Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 24 ஜூலை, 2020

அனுமன் சஞ்சீவி மலையை கொண்டு வருதல்!

அனுமன் சஞ்சீவி மலையை தேடிச் சென்ற பிறகு ஜாம்பவானும், விபீஷணனும் இராமரை காண விரைந்து வந்தனர். இருவரும் இராமரின் நிலைமையைக் கண்டு வருந்தினர். பிறகு இவர்கள் இராமரின் திருவடிகளை தொட்டு வணங்கினர். இதனால் இராமர் உணர்ச்சி பெற்று கண்களை மெதுவாக விழித்தார்.

இராமர், தன் முன் கண்ணீருடன் நிற்கும் விபீஷணனையும், ஜாம்பவானையும் பார்த்தார். இராமர் விபீஷணனை பார்த்து, விபீஷணா! நீ உணவு கொண்டுவர சென்றதால் நீ பிரம்மாஸ்திரத்தில் இருந்து தப்பித்தாய். ஜாம்பவானை பார்த்து, நீ சாகா வரம் பெற்றதால் உயிர் பிழைத்தாய் என்றார். பிறகு இராமர், இலட்சுமணனின் நிலையையும், நம் வானரப்படையின் நிலையையும் பார்த்தாயா? இதற்கு மேல் நான் இராவணனை வெல்வதில் என்ன பயன்? என் தம்பியை இழந்த பின் நான் வெற்றி காண்பதில் என்ன பயன் இருக்கிறது.

இலட்சுமணன், இந்திரஜித் மீது பிரம்மாஸ்திரத்தை ஏவுகிறேன் எனக் கூறினான். ஆனால் நான் பிரம்மாஸ்திரத்தை ஏவ வேண்டாம் எனக் கூறி விட்டுச் சென்றேனே. அந்த பிரம்மாஸ்திரத்தால் என் தம்பிக்கு ஆபத்து வரும் என நான் நினைக்கவில்லை. நான் என் தம்பியின் பக்கத்தில் இருந்திருந்தால் பிரம்மாஸ்திரத்தில் இருந்து காப்பாற்றியிருப்பேன்.

 என் தம்பியை இழந்த பின் நான் உயிர் வாழ்வதில் என்ன பயன்? நான் என் உயிரை துறப்பது தான் உத்தமம் என்றார். இதைக் கேட்ட ஜாம்பவான், பெருமானே! தங்களிடம் நான் ஒன்று சொல்ல வேண்டும். உலகை காத்தருளும் நீங்கள் இவ்வாறு பேசுதல் கூடாது. இந்த நேரத்தில் தாங்கள் மனம் தளராமல் தைரியமுடன் செயல்பட வேண்டும். நான் அனுமனிடம் வடக்கே சஞ்சீவி மலைக்குச் சென்று இறந்தவர்களை உயிர்பிக்கும் மருந்தை கொண்டு வரச் சொல்லிருக்கிறேன்.

அனுமன் இன்னும் சிறிது நேரத்தில் இங்கு வந்து விடுவான் தாங்கள் கவலைக் கொள்ள வேண்டாம் என்றான். இப்படி ஜாம்பவான் சொல்லிக் கொண்டு இருக்கும் போது அனுமன், வடக்கிலிருந்து கடும் வேகத்துடன் வந்துக் கொண்டு இருந்தான். இந்த வேகத்தினால் பூமியே நடுநடுங்கிப் போனது. அனுமனை கண்ட ஜாம்பவான், அனுமன் வந்துவிட்டான்! அனுமன் வந்துவிட்டான்! என மகிழ்ச்சியில் கத்தினான். அனுமன் ஒரு பறவை வருவது போல் வந்து மெதுவாக நிலத்தில் இறங்கினான். ஆனால் சஞ்சீவி மலை அரக்கர்கள் உள்ள இடத்திற்கு வர மறுத்ததால், அனுமன் மலையை வானத்தில் நிற்க வைத்து விட்டு வந்தான். சஞ்சீவி மலையின் காற்று வந்து பட்டதால், பிரம்மாஸ்த்திரத்தால் வீழ்ந்தவர்கள் புத்துயிர் பெற்று எழுவது போல் பெரும் வலிமையுடன் எழுந்தனர்.

(ஆனால் இராவணனின் கட்டளைப்படி அரக்கர்கள் கடலில் வீசப்பட்டதால் அவர்கள் உயிர் பெற்று எழ வாய்ப்பில்லாமல் போனது.) இராமர், உயிர் பெற்று எழுந்த இலட்சுமணனை ஆனந்த கண்ணீருடன் அன்போடு தழுவிக் கொண்டார். பிறகு இராம இலட்சுமணர், அனுமனை பார்த்து, அனுமனே! தசரத குமாரர்களான நாங்கள் மாண்டு இருப்போம். இப்பொழுது உன்னால் திரும்பவும் உயிர் பெற்று எழுந்துள்ளோம். எங்களுக்கு உயிர் கொடுத்த மாவீரனே! உன் புகழ் என்றென்றும் வாழ்க என வாழ்த்தினர். அனுமன் ஒன்றும் பேசாமல் அடக்கத்தோடு இராமரை வணங்கினான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக