அமைவிடம் :
ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் அமைந்துள்ள சிவபெருமான் திருக்கோயில் ஆகும். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. மேலும் பழமையான தேவார வைப்புத் தலம் ஆகும்.
சப்தரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவர் சிவபெருமானை நோக்கி தவம் செய்வதற்காக இங்கு வந்து தங்கி வில்வ மரத்தின் கீழ் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அந்த லிங்க மூர்த்தமே, ஜமதக்னீஸ்வரர் ஆனது. (அக்னி வழிபட்டதால் அக்னீஸ்வரர் என்ற திருப்பெயரும் உண்டு)
மாவட்டம் :
அருள்மிகு ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில், உடையவர் தீயனூர், அரியலூர் மாவட்டம்.
எப்படி செல்வது?
அரியலூரிலிருந்து சுமார் 28 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது. அரியலூரிலிருந்து வாரனவாசி, பளுவூர் மற்றும் பொய்யூர் வழியாகவும், அயனாத்தூர் மற்றும் தெலூர் வழியாகவும் இரண்டு வழித்தடங்களில் இக்கோயிலை அடையலாம்.
கோயில் சிறப்பு :
மூலவர் ஜமதக்னீஸ்வரர் கருங்கல்லால் ஆன சதுரவடிவில் அமைந்த பலகை போன்ற பீடத்தின்மேல் சிவலிங்கத் திருமேனியராகக் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூவகை சிறப்புகளும் ஒருங்கே அமையப்பெற்ற அற்புதத்தலமாகவும் இத்தலம் விளங்குகிறது.
விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் மற்றும் கோஷ்ட நாயகர்களும் இத்தலத்தில் காணப்படுகின்றனர். கோயிலுக்கு பின்புறம் மேற்கு திசையில் அக்னி தீர்த்தம் என்னும் திருக்குளம் அமைந்துள்ளது.
அன்னை அமிர்தாம்பிகை சன்னதியின் விமானம் கூம்பு வடிவ அமைப்பில் உள்ளது. தலையில் அழகிய கரண்ட மகுடம் அலங்கரிக்க, இரண்டு காதுகளிலும் பத்ர, மகர குண்டலங்கள், கழுத்தில் அழகிய தாலி, கைகளில் வளையல், கால்களில் சதங்கை என அணிமணிகள், மேல் வலது கையில் அட்சமாலை, இடது கையில் நீலோற்பவ மலர், முன் வலக்கையை அபயமுத்திரையுடனும், இடக்கையை தொடையில் ஊன்றியவாரும் அம்மன் காட்சி தருகிறார்.
துர்க்கையின் வாகனமான எருமை தலையும் இத்தலத்தில் உள்ளது. துர்க்கையின் சிற்பத்திற்கு மாறாக சிறிய அளவில் லிங்கோத்பவர் சிற்பம் எருமை தலையின் மேல் வைக்கப்பட்டுள்ளது.
கோயில் திருவிழா :
பிரதோஷம், சிவராத்திரி அகியவை கொண்டாடப்படுகிறது.
வேண்டுதல் :
வயிற்றுவலி, கண்நோய், சூலை நோய் போன்ற பல்வேறு நோய்களிலிருந்து விடுபட இங்குள்ள மூலவரை வணங்கி செல்கின்றனர். மேலும் திருமணத்தடை, குழந்தை பாக்கியம், நவகிரக தோஷங்கள் நீங்கவும் இங்கு வழிபடுகின்றனர்.
நேர்த்திக்கடன் :
சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக