மன்னர் முல்லாவுக்கு ஒரு வீடு ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்தார். ஆனால் மன்னர் அந்த வீட்டின் மாடிப்பகுதியை ஒரு படைத்தளபதிக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். மாடியில் வசிக்கும் படைத் தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மாவு இடிப்பாள். அந்தச் சமயத்தில் கீழ் வீட்டில் இருக்கும் முல்லாவுக்கு பெரிய தொந்தரவாக இருந்தது. முல்லா இரண்டு மூன்று தடவை படைத்தளபதியைச் சந்தித்து அவர் மனைவியிடம் கொஞ்சம் மெதுவாக மாவு இடிக்குமாறு சொல்லும்படி கேட்டுக் கொண்டார்.
அதற்கு படைத்தளபதியோ முல்லாவிடம், எனக்காக மன்னர் அளித்த வீடு. என் வீட்டில் என் மனைவி எப்படி வேண்டுமானாலும் மாவு இடிப்பாள். அதைக் கேட்பதற்கு நீ யார்? என்று அதட்டி அனுப்பி விட்டார். மறுநாள் முல்லா கீழே உள்ள தன் வீட்டுப் பகுதியைக் கடப்பாறையைக் கொண்டு இடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த படைத் தளபதி மாடியில் இருந்து கீழே என்ன செய்கிறாய் என்று கேட்டார். கீழ்ப்பக்கம் இருக்கும் என் வீட்டை முற்றிலுமாக இடித்துத் தள்ளி விட்டுப் புதிதாக கட்டத் தீர்மானித்திருக்கிறேன் என்றார் முல்லா.
அதற்கு படைத்தளபதி, முல்லாவிடம் கீழ்வீடு முழுவதையும் இடித்தால் மேல் வீடு என்ன ஆகும் என்று யோசித்தீரா? என்று கோபத்தோடு கேட்டார். மேல் வீட்டைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும். எனக்குச் சொந்தமான வீட்டை நான் இடிக்கிறேன். பதறிப்போன படைத்தளபதி முல்லாவிடம் சமரசம் பேச முற்பட்டார். நாம் இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதுதான் நல்லது. நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம் என்றார் தளபதி. நான் எப்போதுமே யாருக்கும் நண்பன் தான்! என்று கூறிவிட்டு முல்லா சிரித்தார்.
குட்டிக்கதைகளும் - கட்டுரைத்தொடர்களும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக