Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

ஒரு முறை முதலீடு.. மாதந்தோறும் வருமானம்.. எல்ஐசி-யின் புதிய ஜீவன் சாந்தி.. எப்படி இணைவது..!

ஆஃப்லைன் & ஆன்லைனில் எடுக்கலாம்

நமது இளமைக் காலத்தில் என்னதான் கஷ்டப்பட்டாலும், ஓடி ஆடி முடிந்து வயதான காலத்தில் யாருக்கும் தொந்தரவு இல்லாமல், யாருடைய தயவும் இல்லாமல் வாழ வேண்டும் என்பது தான் பலரின் எண்ணமாக இருக்க வேண்டும்.

அதற்கு மிக அத்தியாவசிய தேவைகளில் ஒன்று பணம் தான். ஏனெனில் மாதந்தோறும் ஒரு கணிசமான தொகை தேவைப்படும். இதற்காக பல முதலீட்டு திட்டங்கள் நடப்பில் இருந்தாலும், அரசு சார்ந்த திட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கும் திட்டங்கள் என்றால் அது இன்னும் பாதுகாப்பானதாக இருக்குமே.

அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி வழங்கும் புதிய ஜீவன் சாந்தி திட்டம் பற்றி தான். இது ஓய்வுகாலத்திற்கு ஏற்ப மாத மாதம் நிரந்தர வருமானம் தரக் கூடிய ஒரு நல்ல திட்டமாகும். இந்த திட்டத்தில் எப்படி இணைவது? எவ்வளவு பிரீமியம் செலுத்த வேண்டும்? இதில் உள்ள மற்ற சலுகைகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

ஆஃப்லைன் & ஆன்லைனில் எடுக்கலாம்

எல்ஐசி-யின் இந்த ஜீவன் சாந்தி திட்டத்தினை ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் எடுத்துக் கொள்ளலாம். எல்ஐசி -யின் ஜீவன் சாந்தி ஒரு விரிவான வருடாந்திர திட்டமாகும். இதில் பாலிசி எடுக்கும் நபர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் பல நன்மைகள் உண்டு. குறிப்பாக ஓய்வுக்காலத்திற்கு பின்பு, நல்ல பலன்கள் உண்டு. ஆக பலருக்கும் தங்களது வயதான காலத்தில் யாரையும் நிதி ரீதியாக சாராமல் வாழ இந்த திட்டம் உதவியாக இருக்கும்.

வயது வரம்பு

எல்ஐசி-யின் இந்த பென்ஷன் திட்டத்தை குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 79 வயது வரை உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பாலிசியில் குறைந்தபட்சம் 1,50,000 ரூபாய் வரை பிரீமியமாக செலுத்திக் கொள்ளலாம்.

அதிகபட்சம் என்று எதுவும் வரையரை நிர்ணயிக்கப்படவில்லை இல்லை. ஆக உங்களின் தேவையறிந்து அதற்கேற்ப செலுத்திக் கொள்ளலாம்.

 உடனடி ஆண்டுத் தொகை

உதாரணத்திற்கு இந்த திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடான 1,50,000 ரூபாயினை நீங்கள் எடுக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம்.

உங்களுக்கு மாதத்திற்கு 1000 ரூபாயும், இதே காலாண்டுக்கு 3,000 ரூபாயும், இதே அரையாண்டுக்கு 6,000 ரூபாயும், இதே ஆண்டுக்கு 12,000 ரூபாயும் கிடைக்கும்.

ஆக நீங்கள் எவ்வளவு அதிகம் தொகையை ஆரம்பத்தில் செலுத்துகிறீர்களோ, அந்தளவுக்கு உங்களுக்கு வருவாய் கிடைக்கும்.

ஓய்வூதியம் எப்போதிலிருந்து கிடைக்கும்

முதிர்வு தொகையை உடனடி ஆண்டுத் தொகையாகவோ அல்லது காலம் தாழ்த்திய நிலையில் கொடுக்கப்படும் முறைகளாகவே எடுத்துக் கொள்ளலாம்.

உடனடியான ஆண்டுத் தொகையினை நீங்கள் தேர்வு செய்தால், பிரீமியம் செலுத்திய உடனே வருவாய் கிடைக்க தொடங்குகிறது.

காலம் தாழ்த்தி ஆண்டுத் தொகை பெறும் திட்டத்தினை தேர்வு செய்திருந்தால், குறைந்தபட்ச கால அளவானது 1 வருடத்தில் ஆரம்பமாகிறது. அதிகபட்ச கால அளவானது 20 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடன் பெற முடியுமா?

நீங்கள் உங்கள் பாலிசியை தொடங்கியதில் இருந்து 1 வருடம் முடிந்த பின்னர் கடன் கிடைக்கும். உடனடி ஆண்டுத் தொகை திட்டத்தில் இந்த வசதியானது F&J-வில் மட்டுமே கிடைக்கும். காலம் தாழ்த்திய ஆண்டுத் தொகை திட்டத்திலும் இந்த தேர்வானது கிடைக்கும். அதே போல இந்த பாலிசியினை தொடங்கி, பென்சன் பெற தொடங்கிய பிறகு மூன்று மாதங்களில் சரண்டர் செய்ய முடியும்.

வரி சலுகை பெற முடியுமா?

இந்த ஓய்வூதிய திட்டத்தில் பிரிவு 80சி மற்றும் 80டியின் படி வரி சலுகைகள் உண்டு. ஒரு முறை மட்டுமே செலுத்தப்படும் பிரீமியங்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து முழுவதுமான பாதுகாப்பு கிடைக்கும். ஆக வரிச்சலுகைகளோடு, மாதந்தோறும் வருமானம் பெறும் ஒரு நல்ல திட்டமாக இருக்கலாம்.

உத்திரவாத வருவாய் திட்டம்

இந்த ஓய்வூதிய திட்டத்தில் இன்சூரன்ஸ் எடுப்பவர் முதலீடு செய்யும் போது நிச்சயம், மாதந்தோறும் வருவாயினை பெறுவார்கள். ஆயுள் காலம் முழுக்க இந்த வருவாயானது கிடைக்கும். ஒரு வேளை இந்த பாலிசியினை எடுத்தவர் இடையில் இறந்துவிட்டாலும் கூட, வருவாய்க்கு உத்தரவாதம் உண்டு. ஆனால் இது முழுக்க முழுக்க நாம் தேர்தெடுக்கும் தனிப்பட்ட விருப்பத்தினை பொறுத்து இருக்கும் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.

உத்திரவாதம் அளிக்கப்பட்ட வரவு திட்டம்

காலம் தாழ்த்தி ஆண்டு தொகை பெறும் இந்த திட்டத்திலும், உறுதி செய்யப்பட்ட இந்த வருவாயானது கிடைக்கும். ஆனால் ஒவ்வொரு மாதமும் இந்த வருமானமானது பாலிசியுடன் சேர்க்கப்படும். இந்த பாலிசி திட்ட காலத்திற்கு பிறகு சலுகை கிடைக்கும். ஆக பாலிசியை எடுக்கும் முன்னர் சரியான ஆலோசகர்களுடன் ஆலோசித்து, உங்களின் எதிர்கால தேவைக்கு ஏற்ப முதலீடு செய்யலாம். எப்படியிருப்பினும் இது ஓய்வுகாலத்திற்கு ஏற்ற ஒரு நல்ல திட்டம் என்பதை மறுப்பதற்கில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!