத்துவதன் மூலம், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் மற்றும் விபத்துகளினால் ஏற்படும் மரணங்களை தடுக்க முடியும் என கூறிய அமைச்சர் நிதின் கட்கரி, "நம் நாட்டில் ஏழைகளும் பாதுகாப்பு பெற வேண்டும் (சாலை விபத்துகள் ஏற்பட்டால்)" என்றார்.

மேலும் பேசிய அவர், சிறிய கார்களில் கூடுதல் ஏர்பேக்குகளை ரூ.3,000- ரூ.4,000 வரையிலான செலவில் தயாரிப்பு நிறுவனங்களால் பொருத்த முடியும் எனவும் தெரிவித்தார். பணக்காரர்கள் வாங்கும் பெரும்பாலான பெரிய அளவிலான கார்களில் மட்டும் தயாரிப்பு நிறுவனங்கள் 8 காற்றுப்பைகளை வழங்குகின்றன.

இதற்கு, "பணக்கார மக்களுக்கு நீங்கள் (ஆட்டோமொபைல் நிறுவனங்கள்) 8 காற்றுப்பைகளை வழங்குகிறீர்கள். பொருளாதார கார் மாடல்களில் (மிடில்-க்ளாஸ் & அதற்கு கீழ் உள்ள மக்கள் பயன்படுத்துவது) 2-3 காற்றுப்பைகளை மட்டுமே வழங்கி வருகிறீர்கள். ஏன் இப்படி?" என தனது ஆதங்கத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

ஆட்டோமொபைல் தொழில் நிறுவனங்களுக்கு அதிக வரிவிதிப்பு மற்றும் கடுமையான பாதுகாப்பு & வாகனங்களுக்கான மாசு உமிழ்வு விதிமுறைகளினால், தயாரிப்பு வாகனங்களை விலை உயர்ந்ததாக ஆக்கியிருப்பதை எண்ணி கவலை கொள்ளும் விதமாக மத்திய அமைச்சரின் சில கருத்துகள் இருந்தன.

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கார் மாடல்களில் முன்பக்கத்தில் ஓட்டுனர் & முன் இருக்கை பயணிக்கு ஏர்பேக்குகளை கட்டாயமாக நிறுவுவதற்கான காலக்கெடுவை 4 மாதங்கள் அதிகரித்து 2021 டிசம்பர் 31ஆம் தேதி வரையில் நீட்டித்தது.

இந்தியாவில் இன்னும் கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்படாததினால், அவ்வப்போது அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு உத்தரவுகளினால் இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. அதேநேரம் புதியதாக அறிமுகப்படுத்தப்படும் கார்கள் இரட்டை முன்பக்க காற்றுப்பைகள் உடன் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் என்பது கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்தே அமலுக்கு வந்துவிட்டது.

இதற்கான மத்திய அரசாங்கத்தின் அறிவிப்பு கடந்த 2021 மார்ச் மாதத்தில் வெளிவந்தது. அதற்குமுன் ஓட்டுனருக்கு காற்றுப்பை மட்டுமே கட்டாயமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. விபத்துகளின் போது காற்றுப்பைகள் பயணிகளின் உயிரை பெரிய அளவில் பாதுகாக்கக்கூடியவை என அரசாங்கம் நம்புகிறது.

ஆனால் அதேநேரம் காற்றுப்பைகளினால் சில அசவுகரியங்களும் உள்ளன. இதில் முதலாவது மற்றும் முக்கியமானது, எதிர்ப்பாராத நேரத்தில் காற்றுப்பைகள் விரிவடைவது. விபத்தின் போது அல்லாமல், சற்று பெரிய பள்ளங்களில் எதிர்பாராமல் காரை இறக்கும்போது காற்றுப்பைகள் விரிவடைந்த சம்பவங்கள் சிலவற்றை இதற்கு முன் பார்த்துள்ளோம்.

இவ்வாறு எதிர்பாராத நேரத்தில் காற்றுப்பைகள் விரிவடைவதினாலேயே சில நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் விரிவடைந்த காற்றுப்பைகளை மீண்டும் டேஸ்போர்டு & ஸ்டேரிங் சக்கரத்திற்குள் நுழைப்பது என்பது செலவு மிகுந்த விஷயமாக உள்ளது. இதனால் சிறிய பள்ளங்களில் காரை இறக்கியதால் காற்றுப்பை விரிவடைந்து, அதனை மீண்டும் காருக்குள் நுழைப்பது எந்தவொரு உரிமையாளருக்கும் வெறுப்பை உண்டாக்கக்கூடும். இருப்பினும் காற்றுப்பைகளை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய நன்மைகளே அதிகமாக உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!