ஒரு காட்டில் சிரஞ்சீவி எனும் காகம் நெடுநாட்களாக ஆந்தைக் கூட்டத்தை அழிக்க வேண்டும் என்று நினைத்து ஒரு திட்டம் தீட்டியது. அத்திட்டத்தின்படி சிரஞ்சீவி என்ற காகம் ஒவ்வொரு நாளும் ஒரு சுள்ளி என, நாள்தோறும் சுள்ளிகளை எடுத்து வந்து ஒரு குகையின் வாயிலில் நிறைத்து கொண்டே வந்தது. சிரஞ்சீவியின் நடத்தையில் எந்தவித சந்தேகமும் யாருக்கும் ஏற்படவில்லை. பகற்பொழுதில் கண்பார்வையற்ற ஆந்தைக் கூட்டம் குகைக்குள் அடைந்து, தூங்கிக் கொண்டிருந்தது. இதுதான் தக்க தருணம் என்று நினைத்த சிரஞ்சீவி அந்தக் குகையைவிட்டு வெளியேறியது.
தன்னுடைய காகராஜனைச் சந்தித்த சிரஞ்சீவி, ராஜா! உடனடியாக, எல்லா காகங்களையும் அழைத்து, அவர்களிடம் ஆளுக்கொரு எரியும் கொள்ளியைக் கொடுங்கள். ஆந்தையின் குகை வாசலில் நான் குவித்து வைத்துள்ள சுள்ளிக்குவியலில் வைத்து விடட்டும். உடனே, குகையின் வாசல் தீப்பற்றி எரியும். ஆந்தைக் கூட்டம் அனைத்தும் அந்தத் தீயில் வெந்து அழியும் என்றது சிரஞ்சீவி.
சிரஞ்சீவியின் திட்டப்படி, காகராஜா தன் காகக் கூட்டத்தை அழைத்துக்கொண்டு எரியும் கொள்ளியுடன் ஆந்தைக் குகையை அடைந்தது. அங்கு சிரஞ்சீவி குவித்துவைத்துள்ள சுள்ளிகளில் தீயை மூட்டியது. நெருப்பும் புகையும் குகைக்குள் மண்டியதில் ஆந்தைகள் அனைத்தும் அழிந்தன.
ஆந்தைக் கூட்டம் அழிந்த பின்னர், காகராஜா தன்னுடைய பழைய ஆலமரத்தில் வழக்கம்போலத் தன்னுடைய அரசாட்சியை நடத்தி வந்தது. பின் காக ராஜன் சிரஞ்சீவியை அரசவைக்கு அழைத்து, நீ எப்படி ஆந்தைக் கூட்டத்தை நம்பவைத்து ஏமாற்றினாய் என்று எங்களுக்கு விளக்கிக் கூறு என்று கேட்டது.
நெருப்பு தன் வலிமையால் காட்டையே அழிக்கவல்லது. மரங்கள் தன் வேர்களை நிலத்தில் ஊன்றி இருந்தாலும், மிருதுவான தன்மை கொண்ட தண்ணீரும் காற்றும் மரங்களை வேரோடுப் பிடுங்கிச் சாய்த்து விடுகின்றனவே அது போலத்தான் நானும் செய்தேன் என்றது சிரஞ்சீவி.
குட்டிக்கதைகளும் - கட்டுரைத்தொடர்களும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக