Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 31 டிசம்பர், 2019

அன்பு..!

  Image result for அன்பு
சிவா என்பவர் ஒரு நாள் சாலை ஓரத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது தெரியாமல் ரவி என்ற இன்னொரு நபர் மீது இடித்துவிட்டார். உடனே சிவா, ரவியிடம் ஐயா! தெரியாமல் இடித்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறினார். உடனே ரவி பரவாயில்லை என்று கூறினார். அந்த சமயத்தில் இருவருமே கண்ணியத்துடனும், புன்னகையுடனும் விடைபெற்றார்கள். அவர்களிடையே மனஸ்தாபத்துக்கான காரணமில்லாமல் போயிற்று.

அன்று இரவு சிவா வீட்டுக்கு வந்தார். இரவு உணவு முடித்து திரும்புகையில் அவருடைய மகன் கைகளைப் பின்னால் கட்டியப்படி, அவருக்குப் பின்னால் நின்றிருந்தான். அந்த நேரத்தில் தந்தை திரும்புகையில் அவனைத் தெரியாமல் இடித்து விட்டார்.

உடனே சிவா தன் மகனை வழியில் நிற்காதே.. ஓரமாய்ப் போ.. என்று கத்தினார். அவருடைய வார்த்தையில் அனலடித்தது. சிறுவன் முகம் வாடிப்போனது. அவனுடைய கண்களில் சோகத்துடன், கண்ணீர் மல்க தன்னுடைய அறைக்கு சென்றான்.

அன்றிரவு சிவா தூங்கும்போது அவர் மனதுக்குள் ஒரு சிந்தனை ஓடியது. வழியில் யாரோ ஒருவரிடம் நாகரீகமாகவும், அன்பாகவும் நடந்து கொள்ளத் தெரிந்த எனக்கு சொந்த மகனிடம் அப்படி நடந்து கொள்ளத் தெரியவில்லையே என்று மனதுக்குள் எண்ணினார். உடனே நேராக எழுந்து மகனின் படுக்கையறைக்கு சென்றார்.

உள்ளே மகன் தூங்காமல் அழுதுக் கொண்டிருந்தான். அவனுடைய கண்கள் சிவந்திருந்தன. அவனருகில் மண்டியிட்ட தந்தை என்னை மன்னித்துவிடு நான் உன்னிடம் அப்படிப் பேசியிருக்கக் கூடாது என்றார். அந்த வார்த்தைகளை கேட்ட உடனே சிறுவனின் கண்களிலிருந்த கவலை சட்டென்று மறைந்தது. வேகமாக கட்டிலிலிருந்து கீழே குதித்து கட்டில் அடியில் வைத்திருந்த பூங்கொத்தை எடுத்து தந்தையின் கையில் வைத்தான்.

இதென்ன? என்று தந்தை வியந்தார்.

இன்னைக்கு வெளியே நடந்து கொண்டிருந்தபோது இந்தப் பூக்களைப் பார்த்தேன். பல நிறங்களில் இருந்த பூக்களை எடுத்து உங்களுக்காக ஒரு மலர்க்கொத்து செய்தேன். அதிலும் குறிப்பாக உங்களுக்கு நீல நிறம் பிடிக்கும் என்பதற்காக அதை நிறைய சேகரித்தேன். அதை உங்களிடம் ரகசியமாக சொல்வதற்காகத் தான் உங்கள் பின்னால் வந்து நின்றேன் என்று அந்த சிறுவன் கூறினான். இதைக்கேட்டதும் சிறுவனின் தந்தை மனம் உடைந்தார்.

சிறுவனையும், மலர்களையும் ஒருசேர அணைத்த அவருடைய கண்களில் கண்ணீர் வழிந்தது. ஒரு மழலையின் அன்பைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில், தான் இருந்ததற்காக அவர் வருந்தினார். குடும்பம் என்பது கடவுள் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம். அதை சொர்க்கமாக்குவதும், நரகமாக்குவதும் நம்முடைய செயல்களில் தான் இருக்கிறது.

நீதி :

வாழ்க்கையில் எல்லாம் இருந்தாலும் அன்பினால் நிரப்பப்படாவிட்டால் அது வெறுமையாகவே இருக்கும். பணமே மகிழ்ச்சியைத் தரும் என்பது தவறான ஒன்று. மகிழ்ச்சியை சதுர அடிகளில் வாங்க முடியாது. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுங்கள். அன்பை அதிகமாய் சம்பாதியுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!