🌟 வெண்ணை திருடும் கிருஷ்ணரை விரும்பாத பெண்களே கிடையாது. அப்படி அனைவரின் மனதிலும் இடம் பிடித்த கண்ணனின் திருபாதத்தை வீட்டில் ஏன் கோலமாக வரைகிறோம் தெரியுமா?
நாரத முனிவர் ஒரு சமயம் ஒவ்வொரு கிருஷ்ண பக்தர்களின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோரின் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார்.
அதேபோல் பிருந்தாவனத்தில் ஒவ்வொரு வீட்டிலும் கிருஷ்ணர் ஆடிப் பாடினார். இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்து பரவசமும், ஆனந்தமும் அடைந்தார். இப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்கிறார் நம் கிருஷ்ண பரமாத்மா. நான் எங்கும் இருப்பேன்.
எத்தனை கோடி பக்தர்கள் இருந்தாலும், அத்தனை பக்தர்களையும் பார்ப்பேன், காப்பேன் என்பதைக் குறிப்பிடவே, ஒவ்வொருவர் வீட்டிலும் கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ண திருவடிக் கோலம் போடுகிறார்கள். கிருஷ்ணர் 8 வகையாக பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
8 வகை கிருஷ்ணர் :
✰ சந்தான கோபால கிருஷ்ணர் : யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.
🌟 பால கிருஷ்ணன் : தவழும் கோலம்.
🌟 காளிய கிருஷ்ணன் : காளிங்க மர்த்தனம் புரியும் கிருஷ்ணன்.
🌟 கோவர்த்தனதாரி : கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.
🌟 ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்) : வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.
🌟 முரளீதரன் : இதில் கிருஷ்ணன் நான்கு கைகளுடன், ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதனாய் நின்றிருக்கும் திருக்கோலம்.
🌟 மதன கோபால் : அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் முரளீதரன்.
🌟 பார்த்தசாரதி : அர்ஜுனனுக்கு கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.
🌟 8 வகைகளில் காட்சி தரும் கிருஷ்ணரின் பாதத்தை வீட்டில் வைத்து பூஜித்தால் குழந்தை பாக்கியம் கிட்டும். சந்தோஷத்திற்கு குறைவே இருக்காது.