
இக்கோயில் சிவகங்கை மாவட்டத்தில் அரியக்குடி அருகே இலுப்பைக்குடி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இவ்வூரின் முந்தைய பெயர் இலுப்பை வனம் என்பதாகும். ஜோதியிலிருந்து தோன்றியதால் மூலவர் சுயம்பிரகாசேஸ்வரர் என்றும் தான்தோன்றீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
மாவட்டம் :
அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், இலுப்பைக்குடி, அரியக்குடி போஸ்ட், சிவகங்கை மாவட்டம்.
எப்படி செல்வது?
காரைக்குடியிலிருந்து சுமார் 6கி.மீ தொலைவில் இக்கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு நகரப் பேருந்து வசதிகள் உள்ளன. ஆட்டோவிலும் செல்லலாம்.
கோயில் சிறப்பு :
சுவாமி சன்னதி முன்மண்டபத்தில் உள்ள தூணில் ஒரு அங்குல அளவே உள்ள குட்டி விநாயகர் சிற்பம் இருக்கிறது. இந்த சிலையில் கண் இமை, விரல் நகங்களும் துல்லியமாகத் தெரியும்படி நேர்த்தியாக சிற்ப வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது சிறப்பு.
சுவாமி சன்னதி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி, தலையில் கிரீடம் அணிந்து காட்சி தருவது வித்தியாசமான அம்சம்.
அம்பாள் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த வாராஹி சிற்பம் இருக்கிறது. நகரத்தார் திருப்பணி செய்த கோயில்களில் இதுவும் ஒன்று.
இத்தலத்து பைரவர், 'ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்" என்று பெயர் பெறுகிறார். அவரது இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு.
நாய்க்கடி பலகை :
பைரவர் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் நாய் படம் வரையப்பட்ட 'நாய்க்கடி பலகை" இருக்கிறது. நாய்க்கடி பட்டவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, தூணை சுற்றி வந்து விஷத்தன்மை முறிய பைரவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
கோயில் திருவிழா :
சித்திரையில் பிரம்மோற்சவம், சிவராத்திரி, கார்த்திகை, ஐப்பசியில் அன்னாபிஷேகம் ஆகிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
பிரார்த்தனை :
குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, திருமண, புத்திர தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். தீராத நோய் மற்றும் கிரக தோஷம் நீங்க இங்குள்ள பைரவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
திருமணத்தடையுள்ள பெண்கள் வாராஹிக்கு சந்தனக்காப்பு செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
நேர்த்திக்கடன் :
சிவன், அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், விசேஷ பூஜை செய்தும் வேண்டிக்கொள்கிறார்கள். தீராத நோய் மற்றும் கிரக தோஷம் நீங்கியவர்கள் பைரவர் சன்னதியில் தேங்காயில் நெய் தீபம் ஏற்றியும், வடை மாலை அணிவித்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக