தந்தை-மகன் இருவர் இணைந்து விமானம் தோற்றம் கொண்ட ஓர் மிதக்கும் படகை உருவாக்கி இருக்கின்றனர். இந்த மிதக்கும் விமானம் பற்றிய முழுமையான தகவல்களை இப்பதிவில் காணலாம், வாங்க.
கேரளாவைச் சேர்ந்த தந்தை-மகன் இருவர் விமானம் தோற்றம் கொண்ட படகை உருவாக்கியிருப்பது பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த படகை இயக்குவதற்கு அவர்கள் ஓர் காரின் எஞ்ஜினை பயன்படுத்தியிருப்பது மேலும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. ஒட்டுமொத்த வாகன ஆர்வலர்களையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கும் வைரல் வீடியோ பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.
விநோதமான வாகனங்களை உருவாக்கும் செயல்கள் நாட்டில் அண்மைக் காலங்களாக அதிகரித்துக் காணப்படுகின்றது. கடந்த காலங்களில் இதுகுறித்த பல்வேறு வீடியோக்கள் மற்றும் தகவல்களை நமது டிரைவ்ஸ்பார்க் குழு வெளியிட்டிருக்கின்றது. இந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த தந்தை-மகன் இருவர் காரின் எஞ்ஜினால் இயங்கும் படகு ஒன்றை உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்கள் அந்த படகை வழக்கமான படகின் தோற்றத்தில் அல்லாமல் ஓர் விமானத்தைப் போன்று வடிவமைத்திருக்கின்றனர். இதன் காரணத்தினாலேயே இப்படகு, மன்னிக்கவும், நீரில் பயணிக்கும் இவ்விமானம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.
மாநிலத்தின் பிரபலமான சுற்றுலா தளங்களில் ஒன்றான கொச்சியைச் சேர்ந்தவர் ஷாபெல் டி-சோஸா. இவர் உலோக மேற்கூரை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றார். சொந்தமாக இதற்கான பட்டறையையும் அவர் நடத்தி வருகின்றார். இவரது மகன் காட்சன். இவர் பொறியியல் பட்டதாரி ஆவார்.
காட்சனின் படிப்பிற்காக இருவரும் இணைந்து அண்மையில் கடல் விமானம் (seaplane) ஒன்றை உருவாக்கி இருக்கின்றனர். இதன் வெற்றியைத் தொடர்ந்தே சுற்றுலா பயணிகளைக் கவரும் பொருட்டு இருவரும் இணைந்து தற்போது விமானம் உருவம் கொண்ட படகை உருவாக்கி இருக்கின்றனர்.
போட்ஹவுஸ் மிகவும் புகழ்பெற்ற தொழிலாக அப்பகுதியில் விளங்கி வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் வித்தியாசமான தோற்றம் கொண்ட படகை உருவாக்கினால் சுற்றுலா பயணிகளைக் கவர முடியும் என்ற நோக்கிலேயே இருவரும் இப்படகை உருவாக்கியுள்ளனர். இது உண்மையில் பலரை இப்போதே கவர தொடங்கியிருக்கின்றது.
அதேநேரத்தில், நாங்கள் இருக்கும் இப்பகுதியில் இதுபோன்ற ஓர் படகு இல்லை என்ற தகவலையும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஃபைபர் மற்றும் உலோகத்தால் இதன் கூரை உருவாக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, மெட்டல் பைப்புகள், ஏசிபி ஷீட்டுகள் மற்றும் ஃபைபர் கண்ணாடிகள் உள்ளிட்டவையும் இதன் உருவாக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இத்துடன், இயக்கத்திற்காக ஓர் மாருதி காரின் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. எந்த மாடல் காரின் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவலை அவர்கள் வெளியிடவில்லை. இந்த படகில் சுமார் 12 பேர் வரை பயணிக்க முடியும். இந்த படகைத் தொடர்ந்து சுமார் 50 வரை அமரக் கூடிய மிதக்கும் உணவகத்தையும் உருவாக்க மகன்-தந்தை ஜோடி திட்டமிட்டிருக்கின்றது.
வழக்கமான படகுகள் பயணிக்க குறைந்தது 6 அடி ஆழமாவது இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இந்த 12 இருக்கைகள் வசதிக் கொண்ட படகை உருவாக்க 12 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருப்பதாக ஷாபெல் தெரிவித்திருக்கின்றார். இதைவிட உருவத்தில் பெரிதாக உருவாகி வரும் படகிற்கு ரூ. 20 லட்சம் வரை அவர்கள் செலவு செய்திருப்பதாக தெரிவித்தார்.
தந்தை-மகனின் இந்த விநோத உருவாக்கம் இந்தியளவில் மட்டுமல்ல உலகளவிலும் சமூக வலைதளங்களில் வாயிலாக வைரலாகி வருகின்றது. இதற்காக சில வெளிநாட்டவர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருப்பதாகவும் ஷாபெல் கூறியுள்ளார். தொடர்ந்து, மாநிலத்தின் முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவரான பாபி செம்மனூர், தனக்கான பிரத்யேக படகை வடிவமைத்துக் கொடுக்குமாறு ஓர் ஆர்டரை கொடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சுமார் 60 லட்சம் செலவில் அப்படகு உருவாக்கப்பட இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக