Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 13 ஜூலை, 2020

கருட பகவான் நாகபாசத்தை விடுவித்தல்!

இராமர், ஒருவன் செய்த தீமைக்காக மட்டும் உலகை அழிப்பது முறையல்ல என நினைத்துக் கொண்டு மனதை தேற்றினார். அப்பொழுது கருட பகவான், வானத்தில் இருந்தப்படி அந்த இடத்தை வட்டமிட்டார். வானத்தில் இருந்தப்படியே இராமரை தொழுதார்.

 பரம்பொருளே! உலக நாயகனே! உலகங்களை காக்கும் தேவனே! கருணை வடிவானவரே! மற்றவர்களின் துன்பங்களை நீக்குபவரே! இராமா! அருட்பொருஞ் ஜோதியே! கருணைக் கடலே! எனப் போற்றி வணங்கினார். இப்படி வானத்தில் வட்டமிட்டு பறந்துக் கொண்டிருந்த கருட பகவான், தன் சிறகுகளை அகல விரித்துக் கொண்டு இராமர் முன் வந்து நின்றான். கருட பகவானுடைய நிழல் பட்டவுடன் இலட்சுமணன் முதலானவர்களை கட்டியிருந்த நாகபாசம் விடுபட்டு விட்டது.

கருட பகவானின் நிழல் பட்டு மாண்ட அரக்கர்கள் எழவில்லை. கருட பகவானின் வரவு தீயவர்களுக்கு நல்லது செய்யவில்லை. அதுமட்டுமின்றி கருட பகவானின் நிழல் பட்டு வானரங்கள் மீண்டும் உயிர்பெற்று, போரில் ஏற்பட்ட காயங்களும், புண்களும் ஆறி புத்துயிர் பெற்றது போல் இராம்!... இராம்!... என இராமரின் ஜெபத்தை சொல்லிக் கொண்டு எழுந்தனர்.

நாகபாசம் விடுபட்டு நீங்கிய இலட்சுமணனை, இராமர் மார்போடு தழுவிக் கொண்டார். பிறகு கருடனை பார்த்து, ஐயா தாங்கள் யார்? நாங்கள் செய்த தவப்பயனால் தான் தாங்கள் இங்கு வந்துள்ளீர்கள். தாங்கள் வந்ததால் தான் நாகபாசத்தால் கட்டுண்டவர்கள் விடுபட்டுள்ளனர். தாங்கள் எங்களுக்கு செய்த உதவிக்கு நாங்கள் உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறோம் என்பது தெரியவில்லை. தங்களை நாங்கள் இதற்கு முன் பார்த்ததும் இல்லை. தங்களை பற்றியும் கேட்டதில்லை.

அன்பனே! தாங்கள் கைம்மாறு எதிர்பாராமல் எங்களுக்கு உதவி செய்து உள்ளீர்கள். இதற்கு நாங்கள் கோடான கோடி நன்றிகள் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். எங்களின் அன்பை தங்களுக்கு தருகிறோம். இவர்கள் மீண்டும் உயிர் பெறுவார்களா? என நினைத்துக் கொண்டிருக்கும் தருணத்தில் தாங்கள் எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் எங்களுக்கு உதவி செய்து உள்ளீர்கள் என்றார்.

இதைக் கேட்ட கருட பகவான், இராமரின் திருவடிகளை தொழுது வணங்கி, உங்கள் திருவடிக்கு கோடி வணக்கங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து பறந்து சென்றான். பிறகு அனுமன் இராமரிடம், பெருமானே! இலட்சுமணர் இறந்து விட்டார் எனவும், நாம் அனைவரும் இறந்து விட்டோம் எனவும் அன்னை சீதை நினைத்து வருந்திக் கொண்டு இருப்பார். அது மட்டுமின்றி அங்கு அரக்கர்கள் மகிழ்ச்சியில் இருப்பார்கள்.

ஆதலால், நாம் உயிர் பிழைத்துவிட்டோம் என்பதை இலங்கையில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள நாம் ஆரவாரம் செய்வோம் என்றான். இராமர், அனுமனின் யோசனைக்கு உடன்பட்டு சம்மதித்தார். பிறகு வானரங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உலகமே அதிரும் வண்ணம் ஆரவாரம் செய்தனர்.

இலங்கையில் இருவர் மட்டும் தூங்காமல் இருந்தனர். ஒருவன் இராவணன். இராவணன் சீதையை நினைத்துக் கொண்டு தூங்காமல் இருந்தான். மற்றொருவர் சீதை. சீதை இராமனையே நினைத்துக் கொண்டு தூங்காமல் இருந்தாள். இந்த ஆரவாரம் இலங்கை நகர் முற்றிலும் கேட்டது.

இராவணன் இந்த ஆரவாரத்தைக் கேட்டு திடுக்கிட்டான். இது என்ன மாயம்? வானரங்களின் ஆரவாரம் செவிகளை பிளக்கிறதே! இலட்சுமணன் வில்லின் நாணொலியின் சத்தமும் கேட்கிறதே! அனுமனின் ஆரவாரமும் கேட்கிறதே! அப்படியென்றால் இவர்கள் அனைவரும் நாகபாசத்தில் இருந்து விடுப்பட்டு விட்டார்கள் என்பதை உணர்ந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக