உத்தரப்பிரதேசம் அலிகார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரயில் தண்டவாளத்தில் பலத்த காயங்களுடன் இரண்டு இளைஞர்கள் மீட்கப்பட்டனர். போலீசார் அவர்களை சிகிச்சைக்காக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
காயமடைந்த இளைஞர்கள் யார் என்ற விபரம் தெரியவில்லை. இதனால் அவர்களது உறவினர்களுக்கு போலீசாரால் தகவல் தெரிவிக்க இயலவில்லை. எனவே, காயமடைந்த இளைஞர்களைப் பார்த்துக் கொள்ள உறவினர்கள் யாரும் மருத்துவமனையில் இல்லாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து அந்த இரண்டு இளைஞர்களும் கட்டிலில் இருந்து கீழே விழுந்து விடாமல் இருக்க, அவர்களது கை மற்றும் காலை கட்டிலுடன் சேர்த்து மருத்துவமனை ஊழியர்கள் கட்டி வைத்தனர். இது தொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பரவியதால் சர்ச்சை ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. அதில் 'ரயில் தண்டவாளத்தில் அடிபட்ட நிலையில் கொண்டு வரப்பட்ட இரு இளைஞர்களுக்கு, மூத்த டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். அவர்களுக்கு அளிக்கப்பட்ட படுக்கைகளில் பக்கவாட்டு தடுப்புகள் இல்லை. அவர்களின் விபரங்கள் தெரியாததால், உறவினர்கள் யாரும் வரவில்லை. மருத்துவமனை ஊழியர்கள், அவர்களை நாள் முழுவதும் பார்த்துக் கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே, கட்டிலில் இருந்து விழாத வகையில், அந்த இருவரும் கட்டிலுடன் கட்டப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக