Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 18 ஜூலை, 2020

ரக்ஷாபந்தன் பண்டிகையில் 4000 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் சீனா...

 China boycott: ரக்ஷாபந்தன் பண்டிகையில் 4000 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் சீனா...
நாடு முழுவதும் சீனப் பொருட்களைப் புறக்கணிக்கும் முயற்சிகள் தொடங்கிவிட்ட நிலையில், அதன் அடுத்தகட்டமாக இந்தியா ஒரு படி மேலே சென்றுவிட்டது. Made in India என்ற திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே பொருட்களை தயாரித்து தன்னிறைவு பெற வேண்டும் என்ற இலக்கின் முதல் கட்டம் இப்போது நிறைவேறுகிறது.  இந்தியாவின் இந்த செயல்பாடு, ஒருபுறம் சீனாவுக்கு பொருளாதார ரீதியாக நட்டத்தை ஏற்படுத்தினால், மறுபுறம் நம் நாட்டில் லாக்டவுனால் வேலைவாய்ப்புகளை இழந்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளையும் வழங்குகிறது.

ரக்ஷா பந்தன் பண்டிகையில் பயன்படுத்தப்படும் பொருட்களில் இந்தியா தன்னிறைவு அடைய தயாராகிவிட்டது. வழக்கமாக சீனாவில் இருந்து பெருமளவில் இறக்குமதிச் செய்யப்பட்டுக் கொண்டிருந்த ராக்கி, இந்த ஆண்டு உள்நாட்டில் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு சீனாவின் ராக்கிகளை யாரும் வாங்கவோ விற்கவோ மாட்டார்கள். 
இதற்காக, நாட்டின் பல்வேறு நகரங்களில், வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. கிராமப்புற பெண்கள், தினசரி கூலித் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் ராக்கி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சீன பொருட்களைப் புறக்கணிப்பதற்காக, அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தற்போது இந்தியவின் பாரம்பரிய பண்டிகையான ரக்ஷா பந்தனில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராக்கிகளையே கட்டுவார்கள்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், ரக்ஷா பந்தன் பண்டிகையின் போது, சீனாவிற்கு சுமார் 4000 கோடி மதிப்புள்ள பொருட்களுக்கான ஆர்டர்கள் இந்தியாவில் இருந்து கிடைக்கும். இந்த முறை இந்த வர்த்தகம்   தன்னிறைவு பெறும் இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
நாட்டில் எந்தவொரு வர்த்தகரும் சீனாவில் இருந்து ராக்கிகளை வாங்க மாட்டார்கள். ராக்கி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், தங்கள் பகுதியில் உள்ள மக்களை வேலைக்கு அமர்த்தி உள்நாட்டிலேயே தயாரிப்பார்கள். இதனால், இந்தியாவில் வேலைவாய்ப்பும் பெருகும், உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்கும்.  
டெல்லி, நாக்பூர், போபால், குவாலியர், சூரத், கான்பூர், டின்சுகியா, குவஹாத்தி, ராய்ப்பூர், புவனேஸ்வர், கோலாப்பூர், ஜம்மு, பெங்களூர், சென்னை, ஹைதராபாத், மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட பல இடங்களில் ராக்கி தயாரிப்பு துரிதப்படுத்தப்பட்டுள்ளது. லக்னோ, வாரணாசி, ஜான்சி, அலகாபாத் போன்ற பிற நகரங்களிலும் ராக்கி தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ரக்ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுபவர்களின் கையில் கயிறு கட்டி தங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள பிணைப்பை உறுதிப்படுத்துவார்கள்.
ராக்கி அதாவது தனது கை மணிக்கட்டில் கயிறு கட்டிய பெண்ணின் உடன் பிறந்தவனாக இருந்து அனைத்து சுக துக்கங்களிலும் உடனிருந்து பாதுகாப்பேன் என்று ராக்கி கட்டிக் கொண்ட ஆண் உறுதி கூறுவார். இதனால், ரக்ஷா பந்தனை மதப் பணடிகை என்று சொல்வதை விட சமுதாயப் பண்டிகை என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.
முந்தைய காலத்தில் மஞ்சள் நூல் கட்டுவது தான் ரக்ஷா பந்தனின் அடிப்படையாக இருந்தது. ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு தனது சக்திக்கு ஏற்பட பரிசு கொடுப்பார்.
வட இந்தியாவில் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தனின் வண்ணமயமான ராக்கிகள் கடந்த சில ஆண்டுகளாக பெருமளவில் சீனாவில்  இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
ரக்ஷாபந்தன் கொண்டாடுவதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், அதில் இரண்டு மிகவும் பிரபலமாக பேசப்படுபவை. ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள சித்தூர் பிராந்தியத்தை ஆட்சி புரிந்து வந்தார் ராணி கர்ணாவதி. சித்தூரைக் கைப்பற்ற குஜராத்தை ஆண்ட சுல்தான் பகதூர் ஷா போர் தொடுத்தார். அப்போது, நாட்டை காப்பாற்றுவதற்காக ராணி கர்ணவதி முகலாய பேரரசர் ஹுமாயுனுக்கு ‘ராக்கி’ என்னும் புனிதக்கயிறை அனுப்பினார் என்றும், அதனால் ராஜஸ்தானில் ராக்கி கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.  
மற்றொரு கதையில், மகாபாரதத்தில் திரௌபதி, கிருஷ்ணருக்கு மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்தால் ரத்தம் வடிவதைப் பார்த்து பதறிப்போய் தனது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து, கிருஷ்ணரின் கையில் கட்டினார். பாசத்தால் நெகிழ்ந்த கிருஷ்ணர் திரௌபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு, அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாப்பதாக திரெளபதிக்கு உறுதியளித்தார். 

அதன் அடிப்படையில் தான் சூதாட்டத்தில் கௌரவர்களிடம் பாண்டவர்கள் தோற்று, பாஞ்சாலி அரசவையில் துகில் உரியப்படும்போது, கிருஷ்ணர் ஆடையை வளரச் செய்து திரௌபதியின் மானத்தை காப்பாற்றினார்.  கிருஷ்ணரின் கையில் பாஞ்சாலி புடவையின் ஒரு பகுதியை கிழித்துக் கட்டி பாசத்தைக் காட்டியதால், சகோதர-சகோதரிகளின் பாசத்தை குறிக்கும் பண்டிகையாக ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுவதாக சொல்லப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக