உலகில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பொதுவான விஷயம் இருக்கிறது. உணவு வகைகள் விலை உயர்ந்தவை என்பதுதான் அது. வழக்கமான விலையை காட்டிலும் 2 அல்லது 3 மடங்கு அதிக விலையில்தான் விமான நிலையங்களில் உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் என்ன? என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்திருக்கலாம்.
பொதுவாக விமானங்களில் பயணம் செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் அதிகம் சம்பாதிக்கும் பிரிவை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு வாங்கும் திறன் அதிகம். ஆனால் வெளியில் உள்ள ஹோட்டல்களை காட்டிலும் விமான நிலையங்களில் உணவின் விலை மிகவும் அதிகமாக இருப்பதற்கு இது மட்டுமே காரணம் அல்ல.
விமான நிலையங்களில் உணவின் விலை மிகவும் அதிகமாக இருப்பதற்கு இது ஒரு காரணம் மட்டும்தான். உணவின் இந்த அதிகப்படியான விலைக்கு பின்னால் இன்னும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன? என்பதை இந்த செய்தியில் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த தகவல்கள் உங்களுக்கு பயனளிக்கும் என நாங்கள் நம்புகிறோம்.
டிமாண்ட்!
ஒரு பொருளுக்கு எவ்வளவு டிமாண்ட் உள்ளது? என்பதை பொறுத்தே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. விமான நிலையங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் பகுதி என்பதால், பெரும்பாலான வெளிப்புற உணவுகள் அனுமதிக்கப்படாது. அல்லது கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும். எனவே பயணிகள் எதையாவது சாப்பிட அல்லது குடிக்க வேண்டுமென்றால், வேறு ஆப்ஷன்கள் இல்லை.
விமான நிலைய வளாகத்திற்குள் கிடைக்கும் அதிக விலை கொண்ட உணவு அல்லது பானங்கள்தான் அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு. அத்துடன் விமான நிலையங்களில் உள்ள இந்த ஸ்டோர்களுக்கு பாதுகாப்பு மற்றும் பல்வேறு காரணங்களால் சப்ளையும் கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும். சப்ளை மற்றும் தேவை ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் இந்த இடைவெளியும் விலை உயர்விற்கு காரணமாக உள்ளது.
வாடகை அதிகம்!
விமான நிலையங்களில் ஒரு ஸ்டோரை நடத்துவது என்பது அதிக செலவு ஆகும் விஷயங்களில் ஒன்று. இங்கு விற்பனையாளர்கள் அதிக வாடகை கொடுக்க வேண்டியுள்ளது. இதனை கவர் செய்யவும், லாபம் பார்க்கவும் வேண்டும் என்றால், பொருட்களின் விலையை அதிகமாக நிர்ணயம் செய்ய வேண்டிய தேவை விற்பனையாளர்களுக்கு உள்ளது.
ஊழியர்கள் சம்பளம்!
பொதுவாக நகரங்களுக்கு வெளியேயோ அல்லது நகரங்களின் மைய பகுதியில் இருந்து சற்று தள்ளியோதான் விமான நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இங்கு ஊழியர்கள் வந்து வேலை செய்ய வேண்டுமென்றால், வழக்கமான ஸ்டோர்களில் வழங்கப்படும் சம்பளத்தை விட அதிக சம்பளத்தை அவர்களுக்கு வழங்க வேண்டிய தேவை உள்ளது.
அத்துடன் விமான பயணிகளுக்கு சிறப்பான முறையில் சேவை செய்ய அவர்களுக்கு தனியாக பயிற்சி வழங்க வேண்டிய தேவையும் இருக்கிறது. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கான செலவை அதிகரித்து விடுகின்றன. இதன் எதிரொலியாக பொருட்களின் விலையும் உயர்ந்து விடுகிறது.
சிக்கலான நடைமுறைகள்!
நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, விமான நிலையங்கள் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் பகுதியாகும். இங்குள்ள ஸ்டோர்களுக்கு பொருட்களை கொண்டு வருவது என்பது பலகட்ட செயல்முறைகளுக்கு பின்னர்தான் சாத்தியம். இந்த சிக்கலான நடைமுறைகளும் வியாபாரம் செய்வதற்கான செலவை அதிகரித்து அதிகப்படியான விலைக்கு ஒரு காரணமாக உள்ளன.
போட்டி பெரிதாக இல்லை!
விமான நிலையங்களில் குறிப்பிட்ட அளவிற்கான இடவசதி மட்டுமே இருக்கும். எனவே குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஸ்டோர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்க முடியும். இதன் காரணமாக அங்கு போட்டி பெரிதாக இருக்காது. இதன் காரணமாகவும் அதிகப்படியான விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஏனெனில் பயணிகளுக்கு வேறு ஆப்ஷன் இல்லை.
வெளியில் ஒரு கடையில் விலை அதிகம் என்றால் இன்னொரு கடைக்கு நாம் போவோம். அங்கு விலை அதிகம் என்றால் வேறு ஒரு கடை. ஆனால் விமான நிலையத்தில் அப்படி செய்ய முடியாது. எனவே குறைவான போட்டி காரணமாகவும் விற்பனையாளர்கள் உணவு பொருட்கள் மற்றும் பானங்களுக்கு அதிகமான விலையை நிர்ணயம் செய்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக