Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 16 ஏப்ரல், 2020

அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், கபிலர்மலை, நாமக்கல்

தல சிறப்பு

மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி குழந்தை வடிவில் குழந்தை குமாரராக இரண்டரை அடி உயரத்தில் கையில் வேலைத் தாங்கிய வண்ணம் அழகுமிக்க முருகனாக காட்சி அளிக்கிறார்.மூலஸ்தானம் அமைந்துள்ள பாறைக் குகையின் துவாரம் ஒன்றில் எப்போதும் தென்றல் காற்று வந்து கொண்டுள்ளது.

மலையில் உள்ள தென்றல் காற்றும் எம்பெருமான் முருகன் மீது மூலஸ்தான குகைக் துவாரத்தில் இருந்து வீசிக் கொண்டுள்ளது. அந்த தென்றல் காற்று மூலஸ்தானத்தில் உள்ள தீபத்தை அசைத்துக் கொண்டு உள்ளது. அதனால் தென்றல் காற்று பரவும் குழந்தை குமாரர் என சிறப்பித்து பாடப்பெற்றுள்ளார்.

பொது தகவல்

கபிலர்மலை மேல் புராதன புகழ்பெற்ற முருகன் ஆலயத்திற்கு செல்ல படிகள் மிக நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 120 படிகள் உள்ளது. இத்திருக்கோயிலில் அரசமரத்து பிள்ளையார், இடும்பன் சன்னதி, சித்தி விநாயகர், காளஹஸ்தி ஈஸ்வரன் சன்னதி, கமலாம்பிகா அம்மன் சன்னதி ஆகியவை உள்ளது. 

தலபெருமை

கபிலர்மலை குறித்து சங்க நூலகம் சிலவற்றில் குறிப்புகள் உள்ளன. அதன்படி கபிலர் என்னும் புலவர் செல்வக் கடுங்கோவாழியாதன் எனும் சேர மன்னனிடம் நூறு ஆயிரம் காணம் பொன் மற்றும் நாடும் பெற்ற அந்தணர், இம்மலையில் தங்கி பெரும வேள்வி, தவம் செய்து வாழ்ந்ததாக சான்றுகள் தெரிவிக்கின்றன.

சேர மன்னன் செல்வக் கடுங்கோவாழியாதன் இக்குன்றின் மேல் ஏறி நின்று கபிர் என்னும் புலவருக்கு தானம் செய்து கொடுத்த நாட்டை காட்டியதாக கூறப்படுகிறது. அதற்கு ஆதாரமாக ஆறுநட்டான் மலையில் உள்ள கடுங்கோவாழியாதன் அமைத்த கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. இக்கல்வெட்டு மூலம் பதிற்றுப்பத்து என்னும் சங்க நூலில் 7ம் பாட்டின் இறுதியில் கபிலர் பாடிய பத்து பாடல்களை கேட்டு மகிழ்ந்தார். அதற்காக நூறு ஆயிரம் காணம் பொன் கொடுத்து, இக்குன்றின் மேல் ஏறி நின்று தன் கண்ணில் கண்ட நாடெல்லாம் காட்டி கொடுத்தான் எனவும் சான்றுகள் தெரிவிக்கிறது.

இம்மலை இயற்கையான செந்நிறம் கொண்டதாக உள்ளது. கபிலம்-செந்நிறம். அதற்கு பரிபாடல் 3ம் பாட்டில் பதினொரு உருத்திரைப் - பாதினொரு கபிலர் என குறப்பிடப்படுகிறது. கபிர்மலையை அடுத்து வடக்கரையாற்றில் வாழ்ந்த அல்லாளன் என்ற திருமலையினைய நாயகன் வேட்டுவ குல தலைவன் விளெரசன் கலியுக சகாப்தம் 5560ல் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

அவர் திருச்செங்கோடு வேலவருக்குப் பல திருப்பணிகளை செய்தவர். திருச்செங்கோடு திருப்பணி மாலையில் பாடப் பெற்றவர். மதுரை திருமலை நாயக்கரிடம் அதிகாரம் பெற்றவர். அவர் கபிலர்மலையில் குழந்தை குமாரரை குல தெய்வமாகக் கொண்டு பல திருப்பணிகளை செய்ததாக கூறப்படுகிறது. அவரை பற்றிய பாடல் ஒன்று கபிலமலை கோவையில் 77ம் செய்யுளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கபிலைமலைக் கோவை: பிள்ளை பெருமான் சிறை மீட்டான் கபிராயர் என்பவர் கபிலைமலைக் கோவை என்ற அகப்பெருமாள் இலக்கிய நூலை சுவைமிகப் பாடியுள்ளார். அவரது காலம் கலியுக சகாப்தம் 4740. தற்போது கலியுக சகாப்தம் 5095 ஆகும். ஏறத்தாழ 350 ஆண்டுகளுக்கு முன் அவர் வாழ்ந்தவர்.

பாகை எனும் நகரத்தில் அவர் பிறந்தார். அவர் கபிலைமலை குழந்தை குமாரரைக் குலதெய்வமாக கொண்டவர். கபிலைமலைக் கோவை இந்நூல் காப்பு செய்யும் முதலாக 105 செய்யுளை கொண்டது. இந்நூலின் பாட்டுடை தலைவனாகிய முருகக் கடவுளை ஞானக் குழந்தை குமாரர் என்றும் இவர் பூமியின் மேல் முற்றும் துறந்த முனிவர்களாலும், தேவர்களாலும் அரசர்களாலம் துதிக்கப்படுவராவர்.

தல வரலாறு

கபிலர்மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு தென்புறத்தில் அமைந்திருக்கும் பாறையில் தான் முக்காலத்தில் கபிலமகரிஷி என்ற முனிவர் அமர்ந்து முருகப் பெருமானை நினைத்து பெரும் வேள்வி செய்து பின் தவம் செய்து வந்தார். இன்றும் அந்தப் பாறையில் கபில மகரிஷி தவம் செய்த இடம் தனித்தன்மையாக தெரிகிறது. பண்டைய காலம் முதல் இன்று வரை தொன்று தொட்டு கபில மகரிஷிக்கு தினசரி பூஜை நடந்து வருகிறது. திருவிழாக் காலங்களில் கபில மகரிஷி தவம் செய்த இடத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

கபில மகரிஷி இம்மலையில் தானாகவே தோன்றிய சுயம்பு மூர்த்தியாக விளக்கிய முருகப்பெருமானை வணங்கி வந்தார். அதன்பிறகு, அவரால் முருகப்பெருமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கி வந்ததாக கூறப்படுகிறது. கபில மகரிஷி இங்கு தங்கி தவம் இருந்து முருகனை வழிபட்டு வந்ததையொட்டியே இம்லைக்கு அவர் பெயரால் கபிலர்மலை என சிறப்பு பெயர் பெற்று புகழுடன் விளங்குகிறது. இங்கு மலையுச்சியில் கபில தீர்த்தமும் உண்டு. இச்செய்திகள் வடமொழி தல புராணம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கபிலர்மலை குழந்தைக் குமாரர் வருக்க கோவை நூலில் தலவராறு குறிப்புகள்: கருவை என்ற ஊரில் கபில என்ற காரம் பசுவொன்று பிறந்து நன்கு வளர்ந்து வந்தது. பின் அங்கு மழை பெய்யாததால், பசுமையான புல்லின் தழை காண்பது அரிதாயிற்று. மேய்ச்சலுக்குரிய புல் கிடைக்கவில்லை. நெடு நாளாக பசியால் வருந்திய கபிலைப் பசு மேய்ச்சலின் பொருட்டு விறகிரி என்ற பினாக மலையை சென்று அடைந்தது. அம்மலையில் கடும்பசியால் வருந்திய கொடும்புலி ஒன்று பசுவைப் பற்றியது.

அப்பசுவின் துயர் நிலையை கண்ட கடும்புலி அம்மலைவாழ் தெய்வத்தின் அருளால் இரக்கமடைந்து, அதை விட்டது. அப்பசு அம்மலையில் மேய்ந்து இரவில் அம்மலையை அடுத்த ஊரில் தங்கி கழித்து முடிவில் உயிர்பதம் பெற்றது. எனவே கபிலையின் சம்பந்தத்தைப் பெற்ற மலைக்கு கபிலை மலை எனவும், ஊருக்கு கபிலக் குறிச்சி எனவும் பெயர் உண்டானது என்பது வரலாறு. இதுபற்றிய செய்தி கபிலைமலைக் கோவை 104வது பாடலில் வரலாறு தெரிவிக்கிறது.

திருவிழா

கிருத்திகை, சஷ்டி, அமாவாசை, பவுர்ணமி, சூரசம்ஹாரம், தைப்பூசம். 

நேர்த்திக்கடன்

பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் அபிஷேகம் செய்து, பால்குடம், காவடி எடுத்து, அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 

பிரார்த்தனை

பக்தர்கள் குழந்தை பாக்கியம் கிடைக்க, திருமணத்தடை நீங்க, வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள பாலசுப்ரமணியரை வழிபட்டுச் செல்கின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக