ஈரோடு மாவட்டத்தில் உள்ள பச்சைமலை என்னும் ஊரில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
ஈரோட்டிலிருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் பச்சைமலை என்னும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல ஆட்டோ மற்றும் டேக்சி வசதி உள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
மூலஸ்தானத்தில் இளங்குமரனாக, ஞானப்பழமாக மேற்கு நோக்கி சொர்ண பந்த பீடத்தில் நின்ற கோலத்தில் உள்ளார். வலக்கையில் தண்டத்தையும், இடக்கையை இடுப்பில் ஊன்றியும், சக்தி வேலுடனும், சேவற்கொடியுடனும் கலியுக தெய்வமாக சுப்பிரமணிய சுவாமி என்ற திருநாமத்தில் விளங்குகின்றார்.
அர்த்த மண்டபத்தின் ஒரு புறம் ஆறுமுகம் பன்னிரு திருக்கரங்களைக்கொண்டு வள்ளி தெய்வானையுடன் சமேதரராய் அருள்கின்றார். மறுபுறம் கல்யாண சுப்பிரமணியராய் வள்ளி தெய்வானையுடன் மணக்கோலத்தில் வீற்றிருக்கின்றார். இவை இரண்டும் உற்சவ மூர்த்திகள் ஆகும்.
மலைமீது செல்ல மலைப்பாதையும், 180 படிகள் கொண்ட படிப்பாதையும் உள்ளன. படிப்பாதை முடிவில் 40 அடி உயரமுள்ள திருச்செந்தூர் முருகனின் ஞானத் திருக்கோலம் தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும்படி அமைந்திருப்பது சிறப்பு. மலைமீது 100 அடியில் சுவையான நீர் ஊற்று உள்ளது. மிகவும் குளிர்ச்சி பொருந்திய மலை.
வேறென்ன சிறப்பு?
கர்ப்பகிரகம் கருங்கற்களால் மிக நேர்த்தியாகவும், அழகாகவும் கட்டப்பட்டுள்ளது. கருங்கற்கள் பளபளப்பாக காட்சியளிப்பதால் பளிங்கு கற்களைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கின்றன.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் இருப்பது போல இரண்டு மயில் வாகனங்கள் அமைந்துள்ளன.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
தை மற்றும் ஆடி கிருத்திகை நாட்களில் சத்ரு சம்ஹார ஹோமம், முருகனின் அவதார தினமான வைகாசி விசாகத்தன்று லட்சார்ச்சனை, பௌர்ணமி அன்று கல்யாண சுப்பிரமணியசுவாமி தம்தேவியருடன் திருவீதி உலாவாக கிரிவலம் வருதல் ஆகியவை இத்தலத்தின் சிறப்பு நிகழ்வுகள் ஆகும். வருட திருவிழாக்களான தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தசஷ்டி (சூரசம்ஹாரம்) ஆகியவை முக்கிய விழாக்களாகும்.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
திருமணமாகி நீண்ட நாட்கள் குழந்தைப்பேறு கிட்டாமல் இருப்பவர்கள் பச்சை மலையில் 7 நாட்கள் சஷ்டி விரதம் மேற்கொண்டு பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
திருமண தடைகள் நீங்கியவர்கள் 6 செவ்வாய் கிழமைகளில் கல்யாண சுப்பிரமணியருக்கு நெய் தீபம் ஏற்றி, அபிஷேக ஆராதனைகள் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக