ஒரு தடவை ரஞ்சித் வியாபர நிமித்தமாகப் பெரிய நகரம் ஒன்றுக்குச் சென்றிருந்தார். அங்கே அவருக்குத் துணையாக ஒருவன் வந்து சேர்ந்தான். அவனுக்கு எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்படுவதையே தன்னுடைய நோக்கமாகக் கொண்டிருந்தான்.
அந்தப் பெரிய
நகரத்தைப் பார்த்ததும் அவனுக்குப் பிரமிப்பாக இருந்தது. சந்துப் பொந்தெல்லாம்
மக்கள் இவ்வாறு நிரம்பி வழிகிறார்களே, தாங்கள் தங்கியுள்ள விடுதியை எவ்வாறு கண்டு
பிடிப்பார்கள்? அவ்வளவு ஏன், மக்கள் தங்களைத் தாங்களே கூட அடையாளம் கண்டு கொள்வது
சிரமந்தான். இவ்வாறெல்லாம் அந்த சந்தேகப் பிராணி பேசிக் கொண்டேயிருந்தான்.
அந்த சந்தேகப் பிராணியும் ரஞ்சித்தும் அன்று இரவைக் கழிப்பதற்காக ஒரு விடுதியில்
சென்று தங்கினார். ரஞ்சித் அவர்களே எனக்கு ஒரு யோசனை சொல்லுங்கள். நான் காலையில்
கண் விழிக்கும் போது என்னையே மறந்து விட்டால் அடையாளம் கண்டு கொள்ள ஏதேனும் வழி
உண்டா? என்று கேட்டான். அதற்கு ரஞ்சித் ஒரு கருப்புத் துணியை எடுத்து உமது ஒரு
காலில் சுற்றிக் கட்டி விடும். காலையில் உறங்கி எழுந்ததும் உமது காலைப் பாரும்.
கருப்புத் துணி காலில் இருந்தால் நீர்தான் அது என்ற அடையாளம் கண்டு கொள்ளலாம்
என்றார்.
சந்தேகப் பிராணி ரஞ்சித் கூறியதைப் போலவே, தன் காலில் ஒரு கருப்புத் துணியைக்
கட்டிக் கொண்டு படுத்து விட்டான். அவன் நன்றாக உறங்கிய பிறகு அவன் கட்டியிருந்த
கருப்புத் துணியை அவிழ்த்துத் ரஞ்சித் தம்முடைய காலில் கட்டிக் கொண்டார்.
அவன் காலையில் எழுந்தவுடன், ஐயோ நான் காணாமல் போய் விட்டேன். என் காலில் இருந்த துணியைக் காணவில்லை என்று கூச்சலிட்டுக் கொண்டே அருகில் படுத்திருந்த ரஞ்சித்தின் காலைப் பார்த்து விட்டு நான் அகப்பட்டுவிட்டேன் நீர்தான் நான் என்று சத்தம் போட்டான். ரஞ்சித் சிரித்துக்கொண்டே எழுந்து அந்தச் சந்தேகப் பிராணிக்கு ஏற்பட்டிருந்த சந்தேகப் பிரமையை அகற்றி அவனுக்குத் தெளிவை உண்டாக்கினார்.
குட்டிக்கதைகளும் - கட்டுரைத்தொடர்களும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக