Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 22 ஜனவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 28




  திதேவி, பார்வதிதேவியிடம் நான் வேண்டிய வரத்தினை தருவதாக கூறிய எந்தன் சுவாமியும் இங்கு இல்லை. அதனால் நான் எப்படி இவ்வாறு தனித்து என் பதியானவர் இன்றியும், நான் வேண்டி பெற்ற பிள்ளை வரம் இல்லாமல் உள்ளேனோ அதே போல நீயும் இருப்பாயாக! செவி கொடுத்து கேட்டுக்கொள் தேவி நான் எவ்விதம் விரும்பிய என் பதியானவர் இல்லாமல் பல இன்னல்களுக்கு ஆளாகி துன்பத்தில் உள்ளேனோ அதே போல, நீரும் உன் மனம் கவர்ந்த நாயகரை மணந்து புத்திர பாக்கியம் இன்றி துன்பப்படுவாயாக என்று காமதேவனின் இல்லத்தாளான ரதிதேவி சாபமிட்டார்.

அக்கணத்தில் அங்கு தேவேந்திரன் உதயமானார். என்ன செய்தாய் ரதிதேவி நீர் இட்ட சாபத்தால் நிகழ வேண்டிய சுபச்செயலானது இன்னும் கால விரயத்தை ஏற்படுத்தும் தேவி. தன்னிலை மறந்து நீர் இட்ட சாபத்தால் இன்னும் என்னென்ன நிகழுமோ என தேவேந்திரன் கூறினார்.

தேவேந்திரன் கூறிய கூற்றுகளில் இருந்து உணர்ந்த மெய்பொருள்களை அறிந்து தன்னிலைக்குத் திரும்பிய ரதிதேவி தன் பதியான வரை இழந்ததும் தன் இயல்புகள் யாவற்றையும் இழந்ததால் தன்னையும் அறியாமல் தான் பார்வதிதேவிக்கு சாபம் இட்டதை எண்ணி மனம் வருந்தினார் ரதிதேவி.

தன்னுடைய இயல்பு நிலைக்கு திரும்பிய ரதிதேவி, பார்வதிதேவியிடம் சென்று என்னை மன்னித்து அருளுமாறு வேண்டி நின்றார். ரதிதேவி அடைந்த இன்னல்கள் மற்றும் இழப்பின் வலியை உணர்ந்த பார்வதிதேவி ரதிதேவியை ஏதும் உரைக்காமல் அவரை அரவணைத்து அமைதி கொள்வாய் ரதிதேவி எனக் கூறி ரதிதேவியை சாந்தம் செய்தார்.

தேவலோகத்தில் இருந்த தேவர்கள், நாரத ரிஷி மற்றும் காப்பவரும், படைப்பவருமான விஷ்ணு, பிரம்மா ஆகியோர் சிவபெருமானை காண கைலாய மலைக்கு சென்றனர். கைலாய மலையில் வீற்றிருந்த சிவபெருமானை கண்ட தேவர்கள், நாரத ரிஷிகள் மற்றும் விஷ்ணுவும், பிரம்மாவும் சிவபெருமானை கண்டு வணங்கினார்கள். பின்பு பல காலங்களாக தங்களின் தரிசனத்தை காணாத நாங்கள் இன்று உங்களின் தரிசனத்தால் புண்ணியம் செய்தவர்கள் ஆகிறோம் என்று பிரம்ம தேவர் கூறினார்.

காமதேவனால் தாங்கள் வீற்றிருந்த யோக நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் யாவையும் மன்னித்தருள வேண்டுகிறோம். தங்களை யோக நிலையில் இருந்து எழுப்பவே காமதேவனை அனுப்பி இச்செயலானது அரங்கேற்றப்பட்டது என திருமால் கூறினார்.

என்னுடைய யோக நிலையை விடுத்து தாட்சாயிணி தேவியை மணந்து அதனால் ஏற்பட்ட விளைவுகள் அனைத்தையும் அறிந்த நாராயணா! என்னை யோக நிலையில் இருந்து எழுப்பச் செய்த செயலால் காமதேவன் எரிந்து சாம்பலாகி போனான். என்னை யோக நிலையில் இருந்து எழுப்ப என்ன அவசியமாயிற்று இந்திரதேவா என சிவபெருமான் தன் ரௌத்திர குரலால் உரைக்க இந்த கைலாய மலையே அதிர்ந்து போனது.

நாங்கள் செய்த செயல் உசிதமானது இல்லை என்றாலும் அதன் உட்பொருளை கொண்டே தங்களை நாங்கள் யோக நிலையில் இருந்து எழுப்ப வேண்டியதாயிற்று என்று கூறிய இந்திரதேவன் உலகங்களை படைத்து அதில் ஜூவராசிகள் இன்பத்துடன் வாழ்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்திய சர்வங்களை தன்னகத்தே கொண்ட சர்வேஸ்வரரான எம்பெருமானே எங்கள் கோரிக்கைகளை தயவு கூர்ந்து கேட்க வேண்டுகிறோம் என கூறினார்.

பிரபஞ்சத்தில் உதித்த உயிர்களுக்கிடையே காதல் மற்றும் காமம் போன்ற உணர்வுகளை உருவாக்கி அவைகளின் இனத்தினை விரிவடையச் செய்ய வழிவகை செய்யும் மன்மதன் தங்களின் மீது காதற் கணைகளை அனுப்பியது அவனின் நன்மைக்காக செய்யப்பட்ட கர்மமன்று, அது தேவர்களின் இன்னல்களை போக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்திற்காக செய்யப்பட்ட செயலாகும்.

அதாவது தங்களால் வரம் அளிக்கப்பட்டு தங்களின் புதல்வர்களால் மட்டுமே மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கிய தாரகாசுரனால் எண்ணிலடங்கா இன்னல்களை தேவர்கள் அனுபவித்து வருகின்றனர்.

தேவலோகத்தில் உள்ள தேவர்கள் மட்டுமின்றி பூலோகத்தில் உள்ள ஜீவராசிகள் மற்றும் முனிவர்கள், ரிஷிகளும் தங்கள் தியானம் மற்றும் வேள்வி முதலானவற்றை நடத்த முடியாமல் துன்பத்திற்கு ஆளாயினர். இவையாவையும் நினைவில் கொண்டு தேவேந்திரனின் உத்திரவின்படி காமதேவன் தங்கள் மீது காதற் கணையைத் தொடுத்தார் என்று கூறினார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!