Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 23 நவம்பர், 2021

உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்கும் அருமையான அஞ்சலக திட்டம்.. எப்படி இணைவது?

 இரட்டிப்பு எப்போது?

இந்திய அஞ்சலகத்தில் உள்ள முக்கியமான முதலீட்டு திட்டங்களில் ஒன்று கிசான் விகாஸ் பத்திரம். இது அரசின் ஒரு பாதுகாப்பான, நிரந்தர வருவாய் தரக்கூடிய திட்டம்.

 இந்த திட்டத்தில் சந்தை அபாயம் இல்லை. மேலும் இந்த திட்டத்திற்கு காலாண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படும். எனினும் இந்த திட்டத்தின் நல்ல அம்சமே நீங்கள் இணையும்போது கிடைக்கும் வட்டியை போல, இறுதி வரையிலும் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் முதலீடு குறிப்பிட்ட காலத்தில் இரட்டிப்பாகும்.
 
இரட்டிப்பு எப்போது?

இந்த திட்டத்தின் மூலம் சேமிக்க விரும்புவர்கள் குறைந்தபட்சம், 1,000 ரூபாய் முதல் முதலீடு செய்து கொள்ளலாம். அதிகபட்ச முதலீடு என எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை. நீங்கள் முதலீடு செய்யும் தொகையானது 124 மாதங்கள், அதாவது 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் கழித்து இரட்டிப்பாகிறது.

தற்போதைய வட்டி விகிதம்

அஞ்சலகத்தில் இந்த கிசான் விகாஸ் பத்திரத்திற்கு வட்டி விகிதம் 6.9% ஆகும்.

இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய 18 வயது பூர்த்தியடைந்த எந்த ஒரு இந்தியக் குடிமகனும் இணையலாம். இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய வங்கிக் கணக்கு தேவையில்லை. ஒரு குழந்தை அல்லது முதியவர்களுடனும் இணைந்தும் முதலீடு செய்யலாம். அப்படி இணையும் போது குழந்தையின் வயது, பாதுகாவலரின் பெயர் அல்லது பெற்றோர் பெயரை மறக்காமல் கொடுக்க வேண்டும். இந்த பத்திரத்தினை அறக்கட்டளைகள் கூட வாங்கலாம், ஆனால் NRI-கள் வாங்க முடியாது.

எப்படி விண்ணப்பிப்பது?

கிசான் விகாஸ் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம் சென்று, தங்களது அடையாள மற்றும் முகவரி ஆவணங்களைச் சமர்ப்பித்து சேமிப்பைத் துவங்கலாம். குழந்தைகளின் பெயரில் அவரது பெற்றோர்கள் மற்றும் காப்பாளர்கள் முதலீடு செய்யலாம்.

பாஸ்புக் வசதியும் உண்டு

கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் இணைந்தவுடன் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம் சென்று, அதற்கான பாஸ்புக்கை முதலீட்டாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்த சேமிப்பு திட்டத்தில் விண்ணப்பதாரர் எதிர்பாராத வகையில், மரணமடையும் பட்சத்தில், அவரால் பரிந்துரைக்கப்பட்ட நாமினி முதிர்ச்சித் தொகையைப் பெறுவதற்கான வசதியும் உண்டு.

இடையில் பணம் எடுக்கலாமா?

முதலீட்டாளர்கள் விரும்பினால் இந்த சேமிப்புத் திட்டத்தை மற்றொருவரின் பெயருக்கு மாற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு. அப்படி இல்லை எனில் ஒருவேளை முன்கூட்டியே பணத்தைப் பெற விரும்பினாலும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்கு இந்த திட்டத்தில் சேர்ந்து 30 மாதங்கள் நிறைவு பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம். எனினும் நீங்கள் பணத்தைப் பெறும் நாள் வரை வட்டி கணக்கிடப்பட்டு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

வரி சலுகை?

இந்த கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு தங்களது பங்களிப்பு மற்றும் லாபம் என இரண்டுக்கும், மற்ற திட்டங்களை போல் வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதில்லை. எனினும் முதிர்வு காலத்திற்கு பிறகு எடுக்கும்போது டிடிஎஸ் விலக்கு அளிக்கப்படுகிறது.

கடன் கிடைக்குமா?

பொதுவாக பல சேமிப்பு திட்டங்களில் அதனை பிணையாக வைத்து கடன் பெற முடியும். கிசான் விகாஸ் பத்திரத்தினையும் வைத்து கடன் வாங்க முடியும். இவ்வாறு பிணையாக வைத்து வாங்கும் கடன்களுக்கு, மற்ற கடன்களோடு ஒப்பிடும்போது வட்டி விகிதமும் சற்று குறைவாகவே இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக