-------------------------------------
ஐந்து முட்டாள்கள்... இது சிரிப்பதற்கு மட்டுமே...!!
-------------------------------------
நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.
'நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?"
'ஆம் மன்னா!"
'அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு" என்றார் மன்னர்.
அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால் என்ன செய்வது? சொன்னது மன்னராயிற்றே, 'சரி மன்னா" என்று ஒத்துக் கொண்டார்.
ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், 'அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ?"
'இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!" என்றார் அமைச்சர்.
'தொடரும்" என்றார் மன்னர்.
'மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான். இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்." என்றார் அமைச்சர்.
'சரி அடுத்து"
'இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்."
'களிப்படைந்தோம் அமைச்சரே! களிப்படைந்தோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?"
'அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்."
மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் 'அடுத்தது" என்றார்.
'நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது" என்றார் அமைச்சர்.
ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.
'உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்" என ஒத்துக் கொண்டார் மன்னர்.
'சரி எங்கே முதலாவது முட்டாள்?"
அமைச்சர் சொன்னார். 'மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!"
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக