Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 4 ஜூன், 2020

காலுக்குக் கொலுசு கேட்ட ஶ்ரீலலிதாம்பிகை


 திருமீயச்சூர் தலத்தில் அமர்ந்து அருளாட்சி நடத்தி வரும் அன்னை லலிதாம்பிகைக்கு இங்குள்ள அர்ச்சகர்கள் கால் கொலுசு தவிர அனைத்து வகை ஆபரணங்களையும் அணிவித்து வந்தார்கள். தனது காலுக்குக் கொலுசு அணிவிக்கப்பட வேண்டும் என அன்னை விரும்பினாள்.

_பெங்களூரில் மைதிலி ராஜகோபாலாச்சாரி என்பவர் தினமும் காலையில் எழுந்து ஸ்நானம் செய்து, லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்த பிறகுதான் தனது மற்ற அன்றாடப் பணிகளைத் தொடங்குவார். அவர் இதனைத் தனது அன்றாடக் கடமையாக மிகுந்த பக்தி சிரத்தையுடன் செய்து வந்தார். 1999-ம் வருடம் நவம்பர் மாதத்தில் ஒரு நாள் இரவில் அவருடைய கனவில் அம்பிகை வடிவில் ஓர் உருவம் தோன்றி, எல்லா ஆபரணங்களும் எனக்கு உள்ளது. ஆனால் காலுக்கு அணிந்து கொள்ள கொலுசு இல்லை. அதனை நீதான் எனக்கு செய்து போட வேண்டும் எனக் கட்டளையிட்டு மறைந்தது_.

_திடீரென விழித்தெழுந்த அவ்வம்மையார், தனது கனவில் வந்து காட்சியளித்து கட்டளையிட்டுச் சென்ற அம்பாய் யார், ஏன் என்னிடம் வந்து கேட்க வேண்டும் எனக் குழப்பமடைந்தார்.  மிகுந்த ஆசாரமுள்ள வைணவக் குடும்பத்தைச் சேர்ந்த அப்பெண்மணி தனது கனவில் வந்து காட்சியளித்துத் தனக்கு ஆணையிட்டுச் சென்ற அம்பாளைப் பற்றி பலரிடமும் விசாரித்தார். யாரும் தெளிவாகச் சொல்லவில்லை._

_பின்னர் வைணவத் தலங்களான திருப்பதி, ஸ்ரீரங்கம் முதலிய இடங்களுக்குச் சென்று அங்குள்ள சன்னதியில் வீற்றிருக்கும் பத்மாவதி தாயார். ரங்கநாயகி தாயார் ஆகியோரைக் கண்டார். ஆனால் தனது கனவில் வந்த அம்பிகையின் உருவத்திற்கு ஒத்த உருவமாக அவருக்கு ஏதும் புலப்படவில்லை. இந்த நிலையில் யதேச்சையாக ஆன்மீக மாத இதழ் ஒன்றை அவர் பார்க்க நேரிட்டது. அப்புத்தகத்தின் அட்டைப் படமாக  லலிதாம்பிகையின் உருவம் அச்சிடப்பட்டிருந்தது. அதைக் கண்ட மாத்திரத்தில் அப்பெண்மணி மிக்க ஆச்சரியம் அடைந்து தனது கனவில் வந்து, கட்டளையிட்ட அம்பிகை திருமீயச்சூரில் குடி கொண்டிருக்கும் லலிதாம்பிகை என அறிந்தார். தினமும் லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்ததன் பயன் இது என உணர்ந்து மிக்க பரவசம் அடைந்தார்_.

_திருமீயச்சூருக்கு வந்து லலிதாம்பிகைக்கு கொலுசு அணிவிக்க விரும்பிய அப்பெண்மணி உடனடியாக அக்கோவிலின் அர்ச்சகர்களைத் தொடர்பு கொண்டார். தனது கனவில் அம்பாள் வந்து கொலுசு கேட்ட விவரத்தையும் அதை அணிவிக்க தான் திருமீயச்சூருக்கு வருவதாகவும் கடிதம் எழுதினார். ஆனால் ஆலய அர்ச்சகர்களோ, நாங்கள் பரம்பரை பரம்பரையாக இந்த அம்பிகையைத் தொட்டு அபிஷேகம் செய்து பூஜை நடத்துகிறவர்கள். கொலுசு அணிவிக்கும் வசதி  அம்பிகையின் கால்களில் இல்லை என மறுத்துவிட்டனர்_.

_ஆனால் அந்தப் பெண்ணோ கொலுசு, அணிவிக்கும் வசதி இல்லையென்றால் எனது கனவில் வந்து கொலுசு அணிவிக்கச் சொல்லி ஆணையிட வேண்டிய அவசியம் என்ன? என்று தனது முடிவில் உறுதியுடன் மீண்டும் அர்ச்சகர்களை வற்புறுத்தினார்.
அதன்பிறகு அர்ச்சகர்கள் லலிதாம்பிகையின் கால்களில் மிகுந்த கவனத்துடன் தேடுகையில்தான் அந்த அதிசயத்தை உணர்ந்தனர். அம்பிகையின் கணுக்காலின் அருகே அழுத்தம் ஏற்பட்டிருந்தது. அந்த இடத்தை நன்கு அழுத்திப் பார்த்தால் முக்கால் அங்குலத்தில் துவாரம் இருப்பதைக் கண்டனர்_.

ஆண்டுக் கணக்கில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்ததில் அபிஷேகப் பொருட்கள் அத்துவாரத்தை அடைத்து விட்டிருந்தனர். பின்னர் மைதிலி தான் கொண்டு வந்த கொலுசினை லலிதாம்பிகைக்கு அணிவித்துப் பேரானந்தம் அடைந்து அம்பாள் தனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றினார். அன்றைய தினத்திலிருந்து அனுதினமும் பக்தர்கள் லலதாம்பிகைக்குக் கொலுசு அணிவித்துத் தங்களுடைய பிரார்த்தனையைச் செலுத்தி வருகிறார்கள்.

ஆதிபராசக்தியான லலிதாம்பிகை இங்கு ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்து அபய, வரத ஹஸ்த முத்திரையுடன் அருளாட்சி நடத்தி வருகிறாள்
திருமீயச்சூர் லலிதாம்பிகை !அம்பிகையின் திருவடிகளில் சரணம்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக