Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

அன்புள்ள ஆவியே

ஙொய்ய்ய் என்ற சப்தம் பரமார்த்தரின் காதைத்துளைத்தது. எழுந்து மேலே பார்த்தார். அவர் தலையைச் சுற்றிலும் சில கொசுக்கள் பறந்து கொண்டு இருந்தன. உடனே தம் சீடர்களைக் கூப்பிட்டார்.
  குருதேவா இதென்ன சின்னச்சின்னப் பறவைகள். இதற்கு முன்பு நாம் பார்த்ததே இல்லையே என்றான் மட்டி. அப்போது, குருவையும் சீடர்களையும் சில கொசுக்கள் கடித்தன. வலி தாங்காத குருவும், சீடர்களும் கத்தினர்.
  குருநாதா இந்தப் பறவைகள் ஏன் நம்மைக் கடிக்கின்றன? என்றான், மடையன்.
  அவை கொசுக்கள் என்ற உண்மையைச் சொன்னால் சீடர்கள் கேலி செய்வார்கள் என்று நினைத்து ஒரு சமயம் நான் வேட்டையாட காட்டுக்குப் போயிருந்தேன். அங்குள்ள நூறு பறவைகளை அம்பால் கொன்று விட்டேன். அதன் ஆவிகள்தான் இப்போது வந்து தொல்லை கொடுக்கின்றன என்று புளுகினார்.
   உடனே சிஷ்யர்கள், அன்புள்ள ஆவியே, எங்கள் குருவின் குற்றத்தை மன்னித்துவிடுங்கள் என்று வேண்டினார்கள். உஸ்ஸ் சத்தம் போடாதே... ஆவிகளுக்கு நாம் பேசுவது கேட்கும். அதனால் ஒவ்வொரு பறவையாகப் பிடித்துத் தூக்கில் தொங்க விட வேண்டும் என்று குதித்தான், மூடன்.
   அதைவிட, அதற்குக் கிச்சு கிச்சு மூட்டி, அது சிரித்துக் கொண்டு இருக்கும்போதே, ஊசியால் குத்திக் கொலை செய்து விடலாம் என்றான் மண்டு.
   சரி...சரி... முதலில் ஒவ்வொரு பறவையாகப் பிடியுங்கள் என்று கட்டளை இட்டார் குரு. மண்டுவின் மொட்டைத் தலையில் உட்கார்ந்திருந்த ஒரு கொசுவை கொள்ளிக்கட்டையால் ஓங்கி அடித்தான் முட்டாள். மண்டையில நெருப்புப் பட்டதும், ஐயோ... என்று கதறினான் மண்டு.
   மெல்ல ஒரு கொசுவைப் பிடித்தான், மட்டி. அதற்குக் கிச்சு கிச்சு காட்டினான், மடையன். பரமார்த்தரோ, தம் கைத்தடியால் அந்தக் கொசுவை நசுக்கப் பார்த்தார், அதற்குள் அது பறந்து போய் விட்டது. சற்று நேரத்தில் எல்லா கொசுக்களும் சென்று விட்டன.
   முட்டாளின் திட்டப்படி, மடம் பூராவும் மூட்டைப் பூச்சிகளைப் பிடித்து வந்து விட்டனர். இரண்டு நாட்கள் கழித்து கொசுவுடன் மூட்டைப் பூச்சிகளும் சேர்ந்து கொண்டு கடித்தன.
   சே பெரிய தொல்லையாகப் போய்விட்டதே என்ன செய்வது? என்று பரமார்த்தர் கேட்டார்.
  குருவே எனக்கு ஓர் அற்புதமான யோசனை மூட்டைப் பூச்சிக்குப் பயந்து கொண்டு வீட்டைக் கொளுத்தினானாம் என்று சொல்கிறார்களே அதைச் செய்து பார்போம் என்றான் மட்டி.
  ஆமாம் குருவே நாம் பயப்படாமல் வீரத்துடன் கொளுத்துவோம் என்றான் மடையன். குருவே அப்படியே இன்னொரு திட்டத்தையும் செயல்படுத்துவோம் எரிகிற மடத்தோடு சேர்ந்து நாமும் எரிவோம் ஆவியாக மாறி நமக்குத் தொல்லை தருகிற சின்னப் பறவைகளை எல்லாம் சுலபமாகப் பிடிக்கலாம் என்றான் மூடன்
  பலே மூடா என்று அவனைப் பாராட்டினார் பரமார்த்தர்.
  அவன் திட்டப்படி, மடத்துக்குக் கொள்ளி வைத்துவிட்டு, எல்லோரும் உள்ளே சென்று நின்று திகு, திகு என்று நெருப்பு பிடித்துக் கொண்டு எரிய ஆரம்பித்ததும், காட்டுக் கத்தல் கத்தினர். சப்தம் கேட்டு, அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். நெருப்பை அணைத்ததுடன், குருவையும் சீடர்களையும் தீயிலிருந்து காப்பாற்றினார்கள்.
 அப்போதும் சே இந்த அறிவுகெட்ட மக்கள் நம் அருமையான திட்டத்தைப் பாழாக்கி விட்டார்களே என்று முணு முணுத்துக் கொண்டார், பரமார்த்தர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக