Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 21 மே, 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி025

சடைய நாயனார் !!

சைவ வளமும், செல்வ வளமும் செழித்தோங்கி கொழிக்கும் திருநாவலூர் என்ற நகரில் ஆதிசைவர் மரபில் சடையனார் என்னும் சிவத்தொண்டர் பிறந்தார். இவர் சிவபெருமானின் மீது பற்று கொண்டு இடைவிடாது பரமனை வணங்கி வந்தார். குழந்தை பருவம் முடிந்து இளைஞர் பருவம் அடைந்ததும் திருமண காலமும் வந்தது.

திருவாரூரில் வாழ்ந்த ஞான சிவாச்சாரியாருக்கு மகளாகப் பிறந்தார் இசைஞானியார். இவர் கௌதம கோத்திரத்தினை சேர்ந்தவர். திருவாரூரில் உள்ள சிவபெருமானின் மீது பக்தி கொண்டவராக இருந்தார். இசைஞானியார் திருமணப் பருவத்தினை அடைந்ததும் ஞான சிவாச்சாரியார், சிவபக்தரான சடைய நாயனார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்.

தம் தலைவரான சிவபெருமானையே தமக்குத் தோழராகக் கொண்டு, அப்பெருமானையே தம்பெரிய தோள்களைத் தழுவும் பூங்கொம்பர் போன்ற பரவையாரிடத்துத் தூதாகச் செல்லுமாறு அனுப்பிய எம்பெருமானை, சேரமான் பெருமாள் நாயனாரின் ஒப்பற்ற துணைவரான நம்பியாரூரரை, உலகத்தில் எல்லா உயிர்களும் வாழ்வடையும் பொருட்டு பெற்ற பேறுடையவர்கள் சடையனார் மற்றும் இசைஞானியார் ஆவர்.

தமிழுலகம் செய்த தவப்பயனாக சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவரது மகனாகப் பிறந்தார். தமது மகனை நரசிங்க முனையார் தம்மோடு அழைத்துப் போக எண்ணியபோது இவர் மன்னரது அன்பிற்குக் கட்டுப்பட்டு குழந்தையை மறுமொழி பேசாது அனுப்பி வைத்த பெருமையைப் பெற்றவர்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள், தாம் பாடியருளிய திருத்தொண்டத் தொகையில் பல இடங்களில் தம் பெற்றோர்களைப் பற்றிச் சிறப்பித்துக் கூறியுள்ளார். திருதொண்டத் தொகை பாடி உலகையெல்லாம் உய்வித்த தெய்வ புதல்வனை ஈன்ற சடைய நாயனாரும், இசைஞானியாரும் இறைவன் திருவடி நிழலை அடைந்து இன்புற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக