Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 20 நவம்பர், 2020

அனைவருக்கும் இலவசம்; தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

 

கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக உணவுப் பொருட்களை வழங்க உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வண்ணம் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. ஏராளமானோர் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டது. இதையொட்டி மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டார்.

கொரோனா கால நிவாரணம்

இதற்காக அரசுக்கு சுமார் ரூ.45,000 கோடி செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கொரோனா ஊரடங்கு காலத்தில் நிவாரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக கொண்டை கடலை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது. அதாவது ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ஐந்து மாதங்களுக்கு தொடர்ச்சியாக வழங்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி நடப்பு நவம்பருக்கான கொண்டைக் கடலை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

PHH/AAY ரேஷன் அட்டைதாரர்களுக்கு

இதுதொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், மத்திய அரசின் திட்டமான PMGKAY-II திட்டத்தின் கீழ் கடந்த ஜூலை 2020 முதல் நவம்பர் 2020 வரையிலான 5 மாதங்களுக்கு ஒரு மாதத்திற்கு தலா ஒரு கிலோ வீதம் மத்திய தொகுப்பில் இருந்து கோவிட்-19 நிவாரணமாக கொண்டைக் கடலை (Channa) PHH/AAY குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொருட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்திற்கு 5 கிலோ

இந்த கொண்டைக் கடலை மத்திய தொகுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு NAFED நிறுவனம் மற்றும் இக்கழக உள்மண்டல இயக்கம் மூலம் அனைத்து மண்டலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. மத்திய தொகுப்பிலிருந்து பெறப்பட்ட கொண்டைக் கடலை டிசம்பர் 2020 மாதத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் PHH/AAY குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு 5 கிலோ வீதம் வழங்கப்பட வேண்டும்.

முன்நகர்வுக்கு உத்தரவு

எனவே வரும் நவம்பர் 21ஆம் தேதி முதல் அனைத்து மண்டல கிடங்குகளில் இருந்தும் சில்லறை அங்காடிகளுக்கு கொண்டைக் கடலை அனுப்பப்படுவதை உறுதி செய்யப்பட வேண்டும். உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தமது கடிதத்தில் மேற்குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் பெறப்படும் கொண்டைக் கடலை அனைத்து கிடங்குகளில் இருப்பு வைக்கவும், இதையொட்டி முன்நகர்வு செய்யவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முக்கிய அறிவுறுத்தல்

இதுதொடர்பான விவரங்கள் குறித்து PoS எனப்படும் விற்பனை முனைய இயந்திரத்தில் உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் PMGKAY-II திட்டத்தின் கீழ் பெறப்படும் கொண்டைக் கடலையினை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்க தனியே அறிவுரை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட முதுநிலை மண்டல மேலாளர்கள் அல்லது மண்டல மேலாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது.

முறையாக பராமரிக்க அறிவுரை

அதாவது தங்கள் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து களப் பணியாளர்களுக்கும் முன்நகர்வு மற்றும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கொண்டைக் கடலை விநியோகம் செய்யப்படுவது குறித்தும் இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் மற்றும் விநியோகிக்கப்படவுள்ள கொண்டைக் கடலை விவரத்தை உரிய கிடங்கு பதிவேடுகளில் பராமரிக்கவும் உரிய அறிவுரை வழங்க கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக