இந்தியப் பங்குச்சந்தையில் ஐபிஓ மூலம் புரட்டிப்போட்ட சோமேட்டோவின் வெற்றி பல ஸ்டார்ட்அப் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கும் நம்பிக்கை கொடுத்துள்ளது. ஐபிஓ வெளியீட்டுக்குப் பின்பு சோமேட்டோ பங்குகள் குறித்தும், அதன் வர்த்தகம் குறித்துத் தொடர்ந்து பல கேள்விகள் எழுந்த நிலையில் சோமேட்டோ பங்குகள் தனது உச்ச விலையில் இருந்து சரிந்து வந்தது.
இந்நிலையில் தற்போது சோமேட்டோ நிறுவனத்தின் துணை நிறுவனரும் உயர் அதிகாரியுமான கௌரவ் குப்தா தனது பதவியை ராஜினாமா செய்தது மட்டும் அல்லாமல் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
கௌரவ் குப்தா ராஜினாமா
2015ஆம் ஆண்டில் சோமேட்டோ தளத்தில் டேபிள் ரிசர்வேஷன் பிரிவின் தலைவராக இணைந்தார் கௌரவ் குப்தா, இதன் பின்பு 2019ல் சோமேட்டோ நிறுவனம் முதலீட்டை ஈர்க்க வேண்டும் என்பதற்காகக் கௌரவ் குப்தா துணை நிறுவனராகப் பதவி உயர்வு பெற்றார்.
துணை நிறுவனர் பதவி
இதுமட்டும் அல்லாமல் கௌரவ் குப்தா சோமேட்டோ தளத்தில் துணை நிறுவனர் பதவி பெற்ற பின்பு நியூராகியூட்டிகல் வர்த்தகத்தைத் தலைமை வகித்தார். கௌரவ் குப்தா இப்பிரிவில் தலைவராக 5 வருடம் இருந்த நிலையில், கடந்த வருடம் இந்த வர்த்தகத்தை மொத்தமாக மூடியது குறிப்பிடத்தக்கது.
தலைமை செயல் அதிகாரி
மேலும் கௌரவ் குப்தா சோமேட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் பணியாற்றிய போது தான், சோமேட்டோ ப்ரோ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்ட அறிமுகத்திலும் கௌரவ் குப்தா முக்கியப் பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஓ வெளியீடு
சோமேட்டோ ஐபிஓ வெளியிட்டு 2 மாதத்தில் துணை நிறுவனர் பதவியில் இருந்த கௌரவ் குப்தா போன்ற உயர் அதிகாரி வெளியேறுவது, பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. கௌரவ் குப்தா வெளியேற்றத்திற்குப் பின்பு சோமேட்டோ பங்குகளின் நிலை என்ன..?
சோமேட்டோ பங்குகள்
கௌரவ் குப்தா ராஜினாமா செய்தி வெளியான பின்பு சோமேட்டோ பங்குகள் சில தடுமாற்றம் அடைந்தாலும், மூடப்பட்ட வர்த்தகப் பிரிவின் தலைவர் வெளியேறும் காரணத்தால் தடுமாற்றத்தைச் சரி செய்துகொண்டு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. தற்போது சோமேட்டோ பங்குகள் 0.84 சதவீதம் உயர்ந்து 144.40 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
சோமேட்டோ-க்குப் பிரச்சனை இல்லை
சோமேட்டோ நிறுவனத்தில் கௌரவ் குப்தா வெளியேறிய பின்பு புதிய பாதையில் பயணிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிறுவனத்தில் இருந்து தான் வெளியேறினாலும் சோமேட்டோ நிறுவனத்தைத் தொடர்ந்து வர்த்தகத்தை நடத்தவும், அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லவும் சிறப்பான அணி உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
தீபேந்தர் கோயல்
சோமேட்டோ நிறுவனத்தில் கௌரவ் குப்தா வெளியேறுவது குறித்து இந்நிறுவனத்தின் நிறுவனரான தீபேந்தர் கோயல் வருந்தி டிவீட் செய்துள்ளார், இதற்குக் கௌரவ் குப்தா-வும் பதில் அளித்துள்ளது இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
மளிகை பொருட்கள் விற்பனை
சோமேட்டோ கடந்த இரண்டு வருடத்தில் 2வது முறையாக மளிகை பொருட்கள் விற்பனை திட்டத்தில் இருந்து பின்வாங்கியுள்ளது. இதற்காக ஜூலை மாதம் முதல் சோமேட்டோ NCR பகுதியில் 45 நிமிடத்தில் மளிகை பொருட்கள் டெலிவரி திட்டத்தைச் சோதனை திட்டமாகச் செயல்படுத்தி வருகிறது. இந்தச் சோதனை திட்டம் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி நிறைவடைகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக