
அமைவிடம் :
திருமாலின் திருநாமங்களில் ஒன்று கேசவன். கேசவா... என்றால் தடைகளை நீக்குபவர். காலையில், நமது பணிக்கு கிளம்பும் முன், வீட்டு வாசலில் நின்று ஏழுமுறை கேசவா என்று சொல்லிவிட்டு கிளம்பினால், அன்றைய பணிகள் தடையின்றி நடக்கும் என்பர் வைணவப் பெரியவர்கள்.
பூந்தி என்பது காராபூந்தி அல்ல. இது ஒரு ஊரின் பெயர். ராஜஸ்தானில் உள்ளது. ஹதோதி வம்சத்தைச் சேர்ந்த மன்னர்களால் ஆளப்பட்ட சரித்திரப் புகழ் பெற்ற பகுதி. பல நினைவு சின்னங்கள் உள்ள பழமையான நகரம். இங்கு கேஷாராய்பட்டன் என்னும் இடத்தில் உள்ள கேசவரின் ஆலயம் மனதுக்கு மிக ரம்மியமானது.
கேஷாராய்பட்டன் என்பதிலுள்ள பட்டன் என்பதற்கு நதிக்கரை ஓரம் என்று பொருள். இந்தப் பெயருக்கேற்ப அருள்மிகு கேசவராய்ஜி திருக்கோயில் சம்பல் நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கோயிலின் அமைப்பு காசி போல் உள்ளது.
மாவட்டம் :
அருள்மிகு கேசவராய்ஜி திருக்கோயில் கேஷாராய்பட்டன், பூந்தி, ராஜஸ்தான் மாநிலம்.
எப்படி செல்வது?
சென்னை-ஜெய்ப்பூர் செல்லும் ரயிலில் ஏறினால் கோட்டாவில் நிற்கும். அங்கு தங்கி சுமார் 15 கி.மீ ஏதேனும் வாகனத்தில் நதிக்கரைக்கு சென்றால் அங்கிருந்து படகு சவாரி செய்து அக்கரையில் உள்ள பூந்தி விஷ்ணுவை தரிசித்து வரலாம்.
கோயில் சிறப்பு :
இந்தக் கோயில் மிகப்பெரிய மேடையின் மேல் கட்டப்பட்டுள்ளது. சதுர வடிவிலான கருவறையின் மேல் கட்டப்பட்ட ராஜகோபுரம், கூம்பு வடிவில் உள்ளது.
தேவர்கள், யட்சர்கள், கந்தர்வர்கள், மலர்கள், மிருகங்கள், அரசர்களின் சிற்பங்கள் உள்ளன. கோபுரத்தின் உச்சியில் கலசம் உள்ளது. வாயிற்கதவுகள் ஏதோ மாளிகைக்குள் நுழைவது போன்ற பிரமையை ஏற்படுத்துகின்றன.
கோயிலின் உட்புறத்தில் நமஸ்கார மண்டபத்தை ஜக்மோகன் என்று அழைக்கின்றனர். இது ராஜதர்பார் போல் ஜொலிக்கிறது. உப்பரிகைகளில் இங்கும் சிற்பிகளின் கைத்திறன் பளிச்சிடுகிறது.
இங்குதான் கேசவர் கொலு வீற்றிருக்கிறார். இவரை கேசவராய்ஜி என்கின்றனர். இவர் வெள்ளைக் கல்லால் பத்மாசனத்தில் அமர்ந்துள்ள படி காட்சியளிக்கிறார். (கருமையான ஒரு விக்கிரகம் கோயிலின் வேறு இடத்தில் உள்ளது).
இடது கையில் சக்கரம். வலது கையில் சங்கு. பட்டு, பீதாம்பரத்துடன் அழகாய் காட்சி தருகிறார். மார்பில் ஹாரம் பளபளக்கிறது. பூஜைகள் புஷ்டிமர்க்ய சம்பிரதாயத்தில் செய்யப்படுகிறது.
மாலை வேளையில் இக்கோயிலிற்கு சென்றால், கோயிலின் சுற்றுச்சூழல் மிகவும் ரம்மியமாக இருக்கும்.
கோயில் திருவிழா :
இங்கு நவம்பரில் கார்த்திகை பூர்ணிமா விசேஷமாக நடக்கும். கார்த்திகை மாதம் பௌர்ணமியை ஒட்டி 15 நாட்கள் இந்த விழா நடக்கிறது. இந்தக் காலத்தில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள், சம்பல் நதியில் நீராடி கேசவரை வழிபடுவார்கள்.
வேண்டுதல் :
நினைத்த காரியம் நிறைவேற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன் :
சுவாமிக்கு அர்ச்சனை செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக