Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

யானைக்கு வந்த திருமண ஆசை

மன்னரின் யானையொன்று அண்டை அயல் நகரங்களுக்குச் சென்று பயிர்களை அழித்துக்கொண்டும், மக்களில் பலரை நசுக்கிப் படுகாயப்படுத்திக் கொண்டும் மக்களுக்கு தொந்தரவுக் கொடுத்துக் கொண்டிருந்தது. இது மன்னருக்கு தெரிந்தும் மன்னர் கண்டு கொள்ளவில்லை.

இதனால் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சென்று முல்லாவிடம் மன்னரின் யானையால் தங்களுக்கு ஏற்படும் தொல்லைகளைப் பற்றிக் கூறினார்கள். அதற்கு முல்லா, மக்களிடம் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த யானையைப் பிடித்து ஒரு மரத்தில் கட்டிப்போட்டு விடுங்கள். மன்னரிடமிருந்து யாராவது அங்கு வந்து கேட்டால் முல்லாதான் யானையைக் கட்டிப் போடச் சொன்னதாகக் கூறி விடுங்கள் என்றார்.

பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து கஷ்டப்பட்டு யானையைப் பிடித்து ஒரு பெரிய மரத்தில் கட்டிப் போட்டுவிட்டனர். இத்தகவல் அறிந்த மன்னர் முல்லாவை வர வழைத்து உமக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் என்னுடைய யானையைக் கட்டிப் போட்டிருப்பீர் என்று முல்லாவிடம் கேட்டார்.

மன்னர் பெருமானே! தங்களது யானை தனக்கு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து வைக்கச் சொல்லி எங்கள் ஊர் மக்களிடம் கேட்டது. நாங்கள் பெண் யானை தேடிக் கண்டுபிடிப்பதற்குள் யானை கோபித்துக் கொண்டு தவறான செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதற்காகத் தான் யானையைக் கட்டி வைத்திருந்தேன் என்றார்.

மன்னர், யானையாவது தனக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்பதாவது? யாரிடம் நீ விளையாடுகிறாய்? என்று கேட்டார். மன்னர் பெருமானே! வேண்டுமானால் தாங்களே நேரில்வந்து தங்களின் யானையையே விசாரித்துப் பாருங்கள். நான் சொல்வது பொய் என்றால் தாங்கள் கொடுக்கும் தண்டனை ஏற்றுக்கொள்கிறேன் என்று முல்லா கூறினார்.

மன்னர் தமது பரிவாரங்களுடன் முல்லாவை அழைத்துக் கொண்டு முல்லா சொன்ன பகுதிக்குச் சென்றார். வழி நெடுக்கிலும் விளை நிலங்களுக்கும், பழ மரங்களுக்கும் ஏற்பட்டிருந்த கடுமையான சேதத்தை அழிவைக் கண்டு அதிர்ச்சியடைந்த மன்னர், தனது யானையால் தான் இந்த பேரழிவு நிகழ்ந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார்.

மன்னர் யானையினால் நடந்த சேதத்திற்கு நஷ்ட ஈடு வழங்க சொல்லி அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார். பிறகு அந்த யானையைக் கொண்டு சென்று அரண்மனையில் கட்டிப் போடச் சொல்லி உத்திரவிட்டார். ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முல்லாவுக்கு மனதார நன்றி தெரிவித்தார்கள். மன்னரும் முல்லாவின் அறிவைப் பாராட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!