Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 12 மே, 2020

விபீஷணன் இராமரிடம் சரணடைதல்!

அனுமன் வானர வீரர்களின் கூச்சலைக் கேட்டு துமிந்தன், மயிந்தன் என்னும் இரு வீரர்களை அழைத்து, அங்கே! என்ன நடக்கிறது என அறிந்து கொண்டு வரும்படி கூறினான். பிறகு துமிந்தன், மயிந்தன் சென்று கூட்டமாய் நின்று கொண்டிருந்த வானர வீரர்களையெல்லாம் விலக்கிக் கொண்டு வந்திருப்பது யார் எனப் பார்த்தனர்.

அவர்கள் விபீஷணனின் அருகில் வந்து நன்றாக உற்று கவனித்தனர். பிறகு இவர்களை பார்த்தால் ஞானமும், அறநெறியும் உடையவர்கள் என்பதை தெரிந்து கொண்டனர். பிறகு விபீஷணனை பார்த்து, நீங்கள் யார்? எதற்காக இங்கு வந்துள்ளீர்கள்? எனக் கேட்டனர். விபீஷணன், நான் இராவணனின் தம்பி. நாங்கள் ரகு குலத்தில் பிறந்த இராமனின் திருவடியில் சரணடைய வந்துள்ளோம்.

நான் பிரம்மனின் பேரனான விபீஷணன் வந்துள்ளதாக இராமனிடம் சென்று கூறுங்கள் என்றான். நான் இராவணனிடம் அவன் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி திருத்திக் கொள்ளுமாறு அறிவுரை கூறினேன். ஆனால் அவன் என் மீது கோபங்கொண்டு, உயிர் பிழைத்து இங்கிருந்து ஓடி விடு. 

இல்லையேல் உன்னை கொன்று விடுவேன் எனக் கூறினான். ஆதலால் நாங்கள் இராமனிடம் சரணடைய வந்துள்ளோம் என்றான். பிறகு துமிந்தன், மயிந்தன் இராமனிடன் சென்று நடந்தவற்றை கூறினார்கள். விபீஷணன் தங்களிடன் சரணடைய வந்துள்ளான். அவர்கள் மிகுந்த கவலையுடன் காணப்படுகிறார்கள். இராவணன் அவர்களை விரட்டியடித்தாக கூறினார்கள். நாங்கள் அவர்களிடம் தங்களின் அனுமதியைப் பெற்று வருவதாக கூறிவிட்டு வந்துள்ளோம்.

அவர்களை இங்கே வர அனுமதிப்பதா? இல்லை இங்கு இருந்து அவர்களை விரட்டியடிப்பதா? தாங்கள் உத்தரவு அளித்தால் அதன்படி நடப்போம் என்றனர். இவர்கள் சொல்வதைக் கேட்ட இராமர், எந்த ஒரு முடிவும் எடுப்பதற்கு முன் மற்றவர்களிடம் ஆலோசிப்பது தான் சிறந்தது என எண்ணினார். இராமர் சுக்ரீவன் பார்த்து, சுக்ரீவா! விபீஷணன் அடைக்கலம் வேண்டி இங்கு வந்துள்ளான். அவனுக்கு அடைக்கலம் தரலாமா? இல்லை அவனை நிராகரித்து விடலாமா? எனக் கேட்டான். சுக்ரீவன், பெருமானே! விபீஷணன் நல்லவன் இல்லை. 

அவன் இராவணனை பகைத்துக் கொண்டு நம்மை காட்டிக் கொடுக்கத் தான் இங்கு வந்துள்ளான். அவன் நம்மிடம் வஞ்சனை செய்ய தான் இங்கு வந்துள்ளான் என்றான்.

ஜாம்பவான், பெருமானே! பகைவர்களை நம்முடன் சேர்த்துக் கொள்ளுதல் கூடாது. இராவணன் அன்னை சீதையை யாரும் இல்லா நேரம் பார்த்து கவர்ந்து சென்றுள்ளான். இவனோ இராவணனின் தம்பி இவனை எப்படி நாம் நம்புவது? இவனை நாம் நிராகரிப்பது தான் சிறந்தது என்றான். இராமர், படைத்தலைவன் நீளனை பார்த்து உனது கருத்தை கூறுவாயாக என்றார். ஐயனே! அரக்கர்கள் மாய வேலைகள் செய்வதில் வல்லவர்கள். அரக்கர்களை நாம் ஒரு போதும் நம்பக் கூடாது. ஆதலால் நாம் விபீஷணனை நம்பக் கூடாது என்றான். அங்கதன், ஐயனே! தாங்கள் அனைத்தும் அறிந்தவர். அரக்கர்கள் தீய செயல்கள் செய்வதில் வல்லவர்கள். ஆதலால் நாம் அவர்களை நம்பக் கூடாது என்றான். இதேபோன்று மற்ற வானர வீரர்களும், விபீஷணனுக்கு தாங்கள் அடைக்கலம் தரக்கூடாது எனக் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக