Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 5 டிசம்பர், 2019

நடப்பது எல்லாம் நன்மைக்கே..!

 Image result for "நடப்பது எல்லாம் நன்மைக்கே..!"
ரு நாள் காட்டு ராஜாவாக இருக்கும் சிங்கம் வேட்டையாட சென்றபோது, கால்விரலில் அடிப்பட்டு, விரலில் காயம் ஏற்பட்டது. அதனை அறிந்த, காட்டில் உள்ள மற்ற விலங்குகள் துக்கம் விசாரிக்க ஒவ்வொரு மிருகமாக சிங்கத்தின் குகை வாசலில் வரிசையில் நின்று, குகையின் உள்ளே சென்று, சிங்கராஜாவைப் பார்த்து விட்டுத் திரும்பின.

அப்போது குள்ளநரி, சிங்கராஜாவின் அருகே சென்றதும் பெருமூச்சு விட்டபடி, ம்ம்.. நடப்பது எல்லாம் நன்மைக்கே என்றது. சிங்கராஜாவுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது. நமது காலிலுள்ள ஒரு விரலே போய்விட்டது. இந்த குள்ளநரி, நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று கூறுகிறதே. அதைப் பிடித்து குகைச்சிறையில் அடைத்துவை எனக் கட்டளை இட்டது சிங்கராஜா. சிப்பாய்க் குரங்குகள் பாய்ந்து, நரியைப் பிடித்து இழுத்துச் சென்றன. ஒவ்வொரு காரியமும் நமது நன்மைக்குத்தான் நடக்கிறது என்ற உண்மையைத்தானே சொன்னேன் என்று புலம்பியபடி சென்றது குள்ளநரி.

சிங்கராஜாவின் காலிலுள்ள புண் குணமாவதற்கு, மூன்று மாதகாலம் ஆனது. காலில் ஒருவிரல் இல்லாமையால், சிங்கராஜா கம்பீரமாக நடக்க இயலாமல், நொண்டி நொண்டி நடந்தது. அதனால் மிருகங்கள் எல்லாம் மறைமுகமாக நொண்டி ராஜா என அழைத்தன. இப்படி சிங்கராஜாவை எல்லாரும் கேலி செய்வதைக் கேட்டு, சிங்கராணி மிகுந்த வருத்தம் அடைந்தது.

உண்மையில் இப்படி பெயர் வைத்தது, குறும்புக்கார முயல் என்பது யாருக்கும் தெரியாது. சிறையில் அடைப்பட்டிருந்த குள்ளநரிக்கு, சைவ உணவே தினசரி ஒரு வேளை தரப்பட்டது. வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், வார்த்தையைக் கொட்டிவிட்டு, வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டோமே, என ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது குள்ளநரி.

காலை நொண்டிக் கொண்டே ஒரு நாள் காட்டில், வெகுதூரம் வேட்டைக்கு வந்துவிட்ட சிங்கம், ஒரு இடத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்த ஒரு கூண்டுக்குள், ஆட்டுக்குட்டி ஒன்று இருந்ததைக் கண்டது. ஆவலுடன் ஆட்டுக்குட்டியின் மீது பாய்ந்து, கடித்துக் குதறித் தின்றது. பின்பு திரும்பிய சிங்கம் அந்த இரும்புக்கூண்டு மூடப்பட்டிருந்ததைக் கண்டு, திகைத்தது. மடத்தனமாக கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டோமே என்று நினைத்து வேதனைப்பட்டது.

அப்போது கூண்டில் அடைப்பட்ட சிங்கத்தை, தங்கள் வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற காவலர்கள், நம் இளவரசர் கேட்டப்படி அவர் விளையாடுவதற்கு ஒரு சிங்கம் கிடைத்துவிட்டது. இதைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று நினைத்தனர். காவலர்கள் கூண்டிலிருந்த சிங்கத்தை இறக்கியபோதுதான் அது நொண்டி நொண்டி நடந்ததை அறிந்தனர். இதைக்கண்டு வருந்திய அவர்கள், இது ஊனமுற்ற சிங்கம். இதை நம் இளவரசர் விளையாடப் பழக்கப்படுத்த முடியாது. எனவே, இதைக் காட்டில் கொண்டு போய் விட்டுவிடுவதே நல்லது என்று கூறியப்படி சிங்கத்தை மீண்டும் காட்டுக்குள் கொண்டு சென்று விட்டுவிட்டுத் திரும்பினர். சிங்கத்திற்கு மகிழ்ச்சி பொங்கியது.

நமது கால் விரல், இல்லாததால்தான் நம்மை விட்டு விட்டார்கள். நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று அன்றைக்கு நரி சொன்னபோது, ஆத்திரப்பட்டு அதைக் கூண்டில் அடைத்தோம். ஆனால் அது சொன்னது சரியென்று இப்போதுதான் உணர முடிகிறது என்று நினைத்தப்படி தனது குகைக்கு சென்றது.

உடனடியாக, சிப்பாய்க் குரங்குகளை அழைத்து, சிறையைத் திறந்து குள்ளநரியை வெளியில் அனுப்புங்கள் என்று உத்தரவிட்டது. அதன்படி சிறையை விட்டு, வெளிவந்த குள்ளநரியை வரவேற்ற சிங்கராஜா, அறிவுக் கடலே, இன்று முதல் நீங்கள்தான் எனது மந்திரி, நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று அன்று நீங்கள் சொன்னது உண்மையாகி விட்டது. யார் எதைச் சொன்னாலும் அவசரப்படாமல் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன் என்று மகிழ்ந்தது.

நீதி:
நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைத்தால் துன்பம் தரக்கூடிய செயல் எதுவும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக