Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 10 பிப்ரவரி, 2020

காவிரி டெல்டா - பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவதால் என்ன பயன்...?




மிழக முதலமைச்சரின் காவிரி டெல்டா குறித்த அறிவிப்பால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இந்த சூழலில் இதுதொடர்பான சில நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.
ஆபத்தான திட்டங்கள்
தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இது விவசாயத்தை அழிக்கும் திட்டங்கள் என்று கூறி அப்பகுதியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு கோரிக்கைகளும் தமிழக அரசிடம் முன்வைக்கப்பட்டு வந்தன.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்
இந்நிலையில் சேலம் மாவட்டம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் பழனிசாமி, காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று அறிவித்தார். விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டும், தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் டெல்டா பகுதிகள் "பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக" மாற்றப்படும் என்று குறிப்பிட்டார்.
விவசாயிகள் வரவேற்பு
இதற்கு விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் இதுதொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் உடனடியாக சிறப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவதன் மூலம் என்னென்ன பயன்கள் விளையும் என்று இங்கே காணலாம்.
விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படும்
விவசாய நிலங்கள் விவசாயத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படும் என்பது உறுதி செய்யப்படுகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விவசாயம் அல்லாத திட்டங்களான ஷேல் கேஸ், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்கள் இந்தப் பகுதியில் வராமல் தடுக்கப்படும். விவசாயம் பாதுகாக்கப்படும்.
புதிய விவசாய திட்டங்கள்
வேளாண்மை சாராத எந்தவொரு திட்டங்களும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியில் செயல்படுத்த முடியாது. விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் தேவையான நீர், மின்சாரம், விவசாய உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் செய்து தரப்படும். வேளாண் தொழிலை பாதுகாக்க புதிய திட்டங்கள் உருவாக்க வழி ஏற்படும்.
தனிச்சட்டம் வேண்டும்
இதற்காக சட்டமன்றத்தில் தனி சட்டம் கொண்டு வரப்படுவதன் மூலம் டெல்டா பகுதியை சேர்ந்த 17 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாதுகாக்கப்படும். ஏற்கனவே 21 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் டெல்டா பகுதியில் இருந்தன. இது குறைந்து தற்போது 17 லட்சம் ஹெக்டேராக இருக்கிறது. இந்த நிலப்பரப்பு மேலும் குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.
லாபம் தரும் விவசாயம்
விவசாயம் சார்ந்த தொழில்கள் அதிகம் வளர்ச்சி அடையும். விவசாயத்தை நம்பி உள்ள 25 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளர்கள் காப்பாற்றப்படுவார்கள். மத்திய, மாநில அரசுகள் போதிய ஒத்துழைப்பு வழங்கும்பட்சத்தில் விவசாய தொழில் லாபகரமானதாக மாறும். உணவு உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!