Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 31 டிசம்பர், 2018

பங்குகளை எப்படி தேர்ந்தெடுப்பது - Part 3: கடன் (Debt)

Image result for How to select a good stock  using Debt / Equity ratio

சென்ற பதிவில், ஒரு நிறுவனத்தின் EPS மற்றும் ROCE-ஐ வைத்து அந்த நிறுவனத்தின் லாபம் ஈட்டும் திறனை எப்படி தெரிந்து கொள்வது என்பது பற்றி  பார்த்தோம். இந்த பதிவில், ஒரு நிறுவனம் வாங்கியுள்ள கடன் பற்றி ஆராய்ந்து, அந்த கடன் நிறுவனத்திற்கு உதவியா, இல்லை உபத்திரமா என்பதை எப்படி கண்டு கொள்வது பற்றி பார்ப்போம்.


ஒரு நிறுவனம் எதற்காக கடன் வாங்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள,  கற்பனையான "குமரன் வேட்டிகள்" என்ற ஒரு நிறுவனத்தின் வரலாறு பற்றி பார்ப்போம். ஈரோட்டை சேர்ந்த சுய தொழில் ஆர்வமுள்ள சரவணன் என்பவர், தன்னுடைய சேமிப்பிலிருந்து Rs 5 லட்சத்தை போட்டு, "குமரன் வேட்டிகள்" என்ற ஒரு வேட்டி தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பிக்கிறார். அந்த நிறுவனதின் முதலீட்டை, Rs.500 மதிப்புள்ள 1000 பங்குகளாக பிரித்து, 60% பங்குகளை அவர் வசமும், 40% பங்குகளை "குமரன் வேட்டிகள்" நிறுவனம் வசமும் கணக்காக வைக்கிறார். இந்த 1000 பங்குகளும், நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்குகள் (Approved Shares). அதில் 60% (600 பங்குகள்) ஒதுக்கப்பட்ட பங்குகள் (Allocated  shares), 40% நிறுவனம் பெயரில் உள்ள ஒதுக்கப்படாத பங்குகள் (Unallocated  Shares ). முதல் வருடம், ஈரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் மட்டும் அவருடைய நிறுவனத்தில் உற்பத்தியாகும் வேட்டிகளை விற்கிறார். வேட்டிகளின் தரம் காரணமாக, அந்த வருடம் உற்பத்தி செய்த அனைத்து வேட்டிகளும் விற்று, Rs 7 லட்சம் வருவாயினை ஈட்டியது. அவரிடம் வேட்டி நெசவு செய்ய தறிகள் இல்லை; வாடகை தறிகளில் வேட்டி நெசவு செய்தது, நூல் வாங்கியது மற்றும் வியாபார செலவு அனைத்தும் Rs. 5 லட்சம். ஆக மொத்தம், அந்த வருடத்திற்கான நிகர லாபம் Rs.2 லட்சம்.
முதல் வருடத்தில்:
                    EPS = 200000 / 1000 = Rs 200
                    Capital Employed = Rs 500000 (சரவணனின் ஆரம்ப முதலீடு)
                    ROCE = (200000 / 500000) * 100 = 40%

இப்போது சரவணனின் திறமையையும், குமரன் வேட்டிகளுக்கு உள்ள வரவேற்பையும் பார்த்து, அவரின் நண்பர்,   சுப்பிரமணி, "குமரன் வேட்டிகள்" நிறுவனத்தில் பங்குதாரராக ஆசைப்படுகிறார். நிறுவனத்தின் 20% பங்கிற்கு (200 பங்குகள்) அவர் Rs. 2 லட்சம் கொடுக்கிறார். இப்பொழுது, நிறுவனத்தின் ஒரு பங்கு, Rs 1000 ஆக உயர்ந்து விட்டது. இந்த புதிய முதலீடு Rs 2 லட்சம், மற்றும் முந்தைய ஆண்டின் வியாபாரத்தின் மூலம் கிடைத்த பண கையிருப்பு Rs 7 லட்சம் ஆக மொத்தம் Rs 9 லட்சத்தில், Rs 2 லட்சத்தில் ஒரு தறியும், மீதமுள்ள 7 லட்சத்தில், உற்பத்தியை பெருக்கி, ஈரோட்டிற்கு அருகில் உள்ள 3 மாவட்டங்களில் விற்பனை செய்ய, குமரன் வேட்டிகள் நிறுவனம் முடிவு  செய்கிறது. இரண்டாம் ஆண்டில், 3 மாவட்டங்களில் குமரன் வேட்டிகளின் விற்பனை ஜோராக நடை பெற்று Rs 13 லட்சத்திற்கு வியாபாரம் ஆகியது. தற்போது, தறி அவர்களிடம் உள்ளதால், உற்பத்தி செலவு குறைந்து, லாபம் Rs 4 லட்சமாக உயர்ந்தது.
இரண்டாம் வருடத்தில்,
                 EPS = 400000 / 1000 = Rs 400
                 Capital Employed = Rs 500000 (சரவணனின் ஆரம்ப முதலீடு) + Rs 200000            (சுப்ரமணியின் முதலீடு) + 200000 (முதல் வருட லாபம்)
                  ROCE = (400000 / 900000) * 100 = 44%

இன்னும் விற்பனையை பெருக்க எண்ணி, பங்கு சந்தையில் பணம் புரட்ட குமரன் வேட்டிகள் நிறுவனம் முடிவு செய்து, 20% பங்குகளை (200 பங்குகள், பங்கு ஒன்று 2500 ரூபாய்) 5 லட்ச ரூபாய்க்கு மதிப்பீடு செய்து பங்கு சந்தையில் IPO (Initial Public Offering) மூலம் அறிமுகப் படுத்துகிறது. குமரன் வேட்டிகளின் கடந்த இரண்டு வருட செயல்பாட்டை வைத்து, நம்பிக்கை கொண்ட பங்கு சந்தை முதலீட்டார்கள், அதிக ஆர்வம் காட்டி 20% பங்குகளையும் வாங்கினர். இப்போது கிடைத்த Rs 5 லட்சம், முந்தைய ஆண்டின் வியாபார தொகை Rs 13 லட்சம் ஆக மொத்தம் 18 லட்சத்தை வைத்து, மூன்றாம் வருடம் விற்பனையை 10 மாவட்டங்களுக்கு விரிவு படுத்த குமரன் வேட்டிகள் முடிவு செய்கிறது. அவர்கள் எதிர்பார்த்தது போலவே, 10 மாவட்டங்களிலும் விற்பனை சிறப்பாக நடந்து, Rs 30 லட்சம் அளவிற்கு வியாபாரம் நடந்தேறியது. அதில் செலவு போக, 12 லட்ச ரூபாய் லாபம் கிட்டியது. இதனால், பங்கு சந்தையில் உள்ள குமரன் வேட்டிகள் நிறுவனத்தின் 200 பங்கினை வாங்குவதற்கு கடும் போட்டி ஏற்பட்டு, பங்கின் விலை கட கடவென உயர்ந்து ஒரு பங்கு Rs 4000 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
மூன்றாம் வருடத்தில்,
                  EPS  = 1200000 / 1000 = Rs 1200
                  Capital Employed = Rs 500000 (சரவணனின் ஆரம்ப முதலீடு) + Rs 200000 (சுப்ரமணியின் முதலீடு) + 200000 (முதல் வருட லாபம்) + Rs 400000 (இரண்டாம் வருட லாபம்) + 500000 (பங்கு சந்தையின் மூலம் கிடைத்த முதலீடு)
                  ROCE  = (1200000 / 1800000) * 100 = 66%

தற்போது, குமரன் வேட்டிகளின் வரவேற்பை கண்டு பெரும் நம்பிக்கை கொண்ட அந்நிறுவனம், நான்காம் ஆண்டில், தனது பொருளை தமிழகம் முழுமைக்கும் விற்கவும், வேட்டிகளுடன், சட்டையையும் உற்பத்தி செய்து விற்கவும் முடிவு செய்கிறது. அதற்கான கூடுதல் முதலீடாக 40 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இந்த நேரத்தில், கூடுதல் தேவையான 40 லட்சம் ரூபாயை
இரண்டு வழிகளில் திரட்டலாம்.
 -  ஒன்று, நிறுவனத்தில் பங்குதார்களின் ஒப்புதலுடன் கூடுதலாக பங்குகளை அறிமுகபடுத்தி, அதை மீண்டும் பங்கு சந்தையில் விற்று பணம் திரட்டுவது. இதற்கு பெயர் Equity Dilution. பங்குதார்கள் இதனை விரும்புவதில்லை, காரணம் - இதனால் EPS குறையும், பங்கிற்கான மதிப்பு சந்தையில் குறையும்.
 - இரண்டாவது, வங்கியில் கடன் பெறுவது.

குமரன் வேட்டிகள் நிறுவனம், பங்குகளை அதிகபடுத்துவதற்கு பதிலாக, கடன் வாங்க முடிவெடுத்தது. குமரன் வேட்டிகள் நிறுவனத்தின் தற்போதைய பங்கு மதிப்பிலும் , வியாபார திட்டத்திலும், நம்பிக்கை கொண்ட வங்கி, Rs 40 லட்ச ரூபாயினை, கடனாக வழங்கியது. துரதிஷ்டவசமாக, நான்காம் வருடம், குமரன் வேட்டிகளுக்கு போட்டியாக ஒரு நிறுவனம் ஆரம்பித்து, குமரன் வேட்டிகளின் விற்பனையை குறைத்து விட்டது. சட்டை விற்பனையும் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. நான்காம் ஆண்டில், குமரன் வேட்டிகளின் மொத்த வியாபாரம் 60 லட்சமாக இருந்தது. செலவுகள் போக கிடைத்த லாபம் 20 லட்சம்.
நான்காம் ஆண்டில்,
                வியாபார தொகை = Rs 60 லட்சம்
                செலவு = Rs 40 லட்சம்
                லாபம்  = Rs 20 லட்சம்
                Rs 40 லட்சத்திற்கான வட்டி = 6 லட்சம்
                நிகர லாபம் = 14 லட்சம்
                EPS  = 1400000/1000 = Rs 1400
                Capital Employed = Rs 500000 (சரவணனின் ஆரம்ப முதலீடு) + Rs 200000 (சுப்ரமணியின் முதலீடு) + 200000 (முதல் வருட லாபம்) + Rs 400000 (இரண்டாம் வருட லாபம்) + 500000 (பங்கு சந்தையின் மூலம் கிடைத்த முதலீடு) + 1200000 (மூன்றாம் வருட லாபம்) + 4000000 (வங்கி கடன்)
ROCE  = (14,00,000 / 70,00,000) * 100 = 20%

இந்த கற்பனை நிறுவனத்தின் வரலாறில் பார்த்தது போல, ஒரு நிறுவனம், அதனுடைய வியாபாரத்தை பெருக்குவதற்கு, ஒரு கட்டத்தில் கடன் பெறுவது அவசியமாகிறது. ஆனால், வாங்கிய கடன் அந்த நிறுவனத்தின் பங்குதார்களின் முதலீட்டில் எவ்வளவு விகிதம் என்பதை பொறுத்து அந்த நிறுவனத்திற்கு கடனின் காரணமாக தொல்லை வருமா என்பதை கண்டு கொள்ளலாம்.

நம்முடைய கற்பனையான குமரன் வேட்டிகளின் பங்குதாரர்களின் முதலீடு: Rs 500000 (சரவணனின் ஆரம்ப முதலீடு) + Rs 200000 (சுப்ரமணியின் முதலீடு) + 200000 (முதல் வருட லாபம்) + Rs 400000 (இரண்டாம் வருட லாபம்) + 500000 (பங்கு சந்தையின் மூலம் கிடைத்த முதலீடு) + 1200000 (மூன்றாம் வருட லாபம்) = 30 லட்சம்
வாங்கிய கடன்: 40 லட்சம்
கடன் மற்றும் பங்குதாரர்கள் முதலீட்டிற்கான விகிதம் = 40 / 30 = 1.33
ஒரு வருடத்திற்கான வட்டி விகிதம் = நிகர லாபம் / வட்டி = 20/6 = 3.33, அதாவது, குமரன் வேட்டிகளின்  லாபத்தில் கிட்டத்தட்ட 30% வட்டிக்கு செல்கிறது.

இங்கே பார்த்தது போல, ஒரு நிறுவனத்தின் கடன் எவ்வளவு, கடன் மற்றும் முதலீட்டிற்கான விகிதம் எவ்வளவு (Debt /Equity ), லாபத்தில் வட்டியின் பங்கு என்ன என்பதையும், EPS மற்றும் ROCE -யுடன் சேர்த்து ஆராய வேண்டும். குமரன் வேட்டிகள் நிறுவனம், கடன் வாங்காமல், கிடைத்த லாபத்தை மட்டும் மறு முதலீடு செய்திருந்து படிப்படியாக வியாபாரத்தை பெருக்கியிருந்தால், ROCE கீழே போயிருக்காது.

கடன் எப்பொழுதும், நிறுவனத்தின் மொத்த முதலீட்டிற்கு கீழே இருப்பது நல்லது. (Debt / Equity விகிதம் 1-க்கு குறைவாக இருப்பது). அதே போல, லாபத்தில் வட்டியின் பங்கும் 20%-க்கு குறைவாக இருப்பது உத்தமம்.
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக