Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 12 மே, 2020

கொரோனாவுக்கு விலை ரூ.4.5 லட்சம் கோடி!

corona


கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் இதுவரையில் 2,206 பேர் உயிரிழந்துள்ளனர். 67,152 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பில் இருக்கின்றனர். கொரோனா பரவலைத் தடுக்க மே 17ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இக்காலத்தில் நாட்டிலுள்ள தொழில் நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கியுள்ளன. உற்பத்தி, சேவைகள், ஏற்றுமதி - இறக்குமதி, வேளாண்மை, பங்கு
வர்த்தகம் உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இது நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளதோடு, இந்தியப் பொருளாதாரத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது. இந்தியத் தொழில் துறைக் கூட்டமைப்பின் மதிப்பீடுகளின் படி, நடப்பு 2020-21 நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 1.5 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியப் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க, உடனடியாக ரூ.4.5 லட்சம் கோடி நிதி தேவைப்படுவதாக, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறைக் கூட்டமைப்பு மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், பல்வேறு அமைப்புகளுக்கு அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.2.5 லட்சம் கோடியை விரைந்து வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனோடு கூடுதல் நிதியை ஒதுக்கி, பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க விரைந்து செயல்பட்டால்தான் கொரோனா பாதிப்பிலிருந்து இந்தியாவால் மீண்டு வர முடியும் என்று இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறைக் கூட்டமைப்பின் தலைவரான சங்கீதா ரெட்டி தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் கொரோனாவால் விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தொழில் நிறுவனங்கள் பல வெளியேறி வருகின்றன. இந்த வாய்ப்புகளை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும், இதற்காக, கட்டுமானம், உற்பத்தி, புதிய கண்டுபிடிப்புகள் ஆகிய துறைகளில் போதுமான அளவில் நிதியைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நிதியைப் பகுதி பகுதியாக மிதமான கால அளவில் வழங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.


கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தில் பொதுமக்களுக்குப் பல்வேறு சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதற்காகவும் கூடுதலான நிதியைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறைக் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!