Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 3 ஜூன், 2020

வானர படைகளும், அரக்க படைகளும்!...

யானைப் படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை எழுந்தபோது புழுதிப் படலம் வானுயர எழுந்தது. அரக்கர் படைகளின் பெரும் பலத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் வானர சேனைகள் பயந்து ஓடின. இதைப் பார்த்த சுக்ரீவன் கடும் கோபமடைந்தான். உடனே சுக்ரீவன் தன் பக்கத்தில் இருந்த ஓர் பெரிய கடம்ப மரத்தை வேரோடு பிடுங்கி போர் செய்தான். 

மரத்தால் அரக்கர்களின் படைகளை சம்ஹாரம் செய்தான். அரக்கர்கள் தோல்வி முகத்தில் இருப்பதைப் பார்த்த வச்சிரமுட்டி என்னும் கொடிய அரக்கன், கண்களில் தீப்பொறி பறக்க அங்கு வந்துச் சேர்ந்தான். வச்சிரமுட்டி செய்த போரில் வானரங்கள் பலர் மாண்டனர். தன் படை வீரர்கள் மாண்டு போவதை கண்டு கடும் கோபம் கொண்ட சுக்ரீவன் அந்த வச்சிரமுட்டி மீது பாய்ந்தான். அவனது வில்லையும், அம்புறாத் துணியையும் அறுத்து எறிந்து விட்டு ஆலகால விஷம் போல் போரிட்டு வச்சிரமுட்டியையும் கொன்றான்.

வச்சிரமுட்டி இறந்தபின் அரக்கர்களின் படை நிலை கலைந்து ஓடத் தொடங்கியது. இதனை கண்டு வானரர்கள் ஆரவாரம் செய்தனர். இலங்கையில் கிழக்கு வாயிலில், சூலம், வாள், வேல், வாளி முதலான ஆயுதங்களால் வானர வீரர்களைக் கொன்றனர். வானர வீரர்கள் வீசிய குன்றுகளாலும், மரங்களாலும் அரக்கர்கள் பலர் மாண்டனர். 

அப்போது வானரப் படை தளபதி நீலன் ஓர் பெரிய கடம்ப மரத்தைப் பிடுங்கி அரக்கர் படை மீது வீசினான். அரக்கர்களின் தேர்களும், குதிரைகளும், அரக்க வீரர்களும் இதனால் மாண்டு வீழ்ந்தனர். அப்பொழுது நீலனை எதிர்க்க கும்பானு என்னும் அரக்கன் வந்துச் சேர்ந்தான். 

மற்றொரு பக்கத்தில் இடும்பன் என்னும் கரடிப்படை வீரன் கும்பானுவை எதிர்த்துத் போரிட வந்தான். இருவருக்கும் இடையே கடும் போர் நடந்தது. நீண்ட நேர போருக்கு பின், அரக்கனை இடும்பன் தன் கைகளால் அடித்தும், வாயால் கடித்தும் அவனைக் கொன்றான்.

சுமாலியின் மகன் பிரஹஸ்தன், அரக்கர் படைகள் தோற்பதைக் கண்டு போர் புரியத் தொடங்கினான். இதனைப் பார்த்த வானரப் படைத்தலைவன் நீலன் ஒரு பெரிய மரத்தை எடுத்து வீசினான். பிரஹஸ்தன் விட்ட அம்புகளால் அம்மரம் பொடிப்பொடியாகி கீழே விழுந்தது. 

நீலன், மரங்களைப் பிடுங்கி வீசி பிரஹஸ்தனின் தேர், வில், கொடி முதலியனவற்றை அறுத்தெறிந்தான். பிறகு பிரஹஸ்தன் தரையில் இறங்கி நேருக்கு நேர் போர் புரியத் தொடங்கினான். நீலன் பிரஹஸ்தனை தன் பலத்தால் தூக்கி எறிந்தான். பிரஹஸ்தனும் நீலனை பயங்கரமாக அடித்தான். இதனால் நீலன் கீழே விழுந்தான். 

கோபங்கொண்ட நீலன் பிரஹஸ்தனை மார்பில் பலமாக ஓங்கி அடித்தான். பிறகு நீலன் விடாமல் பிரஹஸ்தனை தோளிலும், மார்பிலும், நெற்றியிலும் மாறி மாறி குத்தினான். வலி தாங்க முடியாமல் பிரஹஸ்தன் அந்த இடத்திலேயே விழுந்து இறந்தான். இதைப் பார்த்த அரக்கர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடி ஒளிந்தனர்.

தெற்கு வாயிலில் அங்கதன், சுபாரிசன் என்னும் அரக்கனுடன் போரிட்டான். அங்கதனுடைய பலமான தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல், சுபாரிசன் போரில் மாண்டு போனான். சுபாரிசன் மாண்டு போனதை அறிந்து அரக்கர் படைகள் அங்கிருந்து ஓடி ஒளிந்தனர். மேற்கு வாயிலில் அனுமன், துன்முகன் என்னும் அரக்கனையும் அவனது இருநூறு வெள்ள சேனைகளையும் எதிர்த்துப் போர் புரிந்துக் கொண்டிருந்தான். 

அனுமனின் கைகளால் ஏராளமான அரக்கர்கள் மாண்டனர். அனுமன், துன்முகனுடன் கடுமையாக போரிட்டு அவனைக் கொன்றான். இவ்வாறு நான்கு வாயில்களில் போர் நடந்தது. தூதுவர்கள், நான்கு வாயில்களிலும் நடந்த போரைப் பற்றி இராவணனிடம் சென்று செய்தியை கூறினர். அவர்கள், கிழக்கு வாயிலில் பிரஹஸ்தன், தெற்கு திசையில் சுபாரிசன், வடக்கு வாயிலில் வச்சிரமுட்டி, மேற்கு வாயிலில் துன்முகன் மாண்டச் செய்தியை இராவணனிடம் கூறினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக