Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

துன்பத்தின் வலி !

நமக்கு ஒரு துன்பம் நேரும்போது அதனுடைய வலி நமக்கு தெரியும். ஆனால் மற்றவர்களுக்கு அது தெரியாது. அதற்காக சில ஆறுதல் வார்த்தைகளை மட்டுமே கூறுவார்கள்.

இங்கும் ஒருவருக்கு துன்பம் நேருகிறது. அந்த துன்பத்தின் வலியை மற்றவர்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

சோழ நாட்டின் அரசவைக்கு ஒரு ஏழை ஓடி வந்தான். அரசன்! அவன் அரசவையை நாடி வந்ததற்கான காரணத்தைக் கேட்டார். அவன், அரசே! நம் நாட்டில் திருட்டு அதிகரித்துவிட்டது. நேற்று, என் வீட்டில் நான் சேமித்து வைத்திருந்த பொருள்களெல்லாம் திருட்டுப் போய்விட்டது என்றான்.

அரசன்! மந்திரி ஒருவரை அழைத்து, இவன் கூறுவது உண்மையா? என்று கேட்டார். அதற்கு அரசவையில் இருந்த இளைய அமைச்சர் ஒருவர் குறுக்கிட்டு, இவன் கூறுவது பொய் அரசே. ஒவ்வொருவரின் வீட்டிலும் நெல்லிக்காய் அளவு தங்கத்தையாவது மறைத்து வைத்திருப்பார்கள் என்றார்.

அரசருக்கு ஒன்றுமே புரியவில்லை. வயதில் மூத்த அமைச்சரை கேள்வியோடு நோக்கினார். அவரும், அரசே... விசாரித்துவிட்டு நாளை பதில் சொல்கிறேன் என்றார். அரசவை கலைந்தது. மறுநாள் சபை கூடியதும், இளைய அமைச்சர் ஓடிவந்து, அரசே.... நாட்டில் திருட்டுப் போவது உண்மை தான். நேற்று அந்த ஏழை கூறியதும் உண்மை தான் என்றார்.

அரசருக்கு ஒரே வியப்பு. நேற்று இந்த அமைச்சர் பேசியதற்கும், இன்று இவர் பேசுவதற்கும் முரணாக இருக்கிறதே என்று எண்ணி, மூத்த அமைச்சரைக் கேட்டார். அவர் அரசரைப் பார்த்து, நம் நாட்டில் திருட்டுப் போவது உண்மை தான் அரசே. அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அமைச்சர் கூறியதைக் கேட்ட அரசர், என்னுடைய ஆட்சியில் திருட்டுப் போவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்றார். மேலும் அரசர், அமைச்சரைப் பார்த்து, இளைய அமைச்சரின் முரண்பாடான கருத்துக்கு என்ன காரணம் என்று கேட்டார். அதற்கு மூத்த அமைச்சர், அரசே! அந்த அமைச்சரின் வீட்டில் நெல்லிக்காய் அளவு தங்கத்தை பாதுகாப்பாக வைத்து இருந்தார். அதை நான் நேற்று அவருடைய வீட்டிலிருந்து எடுத்து வந்து விட்டேன். அதனால்தான் அவர் இப்படிக் கூறினார்.

தத்துவம் :

பிறர் துன்பப்படும்போதும், வருந்தும்போதும் அவர்களுக்காக இரக்கப்படுவதில்லை. தனக்கு நேரும்போது தான் அந்த வேதனை தெரிகிறது. துன்பத்தின் வலி தனக்கு வரும்போது தான் தெரியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக