Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 7 அக்டோபர், 2021

ஒருசமயத்தில் எப்படி இருந்த நிறுவனம்!! ஃபோர்டின் ஷோரூம்களில் வேறு பிராண்டின் கார்கள்!

ஒருசமயத்தில் எப்படி இருந்த நிறுவனம்!! ஃபோர்டின் ஷோரூம்களில் வேறு பிராண்டின் கார்கள்!

ஃபோர்டு நிறுவனத்தின் இந்திய வெளியேற்ற முடிவு அதன் டீலர்கள் மத்தியில் பல விதமான மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. ஃபோர்டு இந்தியாவில் விற்பனை செய்த கார்கள் பெரும்பாலானவற்றை குஜராத்த்தில் உள்ள அதன் சனந்த் தொழிற்சாலையில் தயாரித்து வழங்கியது.


ஒருசமயத்தில் எப்படி இருந்த நிறுவனம்!! ஃபோர்டின் ஷோரூம்களில் வேறு பிராண்டின் கார்கள்!

ஆனால் ஃபோர்டின் சமீபத்திய வெளியேற்ற முடிவினால் இந்த தொழிற்சாலையில் கார்கள் தயாரிக்கும் பணிகள் ஏற்கனவே ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தப்பட்டு வருகின்றன. முழுவதுமாக இந்த ஆண்டு முடிவதற்குள் நிறுத்தப்பட்டுவிடும் என செய்திகள் கூறுகின்றன. இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டில் பெரும்பாலும் ஏற்றுமதி, இறக்குமதிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுவரும் சென்னை தொழிற்சாலையும் மூடப்பட உள்ளது.

இதனால் டீலர்களிடம் ஸ்டாக்கில் இருக்கும் ஃபோர்டு கார்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே. எதிர்காலத்தில் விற்பனைக்கு-பிந்தைய சேவை மற்றும் உதிரி பாகங்கள் கிடைக்குமா என்கிற கேள்வி உள்ளதால், இவற்றை வாங்குவதற்கும் வாடிக்கையாளர்கள் தயாராக இல்லை.

இதனை மனதில் வைத்துக்கொண்டு, ஃபோர்டு ஒரு மறுச்சீரமைப்பு திட்டத்தை வகுத்திருந்தாலும், வெறும் விற்பனைக்கு-பிந்தைய சேவை மற்றும் உதிரிபாக வணிகத்திற்கு மட்டும் எத்தனை விநியோகஸ்தரர்கள் தயாராக உள்ளனர் என்பது தெரியவில்லை. ஏனெனில் ஃபடா (FADA) எனப்படும் ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் தற்சமயம் சுமார் 170 ஃபோர்டு டீலர்கள் உள்ளனர்.

இவற்றில் பல டீலர்ஷிப் மையங்கள் புதியவை. இந்த 170 டீலர்களில் பலர் சில்லறை கார் வணிகத்திற்காக பல கோடிகளை முதலீடு செய்துள்ளன. இத்தகைய பெரிய அளவிலான முதலீட்டை வெறும் சேவை மற்றும் உதிரி பாகங்களின் மூலம் இலாபத்துடன் பெற முடியாது. மறுப்பக்கம், கார் சேவைகளில் ஈடுப்படும் பணியாளர்களுக்கும், டீலர்ஷிப் மையத்தில் பணியாற்றுபவர்களுக்கும் சம்பளம் வேறு வழங்க வேண்டும்.

இதையெல்லாம் யோசித்து பார்த்த சில ஃபோர்டு டீலர்கள் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். அதாவது தங்களது டீலர்ஷிப் முழுவதையும் வேறு கார் பிராண்டிற்கு மாற்றி வருகின்றனர். இதற்கு சாட்சியாக, ஃபோர்டு டீலர்ஷிப் மையம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்களை கீழுள்ள படத்தில் காணலாம்.

ஒருசமயத்தில் எப்படி இருந்த நிறுவனம்!! ஃபோர்டின் ஷோரூம்களில் வேறு பிராண்டின் கார்கள்!

லக்னோவில் இருந்து ரஷ்லேன் செய்திதளம் மூலம் இந்த படம் கிடைத்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து வெளியாகியுள்ள மற்றொரு படத்தில் ஃபோர்டு டீலர்ஷுப் ஷோரூம் ஒன்றில் டிசைர், ஆல்டோ மற்றும் பலேனோ போன்ற மாருதி கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஃபோர்டு ஷோரூம் ஒன்றில் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

ஆனால் இந்தியாவில் எந்த இடத்தில் இந்த டீலர்ஷிப் ஷோரூம் உள்ளது என்பது தெரியவில்லை. மாற்று பிராண்டின் கார்கள் மட்டுமில்லாமல், அவற்றை விற்பனை செய்ய அந்த பிராண்ட் டீலர்ஷிப்களின் உரிமையாளர்களும் சில ஃபோர்டு டீலர்ஷிப் மையங்களுக்குள் பணியாற்றுகின்றனர். இந்த விஷயங்கள் அனைத்தும் தயாரிப்பு நிறுவனங்கள் வரையில் கொண்டு செல்லப்படாமல் டீலர்களுக்குள்ளயே முடித்து கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

ஒரு சில டீலர்கள் ஒன்றிற்கு மேற்பட்ட டீலர்ஷிப் மையங்களை கூட நிர்வகித்து வரலாம். ஃபோர்டு வெளியேற்றத்தால் தனது இரண்டு டீலர்ஷிப்களையும் ஒரே கார் பிராண்டிற்கு அத்தகையவர்கள் மாற்றியிருக்கலாம். இருப்பினும் தற்போது நமக்கு கிடைத்துள்ள படத்தில் டீலர்ஷிப்பின் வெளியே ‘FORD' பெயர்பலகையில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் ஷோரூமிற்கு உள்ளேயே பெரியதாக எந்த மாற்றமும் இருக்காது.

ஃபோர்டு சமீபத்தில் தான் தனது வெளியேற்ற முடிவை அறிவித்ததால், சில காலத்திற்கு இந்த பெயரிலேயே டீலர்ஷிப் செயல்படட்டும் என அவர்கள் விட்டிருக்கலாம். இந்திய சந்தையில் இருந்து வெளியேறினாலும், முன்பு எந்த அளவிற்கு விற்பனைக்கு பிந்தைய சேவை வழங்கப்பட்டதோ அதே அளவிலான சேவையினை தொடர்ந்து இந்திய வாடிக்கையாளர்கள் பெறலாம் என ஃபோர்டு உறுதியளித்துள்ளது.

விநியோகஸ்தரர்கள் தங்கள் வணிகங்களை சேவை மற்றும் உதிரி பாகங்களை தொடர்ந்து வழங்குவதற்கு போதுமான இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ள இந்த அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனம் தனது லக்சரி & விலைமிக்க ஸ்போர்ட்ஸ் கார்களை தொடர்ந்து இந்தியாவில் விற்பனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி, மஸ்டங் கூபே, மஸ்டங் மேக்-இ எலக்ட்ரிக் உள்ளிட்ட கார்கள் அடுத்ததடுத்தாக ஃபோர்டு பிராண்டில் இருந்து இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. ஏனெனில் இவை அனைத்தும் சிபியூ முறையில், அதாவது முழுமையாக வெளிநாட்டு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளன. இத்தகைய பிரிமீயம் கார்களை விற்பனை செய்ய தற்போதைய டீலர்களில் சில குறிப்பிட்ட சதவீதத்தினரை ஃபோர்டு ஒதுக்கியுள்ளது.

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!