தமிழக அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு,ரேசன் கடைகளில் பருப்பு விநியோகம் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 20 ஆயிரம் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிட்டது.
ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்ட இந்த டெண்டரானது,நாமக்கல்லைச் சேர்ந்த கிறிஸ்டி நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டது.
இதனையடுத்து,சந்தையில் தற்போது ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.100க்கும் குறைவாக விற்கப்படும் நிலையில்,கிறிஸ்டி நிறுவனத்திற்கு ரூ.143க்கு டெண்டர் ஒதுக்கப்பட்டிருப்பதால்,அந்த டெண்டரில் முறைக்கேடு இருப்பதாகவும்,இதனால்,அரசுக்கு ரூ.100 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் என அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது.
மேலும்,இந்த ஊழலுக்கு துறை அதிகாரியான சுதாதேவி ஐஏஎஸ்,ஒப்பந்ததாரரான கிறிஸ்டி நிறுவனத்தின் தலைவர் குமாரசாமி ஆகியோர் உடந்தை என சுட்டிக்காட்டியும்,இந்த டெண்டரை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அறப்போர் இயக்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில்,முறைகேடு புகார் உறுதியானதையடுத்து,நுகர்பொருள் வாணிப கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சுதாதேவி கடந்த வாரம் அதிரடியாக பணி மாற்றம் செய்யப்பட்டார்.
அதன்பின்னர்,கிறிஸ்டி நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட டெண்டரையும் தமிழக அரசு ரத்து செய்தது. மேலும்,20 ஆயிரம் டன் பருப்பு தேவை என்றும்,அதன் கொள்முதல் விலை கொள்முதல் விலை கிலோ ரூ.100 க்கு குறைவாகவும் இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு இ-டெண்டர் வெளியிட்டு உள்ளது.
தமிழக அரசின்,இந்த அறிவிப்பை அறப்போர் இயக்கம் வரவேற்றுள்ளது.இதன்மூலம்,அரசுக்கு ஏற்பட இருந்த ரூ.100 கோடி வரையிலான இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக,அதிமுக ஆட்சி காலத்தில் கிறிஸ்டி நிறுவனத்தின் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்துள்ளன.
அதில்,குறிப்பாக சத்துணவு முட்டை கொள்முதல் முறைகேடு தொடர்பாக ஆளுநரிடமும் புகார் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக