Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 14 மார்ச், 2022

மனைவியை கொன்று புதைத்த ராணுவ வீரர்..! அனாதையான பெண் குழந்தை

நெல்லை மாவட்டம் திருக்குருங்குடி கீழரத வீதி பகுதியை சேர்ந்தவர் பிரேமா. இவரும் அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் இருவீட்டாரும் இவர்களை சேர்த்துக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. ராணுவ வீரராக பணிபுரிந்து வரும் மாரியப்பன் சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.

இதனிடையே மனைவி பிரேமா மற்றும் மாரியப்பன் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திருநெல்வேலியிலிருந்து வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு குடும்பமாக இருசக்கர வாகனத்தில் ஒன்றரை வயது குழந்தையுடன் திருக்குறுங்குடி நோக்கி வந்துள்ளனர்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வரும் போதே மீண்டும் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரேமாவின் கணவர் மாரியப்பன் திருக்குறுங்குடி பெரிய குளத்திற்குள் அழைத்துச் சென்று குழந்தை கண் முன்னே பிரேமாவை அடித்து கொலை செய்து மண்ணில் புதைத்து உள்ளார்.

 பின்னர் நேற்று திருக்குறுங்குடி கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரனிடம் நேரில் சென்று மனைவியை அடித்து கொலை செய்து குளத்தில் புதைத்து விட்டதை தெரிவித்துள்ளார்.

உடனடியாக இது குறித்து திருக்குறுங்குடி காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் தகவல் தெரிவிக்கவே போலீசார் திருக்குறுங்குடி குளத்தில் புதைக்கப்பட்டிருந்த பிரேமாவின் உடலை தோண்டி எடுத்தனர். தொடர்ந்து ராணுவ வீரரான மாரியப்பனையும் போலீசார் கைது செய்தனர் .

ஏற்கனவே இருவரும் இருவீட்டின் சம்மதமில்லாமல் திருமணம் செய்துள்ளனர். இதனிடையே பிரேமா கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இவர்களது ஒன்றரை வயது குழந்தை ஆதரவற்று போனார். 

குழந்தையை ,பிரேமாவின் பெற்றோர்களும் மாரியப்பனின் பெற்றோர்களும் பெற்றுக்கொள்ளவில்லை. இதனால் குழந்தையை காவலர்கள் திருக்குறுங்குடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரை திருக்குறுங்குடி அருகே உள்ள திருவரங்கநேரி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் தேவி என்பவர் தன் குழந்தை போல சாப்பாடு ஊட்டியும், உணவு மற்றும் துணி வாங்கி கொடுத்தும் குழந்தை எங்கு சென்றாலும் அங்கு சென்று தனது குழந்தை போல பார்த்து வருகிறார்.

அதேபோல, காவலர்களும் செல்லப் பிள்ளையாகவே பார்த்துக்கொண்டனர். மேலும் சிறுமியை காப்பகத்தில் சேர்ப்பதற்கு போலீசார் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். ஆத்திரத்தில் கணவன் செய்த கொலையால் ஆதரவற்று நிற்கும் குழந்தையின் நிலமை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!